கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டாக போராடும் மனைவி
கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு 54 ஆண்டாக போராடும் மனைவி
UPDATED : ஆக 18, 2026 03:54 AM
ADDED : ஆக 18, 2026 02:36 AM

துாத்துக்குடி: அரசு பணியில் இருந்த போது உயிரிழந்த கணவரின் இறப்புக்கு நிவாரணம் கேட்டு, உச்சிமகாளி என்ற, 85 வயது மூதாட்டி, 54 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக, வேலை பார்த்தார். கடந்த, 1972 அக்., 2ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்ற, கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டபோது, குப்புசாமி உட்பட மூவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
அவரது இறப்புக்கு, நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில், உச்சிமகாளி தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இதுவரை எந்த பலனும் இல்லை.
நேற்று, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், உச்சிமகாளி அளித்த மனுவில், 'என் கணவர் இறப்புக்கு நிவாரணம் கேட்டு, 54 ஆண்டுகளாக அரசாங்கத்திடம் மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை.
'கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வறுமையில் வாழும் எனக்கு, கணவரின் பணிக்கால இறப்புக்கான உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
