பனை மரத்தில் ஏற படிக்கட்டுகள்; துாத்துக்குடி தொழிலாளி அசத்தல்
பனை மரத்தில் ஏற படிக்கட்டுகள்; துாத்துக்குடி தொழிலாளி அசத்தல்
ADDED : ஜூலை 07, 2026 01:06 AM

துாத்துக்குடி: பனை மரத்தில் ஏறுவதற்கு வசதியாக, தொழிலாளி ஒருவர், படிக்கட்டு அமைத்து அசத்தி வருகிறார்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், சாலைப்புதுார் கிராமத்தை சேர்ந்த தினகராஜ், 35. இவரது குடும்பத்தினர் பல தலைமுறையாக பனை தொழில் செய்து வந்த நிலையில், தற்போது, பனை ஏறுவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், தினகராஜ் தன் வீட்டின் அருகே, 55 அடி உயரம் உள்ள பனை மரத்தில், 60,000 ரூபாய் செலவு செய்து வீடுகளில் அமைக்கப்படும் படிக்கட்டுகள் போல, இரும்பு கம்பியால் வளைவு போல, படிக்கட்டு அமைத்து உள்ளார். இது அப்பகுதியில் உள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தினகராஜ் கூறுகையில், ''பனைமரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு படிக்கட்டுகள் வழியாக, சிறுவர்கள் முதல் பெண்கள் வரை யார் வேண்டுமானாலும், எந்த பயமும் இல்லாமல், பனை மரத்தின் உச்சி வரை சென்று, பதநீர் இறக்க முடியும். பனை மரம் ஏறுவதற்கு, தற்போது, போதிய தொழிலாளர்கள் இல்லாததால், இந்த படிக்கட்டுகளை பயன்படுத்தி, பனை மரத்தில் எளிதாக ஏறிவிடலாம்,'' என்றார்.
