PUBLISHED ON : மே 15, 2026 12:47 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், இந்த பக்கம் அந்த பக்கம் சாயாமல், தராசு போல நடுநிலையோடு சபாநாயகர் செயல்பட வேண்டும். எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் பேச வாய்ப்பு கொடுக்கிறாரோ, அந்த அளவிற்கு அரசு சிறப்பாக செயல்படும். மக்களின் பிரச்னைகளை எடுத்து வைப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. அதற்காக எதிர்க்கட்சிகள் பேச முழுமையாக நேரம் ஒதுக்கி தர வேண்டும்.
டவுட் தனபாலு: சபாநாயகர், தராசு மாதிரி நடுநிலையா இருக்கணும்னு இப்ப சொல்றீங்களே... நீங்க 2017ல ஆட்சியில இருந்தப்போ, சபாநாயகர் மூலமா 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செஞ்சு, தராசு முள்ளை உங்க பக்கம் திருப்புனீங்களே, அதுதான் நீங்க சொல்ற 'நடுநிலை'யான்னு, 'டவுட்' வருதே!
த.வெ.க., பொதுச் செயலரும், அமைச்சருமான ஆனந்த்: தமிழக மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்ற முதல்வர் விஜய், நமக்கு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார். எனவே, கட்சியினர் தங்கள் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக, மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சாலையிலோ, மக்கள் கூடும் இடங்களிலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, பேனர்கள், பதாகைகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது. மக்களுக்கு இடையூறாக, எவ்வித கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. மீறினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: கட்சித் தலைமை போடும் உத்தரவு, 'வாட்ஸாப் ஸ்டேட்டஸோடு' முடிஞ்சிடுமா அல்லது நிஜமாகவே கீழ்மட்ட நிர்வாகிகளின் காதுகளுக்கு எட்டுமான்னு, 'டவுட்' வருதே!
அ.ம.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., காமராஜ்: சில நாட்களுக்கு முன்பு கசப்பான சம்பவங்கள் நடந்தன; அது, அன்றைக்கு இருந்த அரசியல் சூழல் காரணமாக நடந்தது. இப்போது சொல்கிறேன், முதல்வர் விஜய் தான் சிறப் பான ஆட்சியை கொடுக்க முடியும். தமிழக இளைஞர்கள் விஜயை நம்புகின்றனர்; நாங்களும் அவரை நம்புகிறோம். இந்த அரசு தொடர்வதற்கு என் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.
டவுட் தனபாலு: அன்றைக்கு இருந்த அரசியல் சூழல் காரணம்னு சொல்றீங்களே... அப்படின்னா, அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டுக்கு 'வானிலை அறிக்கை' மாதிரி தினமும் அப்டேட் கொடுக்கணுமான்னு, 'டவுட்' வருது. அதேசமயம், அரசியல் சூழ்நிலை மாறும்போது கருத்தும் மாறுதுன்னா, கொள்கைங்கிறது அறிக்கையில மட்டும்தான் இருக்குமோன்னு, 'டவுட்' வருதே!
