/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அங்கன்வாடி மையத்தில் குடியேறிய குடும்பம்; ரேஷன் கடையை பயன்படுத்தும் குழந்தைகள்
/
அங்கன்வாடி மையத்தில் குடியேறிய குடும்பம்; ரேஷன் கடையை பயன்படுத்தும் குழந்தைகள்
அங்கன்வாடி மையத்தில் குடியேறிய குடும்பம்; ரேஷன் கடையை பயன்படுத்தும் குழந்தைகள்
அங்கன்வாடி மையத்தில் குடியேறிய குடும்பம்; ரேஷன் கடையை பயன்படுத்தும் குழந்தைகள்
ADDED : நவ 13, 2024 04:31 AM

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட சென்னல்பட்டி கிராம அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கன்வாடி மையம் சேதமடைந்தது.
போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், அப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை, அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப மறுத்தனர். இதனால், சென்னல்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தின் ஒரு பகுதியில், தற்போது குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமுதம் ரேஷன் கடை, வாரத்தில் சில நாட்கள் மட்டுமே இயங்கும் என்பதால், குழந்தைகள் அங்கு படிப்பதற்கு தடை ஏதும் இல்லை என்று, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், சேதமடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் பழுது பார்க்கப்படாததால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தற்போது அங்கன்வாடி மையத்தில் குடியேறியுள்ளனர். அவர்கள் அங்கேயே ஆடு, மாடுகளை கட்டியும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வைத்தும் உள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: அங்கன்வாடி மையம் மழையில் பழுதாகியும், அதிகாரிகள் யாரும் இன்னும் பார்வையிடவில்லை. இதனால், பஞ்., தலைவர் ஒப்புதலோடு அங்கன்வாடி மையத்தில் ஒரு குடும்பம் குடியேறியுள்ளது.
கிராமத்தில் உள்ள குழந்தைகள் வேறு வழியின்றி, ரேஷன் கடை கட்டடத்தில் செயல்படும், அங்கன்வாடி மையத்திற்கு செல்கின்றன. மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.