ADDED : ஜூலை 08, 2026 04:43 AM

திருப்புவனம்: தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓட்டை உடசலுடன் பயணிப்பதால் பயணிகள் தினமும் ஒரு வித பீதியில் பயணிக்கும் நிலையே தொடர்கிறது .இப்படிதான் சிவங்கை மாவட்டம் எஸ்.வாகைகுளத்தில் இருந்து மதுரை சென்ற பஸ்சின் நடுவில் உள்ள ஓட்டையில் சிக்கிய சிறுவனை சக பயணிகள் மீட்டனர்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயங்குகின்றன. அவ்வப்போது பிரேக்டவுன் ஆகி பாதியில் நிற்பது, பஸ் கூரை காற்றில் பெயர்ந்து ரோடுகளில் விழுவது ,படிக்கட்டுகள் பஸ்கள் ஓடும்போது கீழே விழுவது ,சேதமான இருக்கைகள் ,எரியாத விளக்குகள் என்பன போன்றவை அன்றாட நிகழ்வாக உள்ளன.
இதன் மூலம் பயணிகள் தினமும் ஒரு வித பீதியில் பயணிக்கும் நிலையே தொடர்கிறது. இதை நிரூபிக்கும் வகையில் திருப்புவனத்திலிருந்து மதுரை வந்த அரசு பஸ்சில் நடுவில் இருந்த ஓட்டை பயணிகளை பதற வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சுற்றிய கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புற பள்ளி மாணவர்கள், விவசாயிகள் பலரும் இதை நம்பியே திருப்புவனம், மதுரை சென்று வருகின்றனர்.
இது போன்று எஸ்.வாகைகுளத்தில் இருந்து டி.என்.58 எண் 2196 அரசு பஸ் திருப்புவனம் வழியாக நேற்று முன்தினம் மாலை 6:10 மணிக்கு மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டது. பாதி வழியில் வந்த போது பஸ்சின் மையப்பகுதியில் நடுவே இருந்த ஓட்டை மேல் இருந்த பலகையை மிதித்த பள்ளி மாணவர் ஓட்டை வழியாக கீழே விழ, இதை கவனித்த சக பயணிகள் சுதாரித்து அவரை பிடித்து கொண்டனர்.
இதனால் மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது சக பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஓட்டையை முறையாக மூடாமல் அப்படியே பஸ்சை மதுரை வரை ஓட்டி சென்றனர். இது போன்ற பஸ்களை ஓரம் கட்டி புதிய பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் முன் வர வேண்டும்.
