UPDATED : ஜன 02, 2025 08:19 PM
ADDED : ஜன 02, 2025 06:18 AM

மைசூரு: மைசூரின், கே.ஆர்.நகர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷ். இவர் தன் பண்ணை வீட்டில் பெண் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். இதற்கு 'சின்டு' என, என பெயர் சூட்டினார். இவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போன்று இருந்தது.
சா.ரா.மகேஷ் தன் மகளை போன்றே, சின்டு மீது பாசம் காட்டினார். இவரது குடும்பத்தினருக்கும் செல்ல பிள்ளையாக இருந்தது. வீட்டின் அனைத்து இடங்களுக்கும், சுதந்திரமாக செல்லும்; விளையாடும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சின்டு உயிரிழந்தது. அப்போது கட்சித் தலைவர் குமாரசாமியுடன், சா.ரா.மகேஷ் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். சின்டு இறந்த தகவலறிந்து, சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசரமாக ஊர் திரும்பினார். அதன் உடலை கண்டு கதறி அழுதார்.
தன் தோட்டத்தில் புதைத்ததுடன், சிலையும் அமைத்தார். ஆண்டுதோறும் சின்டு இறந்த நாளில், தன் வீட்டிலேயே நினைவுதினம் அனுஷ்டிக்கிறார். நேற்று ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நிகழ்ச்சி நடத்தினார். இதில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
மகளை போன்று வளர்த்த குரங்கின் 5வது ஆண்டு நினைவு தினத்தை, ம.ஜ.த., --- எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷ் அனுஷ்டித்தார்.
