/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இவர்களிடம் வாழ்த்தை எதிர்பார்க்கலாமா?
/
இவர்களிடம் வாழ்த்தை எதிர்பார்க்கலாமா?
PUBLISHED ON : செப் 10, 2024 12:00 AM

எல்.முருகன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில்விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு, எந்தெந்த வழிகளில் நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ, அத்தனையையும் ஹிந்து மதத்தை எதிர்க்கும் தி.மு.க., செய்து வருகிறது. ஆனால், அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது, ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்' என, பா.ஜ.,வின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குமுறி இருக்கிறார்.
நாமும் நீண்ட காலமாக கவனித்து கொண்டிருக்கிறோம். ஆட்சியில் அமர்ந்துள்ள தி.மு.க., ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காததை, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும், இது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை. அந்த கூட்டணிக் கட்சிகளின் ஒரே நோக்கம், எந்த தகிடுதத்தம் செய்தாவது ஓட்டுகளை வாங்கி, பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்பது தான். யார் வாழ்த்து சொன்னால் என்ன, சொல்லா விட்டால் என்ன என்று தான் இருக்கின்றனர்.
தி.மு.க.,விலேயே இருப்போர் கூட, கழகத்தின் இந்த ஹிந்து மத எதிர்ப்பு உணர்வு பிடிக்காமல் போனாலும்,தவறாமல் கழகம் மற்றும் அதன் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளிப்பர்; கேட்டால், 'கட்சி கட்டுப்பாடு' என, வியாக்கியானம் பேசுவர்.
எனவே, திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் இருந்து ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை எதிர்பார்ப்பதை போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது.
திரும்ப திரும்ப, 'வாழ்த்து சொல்லவில்லை; வாழ்த்து சொல்லவில்லை' என்று அங்கலாய்த்து கொண்டிருக்காதீர்கள்.'பேய்க்கு வாழ்க்கைப் பட்டால், முருங்கை மரம் ஏறித்தான் ஆக வேண்டும்' என்று ஒரு சொலவடை உண்டு.
அந்த வகையில், நாமும் ஓட்டளித்து விட்டு பின்னர் புலம்புவதில் அர்த்தம் இல்லை. இனியாவது, 'எங்கள் மதபண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதவர்களுக்கு எங்கள் ஓட்டுகள் இல்லை' என்ற முடிவுக்கு வந்தால் தான், இவர்கள்திருந்துவர் என்பது மட்டும் நிச்சயம்!
நாணய வெ ளியீட்டுக்கு ராகுலையா அழைக்க முடியும்?
ஆர்.ரபீந்த்,
பெங்களூரில் இருந்து எழுதுகிறார்: 'பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,விற்கும்
உள்ள ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி விட்டது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர்
பழனிசாமி கூறியதாக செய்தி படித்தேன்.
எம்.ஜி.ஆர்., கூட தேர்தலில்
கூட்டணி அமைத்து வெற்றி கண்டார். மற்ற நேரங்களில் மத்திய அரசை
எதிர்த்தாலும், தன் ஆட்சி காலத்தில் மத்திய அரசை அனுசரித்து பல உதவிகளை
பெற்றுத் தந்தார்.
அடுத்து ஜெயலலிதா தன்னை மட்டுமே நம்பி, யாருடைய
தயவும் தேவை இல்லை என, அனைத்து கட்சியையும்ஒதுக்கி விட்டு, தனியாகதேர்தலை
சந்தித்து மிகப் பெரிய வெற்றியும்பெற்று, ஆட்சியில் அமர்ந்தார். அந்த
அரசியல்அறிவு, பழனிசாமிக்கு இப்போது இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால்,பாதி வெற்றியாவது கிடைத்து இருக்கும்.
இதை
யாராலும் மறுக்க முடியுமா? ஜெயலலிதாபோல் தைரியம், துணிச்சல்பழனிசாமிக்கு
இல்லை என்றாலும், இனி கூட்டணிவிஷயத்தில் நன்றாக யோசித்து முடிவெடுத்து
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் கருத்து.
