/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தெரியவில்லை பார்வை...தெரிகிறது ஒளிமயமான எதிர்காலம்: ஓட்ட பந்தயத்தில் அசத்தும் ரக் ஷிதா ராஜூ
/
தெரியவில்லை பார்வை...தெரிகிறது ஒளிமயமான எதிர்காலம்: ஓட்ட பந்தயத்தில் அசத்தும் ரக் ஷிதா ராஜூ
தெரியவில்லை பார்வை...தெரிகிறது ஒளிமயமான எதிர்காலம்: ஓட்ட பந்தயத்தில் அசத்தும் ரக் ஷிதா ராஜூ
தெரியவில்லை பார்வை...தெரிகிறது ஒளிமயமான எதிர்காலம்: ஓட்ட பந்தயத்தில் அசத்தும் ரக் ஷிதா ராஜூ
UPDATED : அக் 25, 2024 02:48 PM
ADDED : அக் 25, 2024 07:57 AM

வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் மாற்றுத்திறனாளிகள், தங்களது உடல் ஊனத்தை பற்றி கவலைப்படாமல், தங்கள் வெற்றி பயணத்தை பற்றி மட்டுமே யோசிப்பர். இவர்களில் ஒருவரான ஓட்டப்பந்தய வீராங்கனையை பற்றி பார்க்கலாம்.
சிக்கமகளூரின் பலு குட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரக் ஷிதா ராஜு, 22. பிறவியிலேயே கண் பார்வையை இழந்தவர். பிறந்த சிறிது நாட்களில் பெற்றோரும் மரணம் அடைந்தனர். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.
சிக்கமகளூரு டவுனில் உள்ள ஆஷா கிரண் பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.
அங்கு படித்த சவுமியா என்பவர் மூலம் ஓட்டப்பந்தயத்தில் ரக் ஷிதா ராஜுவுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
தீவிர பயிற்சி
பின், ஓட்டப்பந்தய பயிற்சியாளரான பாலகிருஷ்ணா என்பவரின் அறிமுகம், ரக் ஷிதாவுக்கு கிடைத்தது. ரக் ஷிதாவின் திறமையை பார்த்து அவருக்கு பாலகிருஷ்ணா தீவிர பயிற்சி அளித்தார்.
பள்ளி, மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் சாதித்ததால், 2017ல் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ஆனால் பாஸ்போர்ட் பிரச்னையால், அவரால் விளையாட்டில் பங்கேற்க செல்ல முடியவில்லை.
இருந்தாலும் 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். 2019ல் ஸ்விட்சர்லாந்தின் நாட்வில்லில் நடந்த உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 800, 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று அனைவரையும் வியக்க வைத்தார்.
துபாயில் 2021ல் நடந்த உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் 1,500 மீட்டரில் வெண்கல பதக்கம் வென்றார். 2022ல் ஹாங் சோ ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்ற, இந்திய அணியில் இடம் பெற்றார்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் டி 11 பிரிவில், 21.45 வினாடிகளில் துாரத்தை கடந்து, தங்கம் வென்று மேலும் ஒரு முறை தனது திறமையை வெளி உலகத்திற்கு காண்பித்தார்.
வழிகாட்டி
தனது ஓட்டப்பந்தய பயணம் பற்றி ரக் ஷிதா கூறுகையில், ''எனது உயர்வான இந்த நிலைக்கு பயிற்சியாளரும், வழிகாட்டியான பாலகிருஷ்ணா தான் காரணம்.
''எனக்கு பயிற்சி, போட்டி பயண செலவுக்காக 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.
ஓட்டப்பந்தயத்தில் நான் பங்கேற்ற போது எனது உறவினர்கள் என்னை கேலி செய்தனர். ஆனால் எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து விலகி செல்வதே எனது ஒரே குறிக்கோள்.
''பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பயணம் சவால்களால் நிரம்பியது.
''பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தால் பல்வேறு நகரங்கள், மாநிலங்களுக்கு ரயிலில் பயணம் செய்யலாம் என்பதை சிறு வயதிலேயே அறிந்திருந்தேன்.
''தற்போது ரயில் பயணத்தின் போது மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.
- நமது நிருபர் -