/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஜப்பான், சீன பெண்களை மணந்த தமிழக வாலிபர்கள்
/
ஜப்பான், சீன பெண்களை மணந்த தமிழக வாலிபர்கள்
UPDATED : செப் 16, 2024 06:46 AM
ADDED : செப் 16, 2024 01:30 AM

திருவள்ளூர்: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில், குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்கிறார். இவருக்கு ராஜகனி என்ற மனைவியும், மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களின் மகன் ராஜேஷ், பொறியியல் பட்டம் பெற்று ஜப்பானில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும், ஜப்பானை சேர்ந்த யூகி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து, இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் எட்டு மாதங்களுக்கு முன் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் தமிழ் கலாசாரம் மற்றும் ஹிந்து முறைப்படி திருமழிசையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, மணப்பெண்ணின் உறவினர்களான ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள், தமிழ் கலாசாரப்படி வேஷ்டி, சேலை அணிந்து இருந்தனர்.
தேனி
தேனி மாவட்டம், அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் அமுதன் - சரவணகுமாரி தம்பதியின் மகன் தருண்ராஜ். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இவர்களில், தருண்ராஜ், சீனாவை பூர்வீகமாக கொண்ட பீட்டர் - பிங்க் தம்பதி மகள் ஸ்னோ ஜூவை காதலித்தார்.
அதை தொடர்ந்து, தருண்ராஜ் - ஸ்னோ ஜூ திருமணம், தமிழ் பாரம்பரிய முறைப்படி தேனியில் நேற்று நடந்தது. இதில், மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறுகையில், 'தமிழ் பாரம்பரியம், வியக்க வைக்கும் வகையில் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது' என்றனர்.