மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம்: நோயாளிக்கு பொருத்தி சாதனை
மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம்: நோயாளிக்கு பொருத்தி சாதனை
ADDED : செப் 05, 2026 05:39 AM

பெரம்பலுார்: மூளைச்சாவு அடைந்த சிவகங்கை வாலிபரின் இதயத்தை புதுச்சேரி நோயாளிக்கு பொருத்தி, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது வாலிபர், சாலை விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 43 வயது பயனாளிக்கு, அந்த இதயத்தை பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
எனவே, மதுரையிலிருந்து, 178 கி.மீ., தொலைவில் உள்ள சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி ஐ.ஜி., பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, மதுரை - திருச்சி - பெரம்பலுார் வழித்தடத்தில் போலீசார் போக்குவரத்தைச் சீரமைத்தனர்.
செப்., 2 காலை, 10:28 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்ட இதயம், ஒரு மணி நேரம், 54 நிமிடங்களில், மதியம், 12:22 மணிக்கு, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
அதன்பின், இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையில், நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மாற்று இதயம் பொருத்தப்பட்ட நோயாளி நலமாக உள்ளார்.
