ADDED : ஜூன் 02, 2026 02:03 AM

பெங்களூரு: தன்னை தாக்கிய புலியை கூச்சலிட்டு விரட்டிய நபர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில், பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இதையொட்டி கோபாலசுவாமி மலையடிவாரத்தில் குனகல்லி கிராமத்தில் வசிப்பவர் நுாராளு, 52; ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் மதியம், இங்குள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புலி, நுாராளு மீது பாய்ந்து தாக்கியது. புலி தாக்கியும் அஞ்சாத அவர், பெருங்குரலில் கூச்சல் போட்டார். அவரது காட்டு கூச்சலை தாங்க முடியாமல், புலி அங்கிருந்து ஓடியது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், லேசான காயமடைந்த நுாராளுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வனத்துறை அதிகாரி மல்லேஷ் கூறுகையில், ''நுாராளுவை புலி தாக்கியும், அவர் அஞ்சாமல் கத்தி கூச்சலிட்டு, புலியை விரட்டியுள்ளார். லேசான காயமடைந்து சிகிச்சை பெறுகிறார். இப்பகுதியில் சுற்றி திரியும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்போம். கிராமத்தினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தனியாக நடமாடுவதை தவிர்ப்பது நல்லது,'' என்றார்.
