UPDATED : ஜன 17, 2025 04:26 PM
ADDED : ஜன 17, 2025 07:23 AM

பெங்களூரை சேர்ந்தவர் திவ்யா தடிகோல் சுப்பராஜ், 29. துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆன இவர், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த 65 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார்.
பத்து மீட்டர் துாரம் குறிவைத்து சுடும் போட்டியில் வெற்றி பெற்றார்.
கடந்த 2023ல் அசர்பைஜானில் நடந்த சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
தனது பயணம் குறித்து திவ்யாவின் உரை:
ஆரம்பத்தில் துப்பாக்கி சுடுதலில் எனக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். கடந்த 2016 ல் ஏற்பட்ட ஒரு காயத்தால் கூடைப்பந்து போட்டியை விலக்கி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து எனது சகோதரர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட, எனக்கு ஊக்கம் அளித்தார்.
மஞ்சுநாத் படகர் என்ற பயிற்சியாளரின் கீழ் பயிற்சியை துவங்கினேன். அசர்பைஜானில் நடந்த போட்டியில் தங்கம் வென்று அசத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.
என் குடும்பம் எனக்கு ஆதரவாக உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சியை துவங்கிய போது என்னிடம் சொந்தமாக துப்பாக்கி இல்லை. துப்பாக்கி சங்கத்தின் ஆயுதத்தை பயன்படுத்தினேன்.
இப்போது சொந்த துப்பாக்கி, வெடி மருந்துகளை பயன்படுத்தி வருகிறேன். அதற்காக உரிமம் என்னிடம் உள்ளது. தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
முதல் ஐந்து இடத்திற்குள் எனது பெயர் எப்போதும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் - -
