UPDATED : ஆக 28, 2026 02:28 PM
ADDED : ஆக 27, 2026 07:22 PM

- நமது நிருபர் -:
மைசூரு ஜே.பி., நகரை சேர்ந்தவர்கள் மஞ்சுநாத் - தர்ஷினி தம்பதி. இவர்களுக்கு அனகா, ரிஷிதா என இரு மகள்கள். இவர்களில் ரிஷிதா, 17, பிறக்கும் போதே, 80 சதவீத செவி கேட்கும் திறனை இழந்தவர். தற்போது ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பி.யு., கல்லுாரியில் படிக்கிறார்.
இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பொழுதுபோக்காக தடகளத்தில் பங்கேற்றார். இதையடுத்து தன் கவனத்தை தடகளத்தின், 'ஸ்பிரின்ட்ஸ்' பிரிவில் செலுத்தினார். பல மணி நேர பயிற்சி, அயராத உழைப்பு, அசைக்க முடியாத மன உறுதியின் மூலம், இந்திய தடகள துறையில் படிப்படியாக உயர்ந்தார்.
இவர், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 13.04 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அதுபோல, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 24.81 வினாடிகள் கடந்து தேசிய சாதனை படைத்து, இரண்டிலும் தேசிய சாம்பியன் ஆனார்.
இது, அவரை நாட்டின் தலை சிறந்த காது கேளாத ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவராக ஆக்கின. இதன் மூலம், அக்., 3 முதல், 10ம் தேதி வரை நடக்க உள்ள, 2026 ஆசிய காது கேளாதோர் விளையாட்டு போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
தன் வெற்றி குறித்து ரிஷிதா கூறியதாவது:
நான் பிறக்கும்போதே செவித்திறன் குறைபாடுடன் பிறந்தேன். ஆனால், கனவுகள் இல்லாமல், ஒரு போதும் பிறக்கவில்லை. என் கனவுகளை நம்பி, ஒவ்வொரு சவாலிலும், எனக்கு துணையாக நின்ற என் தாய், தந்தைக்கு நன்றி. 2023ல் செயின்ட் லாரன்ஸ் சர்வதேச பள்ளி உடற்கல்வி துறை தலைவரான ரதேஷிடம், பயிற்சி பெற துவங்கியபோது, என் தொழில் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனை ஏற்பட்டது.
என் இயல்பான திறமையையும், உறுதியையும் உணர்ந்த ரமேஷ், வேக மேம்பாடு, நுட்பங்கள், வலிமை, மன உறுதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பயிற்சி அளித்தார். அதன்படி செயல்பட்டதால், இப்போது ஸ்பிரின்ட்ஸ் போட்டிகளில் ஜொலிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
