PUBLISHED ON : செப் 14, 2026 12:31 AM

காங்கிரசைச் சேர்ந்த, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: வரும் 2029 லோக்சபா தேர்தலில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்; இதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரவர் சார்ந்த கட்சிகளின் தலைவர்களை, பிரதமர் வேட்பாளராக கட்சியினர் கூறுவதில் தவறில்லை. ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என நான் பகிரங்கமாக கூறுகிறேன். தமிழக முதல்வர் விஜயும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
டவுட் தனபாலு: இப்பவே, த.வெ.க.,வினர் தன்னை பிரதமர் வேட்பாளர்னு சொல்றதை கண்டிச்சு தடுக்காத விஜய், ராகுலை பிரதமர் வேட்பாளரா அறிவிப்பார்னு எந்த நம்பிக்கையில் காத்துட்டு இருக்கீங்க என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில், அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 'த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைத்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். அதில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ விருப்பம் தெரிவித்தார்; அதை, முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார்.
டவுட் தனபாலு: த.வெ.க., நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த பொதுக்கூட்டங்கள்ல தலைவர்கள், குறிப்பா வைகோ இவ்வளவு நேரம் தான் பேசணும்னு முன்கூட்டியே நிபந்தனை விதிச்சிடுங்க... இல்லாட்டி, முதல்வர் விஜயை மேடையில வச்சுக்கிட்டே, கிரேக்கர்கள் வரலாற்றில் துவங்கி, சேக்கிழாரின் பெரிய புராணம் வரைக்கும் வைகோ நீட்டி முழக்கிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையம், 'கள்ளச்சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளது. அந்த பரிந்துரைகள் மீது, த.வெ.க., அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
டவுட் தனபாலு: இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் பரிந்துரைகளின் மீது, எந்த அரசாவது நடவடிக்கை எடுத்திருக்கா... அவ்வளவு ஏன்... அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியான வழக்கில், அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட எந்த அதிகாரிகள் மீதும், கடந்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கலையே... அதே கதை தான் இந்த அறிக்கைக்கும் நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
