UPDATED : ஜன 02, 2025 08:23 PM
ADDED : டிச 29, 2024 11:04 PM

கன்னட நடிகை உமாஸ்ரீயை, ஒரு நடிகையாக, அரசியல்வாதியாக மட்டுமே உலகுக்கு தெரியும். ஆனால் அவர், இந்த இடத்தை அடைய எவ்வளவோ சவால்களை சந்தித்தார். பல சோதனைகளை கடந்த சாதனை பெண்மணி.
கன்னட திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை உமாஸ்ரீ. படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த இவர், தன் வாழ்க்கையில் கஷ்டங்களை அதிகமாக அனுபவித்தவர். இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் உமாஸ்ரீயின் கணவர், இவரை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து, விலகி சென்றார்.
அதன்பின் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு, உமாஸ்ரீயின் தோள் மீது விழுந்தது. குடும்பத்தை காப்பாற்ற பணம் தேவைப்பட்டதால், நடிப்பு தொழிலை தேர்வு செய்து கொண்டார். முதலில் நாடகங்களில் நடித்தார். அதன்பின் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
தன் நடிப்பு திறனால், மளமளவென வளர்ந்தார். இதுவரை 150 படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளை பெற்றுள்ளார். 2008ல் திரைக்கு வந்த 'குலாபி டாக்கீஸ்' திரைப்படத்தில் நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது. கன்னட திரையுலகில் இவருக்கு என, தனியிடம் உள்ளது. தற்போது சின்னத்திரையிலும் கலக்குகிறார்.
இதற்கிடையே அரசியலில் ஈடுபட்ட இவர், காங்கிரசில் இணைந்தார். இவரது பணியை அடையாளம் கண்டு, தெர்தாள் தொகுதியில் இவருக்கு மேலிடம் சீட் கொடுத்தது.
2013ல் காங்கிரஸ் அரசில், முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள், கன்னடம் மற்றும் கலாசாரம் என, இரண்டு துறைகளை நிர்வகித்தார். 2023ல் சீட் கிடைத்தது என்றாலும், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். தற்போது இவர் எம்.எல்.சி.,யாக உள்ளார்.
சட்டசபை, மேல்சபை இரண்டு சபைகளிலும் சிறப்பாக விவாதங்களில் பங்கேற்றார். பொதுவாக ஒரு துறையில் ஜொலிப்பதே கஷ்டமான விஷயமாகும். ஆனால் உமாஸ்ரீ, திரையுலகம், அரசியல் என, இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்கிறார். மேலிட அளவில் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளார். இந்த இடத்தை அடைய, அவர் பல சவால்களை கடந்து வந்துள்ளார்.
தற்போது உமாஸ்ரீயின் மூத்த மகள் காயத்ரி, 'மாஸ்டர் ஆப் டென்டல் சர்ஜரி' படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் விஜயகுமார் வக்கீல் படிப்பை முடித்துள்ளார். இவர், ஆஸ்திரேலியாவில் படித்தவர்.
பரபரப்பான அரசியல் வாதி, நடிகையாக இருந்தாலும், சமூக சேவைகளில் உமாஸ்ரீ ஈடுபட்டுள்ளார். மக்களின் பிரச்னைகளை உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்கிறார். இவரது வாழ்க்கை, தோல்வியில் துவண்டு கிடக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது
- நமது நிருபர் -.

