/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரூ.200 கோடி சொத்துக்கள் தானம் சமண துறவியரான தொழிலதிபர் குடும்பம்
/
ரூ.200 கோடி சொத்துக்கள் தானம் சமண துறவியரான தொழிலதிபர் குடும்பம்
ரூ.200 கோடி சொத்துக்கள் தானம் சமண துறவியரான தொழிலதிபர் குடும்பம்
ரூ.200 கோடி சொத்துக்கள் தானம் சமண துறவியரான தொழிலதிபர் குடும்பம்
ADDED : ஏப் 16, 2024 12:00 AM

சூரத் :குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி, தன் 200 கோடி ரூபாய் சொத்துக்களை தானாமாக வழங்கிய நிலையில், அவரும், அவரது மனைவியும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
குஜராத்தின் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பாவேஷ் பண்டாரி. கட்டுமான தொழில் செய்து வரும் இவர் பல நுாறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.
வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவரது 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன், கடந்த 2022ல் சமண துறவியராக துறவறம் மேற்கொண்டனர்.
இதனால் ஈர்க்கப்பட்ட பாவேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
முன்னதாக, தங்களுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் சொத்துக்கள் முழுவதையும் தானமாக அளித்தனர். அவர்களிடம் இருந்த, 'மொபைல் போன்' உட்பட சராசரி மனிதர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் கடந்த பிப்., மாதம் தானமாக வழங்கினர்.
இந்நிலையில், வரும் 22ம் தேதி நடக்கும் நிகழ்வில் இருவரும் சமண துறவியராக துறவறம் மேற்கொள்கின்றனர்.
அதன் பின், இரு வெள்ளை ஆடைகளை மட்டுமே இவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். தானம் பெற்று சாப்பிட ஒரு பாத்திரமும், ரஜோஹரன் எனப்படும் வெள்ளை நிற துடைப்பமும் மட்டுமே இவர்களின் சொத்தாக இருக்கும்.
சமண துறவியர் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க, அவர்கள் அமரும் போது, ரஜோஹரன் பயன்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்த பின் அமருவது வழக்கம்.
நாடு முழுதும் வெறும் காலில் நடைபயணமாக சென்று, தானம் பெற்று வாழ்க்கை வாழ்வதே சமண துறவியரின் வழக்கம்.
பாவேஷ் பண்டாரியை போலவே குஜராத்தைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை தானம் வழங்கிவிட்டு சமண துறவிகளான நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.

