தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சாட்டை சுழற்ற நேரம் வந்தாச்சு!

சாட்டை சுழற்ற நேரம் வந்தாச்சு!

சாட்டை சுழற்ற நேரம் வந்தாச்சு!


PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சுப்பு, குஜராத்திலிருந்து அனுப்பிய, இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புடின், டுபாக்கூர் செய்தி வெளியிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'நீங்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள். அதை தடுக்கப் போவதில்லை. ஆனால், வெளியிட்ட அந்த செய்திக்கு சரியான, முறையான ஆதாரம் காட்ட வேண்டும்.காட்ட மறுத்தாலோ, காட்ட இயலவில்லை என்றாலோ, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்' என்றார்.

அந்த நடைமுறையை, அந்த அறிவிப்பை நம் நாட்டிலும் முறையாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது. 'தட்டிக் கேட்க ஆளில்லை யானால், தம்பி சண்டப் பிரசண்டன் ஆவான்' என்று ஒரு சொலவடை உண்டு.

அந்த சொலவடையை நிரூபிப்பது போல, இங்குள்ள அரசியல்வாதிகள் பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்து, டுபாக் கூர் செய்திகளை பரப்பி, மக்கள் மனதில் நஞ்சை விதைத்து, மத்திய அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதிலேயே குறியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக இன்றைய டுபாக்கூர் செய்திகள் வருமாறு:

* அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக, 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது. அதற்கு செபி விளக்கம் அளித்திருப்பது வேறு விஷயம்

* விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், விவசாயிகள் தற்கொலை தான் தற்போது இரட்டிப்பாகி உள்ளது' என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்

* தமிழகத்தில் விவசாயிகள் படும் இன்னல்கள், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை, இவர்களது தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன?' என ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ், லோக்சபா ஸ்டார் கேள்விகளின் பட்டியலில் கேட்க திட்டம் தீட்டி இருந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி பயிரிட்டு, அதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விவகாரம் 10 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்தது என்பது உண்மையே.

ஆனால், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் எந்த மூலையிலும் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டு, மாண்டதாக தகவல் இல்லை.

பா.ஜ., அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, சில வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டணி அமைத்து, இங்குள்ள கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று தலை நகர் புதுடில்லியில் மாதக் கணக்காக கூடாரம் அமைத்து, குடித்து கூத்தாடிக் கொண்டும், சூதாடிக் கொண்டும், டிராக்டர்களை பரப்பி நிறுத்தி, மூன்று வேளைகளும் மூக்குப் பிடிக்க உண்டு கொழுத்து, நடத்திய போராட்டத்தையே, மோடி அரசு திறமையாக சமாளித்து, பிசுபிசுக்க வைத்து விட்டது.

ஆனால், இப்போதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு கொண்டிருப்பது போல, சரத் பவாரும், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷும் 'கப்சா' விட்டு, கதை அளந்து கொண்டிருக்கின்றனர்.

புடின் அளவுக்கு சர்வாதிகார கட்டளையை இங்கே விதிக்கப்படுவதைத் தவிர்க்க, அரசியல்வாதிகள், 'டுபாக்கூர்' அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.



தலைமை முகத்தில் கரி பூசுவதா?

என்.ஏ.நாசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழககாங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, 'மாநில சுயாட்சி அடிப்படையில் நீட் தேர்வை எதிர்ப்போம்' என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 'நீட் தேர்வை அறிமுகம் பண்ணியதே காங்கிரஸ் ஆட்சியில் தானே.

ஒரு சட்ட திட்டம் கொண்டு வரும் போது அதன் சாதக, பாதக நிலைகளை ஆராய்ந்து தான் சட்டம் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நிறைவேற்றப்பட்டது தான் நீட் தேர்வு... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதை எதிர்த்தாலும், 'மாணவர்கள் தயாராக கால அவகாசம் வேண்டும், அதுவரை விலக்கு வேண்டும்' என்று தான் நீட் தேர்வை எதிர்த் தார்.

அதே வேளையில், 'நீட் தேர்வு ரத்து இல்லை' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர்நளினி, 'இனி எந்த சூழ்நிலையிலும் நீட் தேர்வில் விலக்கு பெற முடியாது' என ஆணித்தரமாக சொல்லி விட்டார்.

இதெல்லாம், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறியாத தகவலா?

நீட் தேர்வை தி.மு.க., வின் விசுவாசிகள் எதிர்க்க காரணம், தி.மு.க.,காரர்களால் நடத்தப்படும் மருத்துவ கல்லுாரிகள் வருமானத்தில் பெரிய தடை விழுந்தது தான். அதனால் தி.மு.க., வுக்கு வரவேண்டிய நிதி தடைப்பட்டது. அதனால் தான் தி.மு.க., தரப்பு நீட் தேர்வை எதிர்க்கிறது.

ஆனால், காங்., அறிமுகம் செய்த திட்டத்தை, அதன் மாநில தலைவரே எதிர்ப்பது என்பது, தலைமை யின் முகத்தில் கரி பூசுவது போல் அல்லவா இருக்கிறது.



பாரபட்சத்தின் உச்சகட்டம்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அரசு அனுமதி மறுக்கும்; நீதிமன்றம் அனுமதி வழங்க உத்தரவிடும்; அரசு மேல் முறையீடு செய்யும்; இறுதியாக உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கச் சொல்லி உத்தரவிடும்; பின், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்கள், மிக அமைதியாக நடைபெற்று முடியும்.

ஆர்.எஸ்.எஸ்.,ஐ வெறுக்கும் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கைகள் தமிழகத்தில் பரவ விடக்கூடாது என்று துடிக்கும் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களில் ஏதாவது பிரச்னை செய்து அவப்பெயரைப் பெற்றுத் தர வேண்டும் என்கிற நோக்கில், இப்படி செயல்படுகின்றன. அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது, அரசின் கடமை, பொறுப்பு.

சமீபத்தில், வி.எச்.பி.,யின் மாநாட்டுக்கும், அரசு அனுமதி மறுக்கப்பட்டது; பின் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு அனுமதி வழங்க, அரசுக்கு உத்தரவிட்டது.

ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., போன்ற சமூக சேவை செய்யும் அமைப்புகள், ஒழுக்கம், கட்டுப்பாடு, அமைதிக்குப் பெயர் பெற்றவர்கள்.

இவர்களின் ஊர்வலங்களுக்கு, மாநாட்டுக்கு, பொய்யான காரணங்களைக் கூறி அரசு அனுமதி மறுப்பது, ஒவ்வொரு முறையும் அவர்களை நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது, வேதனையளிக்கிறது.

அவர்களின் ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கொள்கைகள் ஏற்புடையதா அல்லது இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

வன்முறைகளுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் பெற்ற பல அமைப்புகளின், கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் கட்சிகளின், ஜாதிக் கட்சிகளின், பிரிவினைவாதம் பேசும் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கிட்டும்போது, ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருவது பாரபட்சத்தின் உச்சகட்டம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us