கோவிலில் சாட்டையடி வாங்கி 'மாஜி' அமைச்சர் நேர்த்திக்கடன்
கோவிலில் சாட்டையடி வாங்கி 'மாஜி' அமைச்சர் நேர்த்திக்கடன்
UPDATED : நவ 06, 2024 06:31 AM
ADDED : நவ 06, 2024 02:13 AM

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
கோவில் பூசாரிகள் பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், பூசாரி பூச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், விரதம் இருக்கும் பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையடி வாங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
அதன்படி, வழக்கம்போல் நேற்று காலை நடந்த சாட்டையடி நிகழ்ச்சியில், ராசிபுரம் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சருமான சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவரும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையொட்டி, அ.தி.மு.க.,வினர் கோவில் அருகே குவிந்ததால், போலீசார் கூட்டம் சேராமல் அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
