/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சோள தட்டையில் தயாரித்த கப், பை; புதுச்சேரி சாராய கடைகளில் அறிமுகம்
/
சோள தட்டையில் தயாரித்த கப், பை; புதுச்சேரி சாராய கடைகளில் அறிமுகம்
சோள தட்டையில் தயாரித்த கப், பை; புதுச்சேரி சாராய கடைகளில் அறிமுகம்
சோள தட்டையில் தயாரித்த கப், பை; புதுச்சேரி சாராய கடைகளில் அறிமுகம்
UPDATED : பிப் 10, 2025 06:07 AM
ADDED : பிப் 09, 2025 11:55 PM

புதுச்சேரி; புதுச்சேரியில் பிளாஸ்டிக் பாக்கெட்டிற்கு மாற்றாக, எளிதில் மட்கக்கூடிய, சோள தட்டையால் உருவாக்கப்பட்ட பாக்கெட், கப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடைகள், 230 மதுபான பார்கள் உள்ளன. இங்கு, 180 மி.லி., பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு, 25,000 பாக்கெட் சாராயம் விற்கப்படுகிறது.
பிளாஸ்டிக் தடை
சாராயத்தை குடிக்கும் 'குடி'மகன்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
இவை, வாய்க்கால், ஆறுகள் வாயிலாக கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கின்றன. கால்நடைகளும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை சாப்பிட்டு இறக்கின்றன.
இதனால், புதுச்சேரி சாராயக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்டிற்கு மாற்றாக, சோள தட்டையில் தயாரித்த, எளிதில் மட்கக்கூடிய பாக்கெட் மற்றும் கப், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை அறிவியல் கோளரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கலால் துறை, மதுக்கடை உரிமையாளர்கள் முன்னிலையில், இயற்கையில் மட்கக்கூடிய பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர், செயலர் ரமேஷ் கூறியதாவது:
புதுச்சேரியில், 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள, 15 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு
இதில், மட்காத பிளாஸ்டிக் பொருளால் தயாரிக்கப்பட்ட பாக்கெட் சாராய கவரும் அடங்கும். அதனால், மாற்று ஏற்பாடாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மட்கக்கூடிய பாக்கெட் கவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உறுதியான இந்த கவர், சுற்றுச்சூழலை பாதிக்காது. எளிதில் மட்கி விடும். இத்துடன், இயற்கையில் மட்கக் கூடிய 3 கிலோ பொருட்களை தாங்கும் பை, கப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மதுக்கடைகளில் முற்றிலுமாக பிளாஸ்டிக் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

