/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு
/
குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு
குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு
குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஆக 19, 2025 07:01 AM

கோவை: தொண்டையில் மிட்டாய் சிக்கி மயக்கமடைந்த குழந்தைக்கு, முதலுதவி செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றினர்.
மேட்டுப்பாளையம் - போத்தனுார் இடையே, மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காரமடையை சேர்ந்த செல்வலட்சுமி என்பவர், தனது இரண்டு வயது குழந்தை தேவ் ஆதிரனுடன் காரமடையில் இருந்து, போத்தனுாருக்கு பயணித்தார்.
குழந்தைக்கு அவர் மிட்டாய் கொடுத்துள்ளார். மிட்டாய் குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதையடுத்து குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது மட்டுமல்லாமல், குழந்தை மயக்க நிலைக்கும் சென்றது.
பதட்டமடைந்த செல்வலட்சுமி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். தகவல் அறிந்து வந்த, ரயில்வே பாதுகாப்பு படை போத்தனுார் இன்ஸ்பெக்டர் சுனில்குமார், ஏ.எஸ்.ஐ., சஜினி ஆகியோர், குழந்தையை தலைகீழாக கவிழ்த்து, முதுகில் தட்டினர்.
இதில், தொண்டையில் சிக்கியிருந்த மிட்டாய் வெளியில் வந்து விழுந்தது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. ரயில் கோவை வந்ததும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தக்க சமயத்தில் செயல் பட்டு, குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை, தாய் செல்வலட்சுமி கையெடுத்து கும்பிட்டார். பயணிகள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.