/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
விபத்தில் காதலி உயிரிழந்த சோகம் பஸ் முன் பாய்ந்து காதலனும் பலி
/
விபத்தில் காதலி உயிரிழந்த சோகம் பஸ் முன் பாய்ந்து காதலனும் பலி
விபத்தில் காதலி உயிரிழந்த சோகம் பஸ் முன் பாய்ந்து காதலனும் பலி
விபத்தில் காதலி உயிரிழந்த சோகம் பஸ் முன் பாய்ந்து காதலனும் பலி
UPDATED : அக் 06, 2024 04:13 PM
ADDED : அக் 06, 2024 07:30 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அருகே விபத்தில் கல்லுாரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில், துக்கம் தாளாமல் அவரின் காதலனும் பஸ் முன் பாய்ந்து உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன், 19. கொளப்பாக்கத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வந்தார்.
அதே கல்லுாரியில், மதுராந்தகம் அடுத்த கூடலுாரை சேர்ந்த சபரீனாவும், 20, படித்து வந்தார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை இருவரும், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்துள்ளனர். முற்பகல், 11:30 மணியளவில், மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி ஸ்கூட்டரில் சென்றனர்.
பூஞ்சேரி அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் சென்ற போது, சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற புதுச்சேரி அரசு பஸ் ஸ்கூட்டரின் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். சபரீனா மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. யோகேஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்தவர்கள், சபரீனாவை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்த யோகேஸ்வரன், சபரீனாவின் தந்தைக்கு அழுதபடி மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். துக்கம் தாளாமல் மருத்துவமனையில் கதறி அழுதவர், இ.சி.ஆர்., சாலை நோக்கி ஓடினார்.மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் வழிமறித்தும் நிற்காமல் ஓடிய யோகேஸ்வரன், புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன் பாய்ந்தார்.
இதில், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி, 200 அடி துாரம் இழுத்து செல்லப்பட்டு, உடல் இரண்டு துண்டுகளாகி உயிரிழந்தார். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக, புதுச்சேரி அரசு பஸ் ஓட்டுனர்களான பரமசிவம், ஆறுமுகம் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.
இரண்டு பஸ்களும், மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இச்சம்பவத்தால், மாமல்லபுரம் அருகே இ.சி.ஆர்., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.