4 ஆண்டுகளாக டெலிவரி செய்யப்படாத 7 மூட்டை தபால்: போஸ்ட்மேன் 'சஸ்பெண்ட்'
4 ஆண்டுகளாக டெலிவரி செய்யப்படாத 7 மூட்டை தபால்: போஸ்ட்மேன் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 02, 2026 06:28 AM

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கோவை ரோடு, தட்டான் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. வெள்ளகோவில் போஸ்ட்மேனாக, 15 ஆண்டாக பணியாற்றி வருகிறார்.
ஒரு வாரத்துக்கு முன், செந்தில்குமார் வீட்டுக்கு பின் பகுதியில், கவர்கள், கடிதம் அடங்கிய சில மூட்டைகள் கிடப்பதாக, திருப்பூர் தபால் துறைக்கு, மக்கள் புகார் அளித்தனர்.
மாவட்ட தபால் அதிகாரிகள், செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று, பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர்.
இதில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் வெள்ளகோவில் பகுதி மக்களுக்கு வந்த முக்கியமான கடிதம், வங்கி ஏ.டி.எம்., கார்டு, பான் கார்டு, வக்கீல் நோட்டீஸ் என, பலவித கடிதங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின், ஏழு மூட்டையில் இருந்த தபால்களை பறிமுதல் செய்து, வெள்ளகோவில் தபால் நிலைய அலுவலர்கள், போஸ்ட்மேன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த மூட்டைகளை யாரும் எடுத்து விடக்கூடாது என, செந்தில்குமார் தன் வீட்டில், ஐந்து நாய்கள் வளர்த்ததும், தபால் அதிகாரிகள் வீட்டுக்கு சோதனைக்கு வருவதை அறிந்து, பதுக்கி வைத்திருந்த மூட்டைகளில் சிலவற்றை தீயிட்டு எரித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், ''செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடக்கிறது.
''ஆறு மாதமாக அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று, முதல்கட்டமாக தெரியவந்தது. தற்போது, டெலிவரி செய்யப்படாமல் உள்ள தபால்கள் உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
