தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தாய்நாட்டை இழிவுபடுத்தாதீர்கள்!

தாய்நாட்டை இழிவுபடுத்தாதீர்கள்!

தாய்நாட்டை இழிவுபடுத்தாதீர்கள்!


PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ.எஸ். ஆதித்யா, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை ஏற்கிறோம், ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் ஒப்பிடும் கடினமான பணியை தேர்தல் கமிஷன் மீது சுமத்துவது முட்டாள்தனமானது' என்று மிகத் தெளிவாக கூறிவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதன்பின்னும், 'எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது, அரசியல் உள்நோக்கத்தையே காட்டுகிறது.

காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வெற்றி பெற்று விட்டால், 'ஜனநாயகம் வென்று விட்டது' என்றும், தோற்று விட்டால், 'ஓட்டு இயந்திரங்களில் பா.ஜ.,வினர் முறைகேடு செய்து விட்டனர்' என்றும் பிதற்றுவர்.

சமீப காலங்களில் நடந்து முடிந்த ஹிமாச்சல் மற்றும் தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு வாயிலாக இவர்கள் வெற்றியடைந்த போது காங்கிரசும், தி.மு.க.,வும் ஏன் வாய் திறக்கவில்லை. இதுபோன்ற இரட்டை வேடதாரிகளை மக்கள் தான் புறக்கணிக்க வேண்டும். சீமான் போன்ற அதிமேதாவிகள், 'வளர்ந்த நாடுகளான ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் ஓட்டுச்சீட்டில் ஓட்டளிக்கும்போது, இங்கு மட்டும் ஏன் முடியாது?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஜெர்மனி நாட்டின் மொத்த ஜனத்தொகையே 8.33 கோடி தான். இது, இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தின் ஜனத்தொகைக்கு சமம். அதுபோல, அமெரிக்காவின் ஜனத்தொகை 33 கோடி, அதாவது உத்தர பிரதேச மாநிலத்தின் ஜனத்தொகையான 25.7 கோடியை விட 7.3 கோடி தான் அதிகம். ஆகவே, மக்கள் தொகை குறைவான நாடுகளோடு இந்தியாவை ஒப்பிடுவது அபத்தமானது.

நம் நாட்டில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள இரண்டு பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பூடான், நேபாளம், பாகிஸ்தான், நமீபியா, கென்யா, பிஜி, போட்ஸ்வானா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா மிக விரைவில் உலகில் நம்பர் 1 நாடாக போகிறது; இது, நம் பாரத நாட்டுக்கே பெருமை. ஆனால், எதிர்க்கட்சிகள் மோடியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குறை கூறியபடியே இருப்பது, தாய்நாட்டையே இழிவுபடுத்தும் செயலாகும்.



ஜனநாயக பெருமைகளை சீரழிக்காதீர்கள்!


பொ.ஜெயராஜ், பாம்பனார்,இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குஜராத்தில், சூரத் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங், வேட்பாளர் மற்றும் காங்., கட்சியின் மாற்று வேட்பாளர் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாலும், சுயேச்சை வேட்பாளர்கள், தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதாலும், பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

அதேபோல், மத்திய பிரதேசத்தில், இந்துார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் கன்டி, தன்வேட்புமனுவை திரும்ப பெற்றதுடன், பா.ஜ.,வில் இணைந்துள்ளார். எனவே, இந்துார் தொகுதியில் பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகி உள்ளது.

உலகின் தலைசிறந்த சில ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இந்திய ஜனநாயகம், சமீபகாலமாக பணநாயக நாடாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஏனென்றால், ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணம், பதவிக்காக கட்சி தாவுவது, கூட்டணி தாவுவது, ஆட்சிகளை மாற்றுவது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.

இதுவரை, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் விலை போய் கொண்டிருந்தனர்; ஆனால், இப்போதைய லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களும் விலை போக ஆரம்பித்துள்ளனர் என்பதைத் தான் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.

இப்படி எல்லாம் நடப்பதை கண்டு வெறுத்து போன மக்கள், ஓட்டளிக்க விரும்பாதது கூட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, இதுபோன்ற நடைமுறைகள் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல. 'பணம் இருந்தால் போதும்... எப்படியாவது வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்து விடலாம்' என்ற நிலை வளர்வது, தேர்தல் நடை முறைகளை சீரழித்து விடுவதுடன், ஜனநாயகத்தையும் கேள்விக் குறியாக்கிவிடும்.

எனவே, அரசியல்,'வியாதி'களே... உங்களின் சுயநலத்திற்காக, நாட்டின் ஜனநாயக பெருமைகளை சீரழிக்காமல், கொஞ்சம் நாகரிகத்துடன் அரசியல் செய்யுங்கள்.



சிந்தித்து பாருங்கள் இளையராஜா!

ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

 இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடிய கீர்த்தனைகளின் அடிப்படையில் தான், கர்நாடக, சினிமா பாடல்களே அமைகின்றன.அந்த மாமேதைகளே, அவர்கள் படைப்புக்கு உரிமை கோராத போது, பாடலுக்கு முழு உரிமை கோர, இசையமைப்பாளருக்கு என்ன தகுதி உள்ளது?

 நம்மைப் படைத்த பிரம்மாவும், பெற்றெடுத்த தாய் தந்தையரும், ராயல்டி கோராத போது, தன்னை இசை பிரம்மா என, இளையராஜா காலரை துாக்கி விடுவதில், ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?

 வாரி வாரி வழங்கும் இயற்கை அன்னை, வான் மழை, சூரிய ஒளி, காய்கனி, தானியங்கள், தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றிற்கு காப்புரிமை கேட்கிறாளா?

 ஒரு சினிமா மற்றும் அதன் பாடல்கள் வெற்றி பெற, பின்னால் இருந்து உழைக்கும் இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், முழு உரிமை கேட்டால் என்ன ஆகும்?

இதையெல்லாம் நினைத்து பார்த்து, இளையராஜா, தன் போக்கை மாற்றி கொள்ள வேண்டும். கூட்டு முயற்சியால் தான், ஒரு பாடல் முழுமை யடைந்து, வெற்றி பெறுகிறது என்பதை அவர் உணர வேண்டும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்ற குறளையும், அகம்பாவத்தில் ஆடினால், அதலபாதாளத்தில் விழுவோம் என்ற கூற்றையும், இளையராஜா திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தார் என்றால், இந்த தவறை செய்ய மாட்டார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us