PUBLISHED ON : ஜன 22, 2026 04:11 AM

'எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ததைக் கூட, தனக்கு சாதகமாக மாற்றி விட்டாரே...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், பிற கட்சியினர்.
சிவசேனா நிறுவனரான, மறைந்த பால் தாக்கரே யின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. இவர், தற்போது மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
இவர், ஏற்கனவே சிவசேனாவில் தான் இருந்தார்; பால் தாக்கரே, தன் மகன் உத்தவ் தாக்கரேயை, அரசியல் வாரிசாக அறிவித்ததால், அங்கிருந்து வெளியேறி தனிக்கட்சி துவங்கினார் ராஜ் தாக்கரே.
கடந்த, 19 ஆண்டுகளாக உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் எதிரும் புதிருமாகவே செயல்பட்டு வந்தனர்.
சமீபத்தில், மும்பை மாநகராட்சி தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக, இருவரும் கை கோர்த்தனர். அப்போது ராஜ் தாக்கரே, 'சகோதரர்களான நாங்கள் இருவரும், மீண்டும் இணைந்ததற்கு முக்கிய காரணமே, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தான். எங்களுக்கு எதிராக அவர் செய்யும் அரசியல் தான், எங்களை மீண்டும் கைகோர்க்க வைத்தது; அதற்காக அவருக்கு நன்றி' என்றார்.
இதைக் கேள்விப்பட்ட பட்னவிஸ், 'கடந்த, 19 ஆண்டுகளாக பகையாளிகளாக இருந்தவர்கள், மீண்டும் பங்காளிகளாக மாறியதற்கு, நான் ஒரு காரணமாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன்...' என, சூடாக பதிலடி கொடுத்து, ராஜ் தாக்கரேயின் வாயை அடைத்து விட்டார்.