மேலும்
நுாற்றாண்டு விழா நாணயம் வெளியீட்டுக்கு, மத்திய அமைச்சர் வந்து
சிறப்பித்ததையும், பிரதமர் மோடி புகழாரம்சூட்டியதையும் வைத்து
தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் ரகசிய உறவு என கூறுவது சரியில்லை. ஒரு
மாநில அரசு, மத்திய அரசுடன் அனுசரித்து போனால் தான் நல்லது நடக்கும்.
தி.மு.க.,
அரசின் மீது குறை சொல்ல எவ்வளவோ இருக்கிறது. அதை விட்டு விட்டு பா.ஜ.,
கூட்டணியையும் உதறி விட்டு, இப்போது ரகசிய உறவு அது, இது என சொல்வது
சரிதானா?
மேலும், 'ராகுலை ஏன் அழைக்கவில்லை? அவர் ஏன் வரவில்லை?'
என கேட்டது சரிதான். இருந்தாலும் அது அவர்கள் பிரச்னை. யாரை அழைத்தால்
என்ன, அழைக்கவில்லை என்றால்என்ன? ராகுலை அழைப்பதற்கு அது என்ன உதயநிதியின்
கார் ரேஸ் திருவிழாவா? 100 ரூபாய் நாணய வெளியீட்டிற்குயாரை அழைக்க
வேண்டுமோ, அவர்களை தான் அழைக்க வேண்டும்.
'கிடுகிடு' பாதாளத்தை
நோக்கி சென்று கொண்டிருக்கும் அ.தி.மு.க.,வை, வலுவான கூட்டணி அமைத்து,
அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெற வைக்க, இப்போதே பழனிசாமி தயாராக வேண்டும்.
வலுவான கூட்டணி என்றால், அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறியவர்களையோ,
வெளியேற்றப்பட்டவர்களையோ அல்ல என்பதையும், மனதில் கொள்ள வேண்டும்.
குறைந் தபட் ச வெற்றிக்கு கூட்டணி!
அண்ணா
அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகைமாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானின் பேச்சு, கேட்பதற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவரது
கொள்கைகள், திட்டங்கள்நடைமுறைக்கு சாத்தியமா என்றால் சந்தேகம் தான்.
மறைந்த
முன்னாள்முதல்வர் கருணாநிதிவசனம் எழுதிய, மனோகராபடத்தில், கட்டியசங்கிலியை
உடைத்துக்கொண்டு சிவாஜிகணேசன் கர்ஜித்த பாணியில், அந்தக் கால வைகோவின்
இந்தக் கால நகல் போல, தொண்டை நரம்பு புடைக்க, சீமான் முஷ்டி உயர்த்தி
பேசும் ஸ்டைல், இளம் வாக்காளர்களை ஈர்ப்பதில்ஆச்சரியமில்லை.
அதனால்,
கிடைத்து வந்த, 8 சதவீத ஓட்டு வங்கியும், முதல்வரின், 'தமிழ் புதல்வன்'
திட்டத்தால் பறிபோகுமோ என்ற பதற்றம் சீமானிடமே இருக்கிறது.
கூடவே,
விடுதலை புலிகளின் வழித்தோன்றலாக காட்டிக் கொண்டு புலிக்கொடி
வைத்திருப்பதால்தான், நடுநிலை மக்களின்ஓட்டுகள் சீமானுக்கு கிடைப்பதில்லை
என்பதை,யாராவது அவருக்கு எடுத்துக் கூறினரா என்றும் தெரியவில்லை.
வரும்,
2026 சட்டசபைதேர்தலில், போட்டிக்கு நடிகர் விஜய் தயாராகிறார்.
இந்நிலையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானே இன்னும்
எம்.எல்.ஏ.,வாக முடியாத நிலையில், எப்போது, எப்படி, நாம் தமிழர் கட்சி
ஆட்சி அமைக்க போகிறது.
இனியும் தனித்துப் போட்டி என்று ஓட்டுகளை
பிரித்து அரசியல், தேர்தல் களங்களை குழப்பாமல், தகுந்தவர்களுடன் கூட்டணி
அமைத்து, குறைந்தபட்ச வெற்றியைகாட்டுவது தான், கட்சியைஉயிர்ப்புடன்
வைத்திருக்கும். இதை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்,தலைமைக்கு எடுத்துச்
சொல்ல வேண்டும்.