PUBLISHED ON : மே 25, 2026 12:30 AM

தமிழக முன்னாள் சபாநாயகர் தனபால்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், எனக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதனால் மனம் நொந்து, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி விட்டேன். என் மகன், லோகேஷ் தமிழ்ச்செல்வன், விஜயை நம்பி சென்றார்; தற்போது அமைச்சராகி விட்டார். தவறு செய்த அ.தி.மு.க.,வினர், இப்போது அதன் பலனை அனுபவிக்கின்றனர். எல்லாரையும் புறக்கணித்தனர். இன்று, அவர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
டவுட் தனபாலு: பட்டியல் சமூகத்தை சேர்ந்த உங்களை, கட்சியினர் புறக்கணிக்கிறாங்கன்னு எழுந்த புகார்களை அடுத்து தான், உங்களை சபாநாயகராக்கி ஜெயலலிதா அழகு பார்த்தாங்க... செங்கோட்டையன் வழியில் நீங்களும் த.வெ.க.,வுக்கு போயிருந்தால், தற்போதைய அரசில் உயர்ந்த பதவிக்கு போயிருப்பீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., கட்சியை சேர்ந்த தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன்: காமராஜரும், கக்கனும் அமர்ந்திருந்த அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற்றுள்ளோம். அவர்கள் வழியில், நாங்கள் நேர்மையாக பணியாற்றுவோம். காங்., தொண்டர்களுக்கு கடமையாற்றும் வாய்ப்பை கொடுத்த சோனியா, ராகுல், கார்கேவுக்கு நன்றி.
டவுட் தனபாலு: கடந்த 59 வருஷங்களா தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வர பல்லக்கு துாக்கிட்டு இருந்த உங்களை, இன்றைக்கு விஜய் பல்லக்கில் ஏத்தியிருக்காரு... 'கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்ப மாட்டாங்க'ன்னு தேர்தலுக்கு முன்பு முழங்கிய ஸ்டாலின், பழனிசாமிக்கு விஜய் சரியான பாடம் கத்து கொடுத்துட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., கட்சியை சேர்ந்த, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்: 'தமிழகத்திற்கு காவிரியில், ஆண்டுக்கு 177 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும்' என, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். அதே நேரம், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு உரிமை இல்லை.
டவுட் தனபாலு: உங்க மாநிலத்தில் அதிகமா மழை பெய்து அணைகள் நிரம்பி வழியும்போது, திறந்துவிடும் உபரி நீரை எல்லாம் கணக்கில் காட்டி, '177 டி.எம்.சி.,யை திறந்து விட்டுட்டோம்'னு சொல்றீங்களே... அது இருக்கட்டும்... 59 வருஷங்களா, தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாத உங்க கட்சிக்கு, த.வெ.க., அரசில் விஜய் பங்கு குடுத்திருக்காரே... அதுக்கு நீங்க காட்டும் நன்றிக்கடன் இதுதானா என்ற, 'டவுட்'தான் வருது!
