/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தன் வீட்டை சீர் செய்யுமா, காவல்துறை?
/
தன் வீட்டை சீர் செய்யுமா, காவல்துறை?
PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM
ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர், ஆயுதப் படைக்கு பணி மாறுதல் செய்யப்படுகின்றனர். இது தண்டனைக்குரிய பணி இடமாற்றம் என, விளக்கம் வேறு கொடுக்கப்படுகிறது!
இது, காலம் காலமாக நடைபெறும் கண் துடைப்பு நாடகம் அன்றி, வேறு என்ன!
ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டும் முக்கிய துறையாக திகழ்வது காவல்துறை. அதில் உள்ள கருப்பு ஆடுகளை இனம் கண்டு, பணி நீக்கம் போன்ற கடும் தண்டனைகளை விதித்து களை எடுக்காமல், ஆயுதப்படை மாற்றம் எனும் மென்மையான போக்கை கடைபிடிப்பது, உள்ளபடியே காவல் துறையின் மாண்பு மற்றும் கண்ணியத்தை, கேள்விக்குறியாக்கும் போக்காகும்.
உதாரணத்திற்கு, ஒழுங்கீனம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்களை, டி.சி., கொடுத்து நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் சீர்கேட்டை சரி செய்கிறது. இப்படி பள்ளி மாணவர்களுக்கே, குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் போது, மாநிலத்தின் முக்கியத்துறையான காவல்துறையில், குற்றம் இழைத்த ஊழியர்களுக்கு, ஆயுதப்படை இடமாற்றம் எனும் மென்மையான தண்டனை தரப்படுவது, கேலிக்கூத்தாக உள்ளது!
நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கு, சீரிய முறையில் நிலைநாட்டப்பட, முதலில் காவல்துறை நிர்வாகமானது, ஆயுதப்படை இடமாற்றமெனும் கண்துடைப்பை களைய, முன்வர வேண்டும்!
தண்டனை, கடுமையாக்கப்பட வேண்டும். குற்றச் செயல்கள் புரிய, காவல்துறை கருப்பு ஆடுகள், அஞ்சி நடுங்க வேண்டும்!
தன் வீட்டை சீர் செய்ய முன்வருமா, காவல்துறை?
தேர்தலெல்லாம் ஜுஜுபி தான்!
எஸ்.ராமகிருஷ்ணன்,
கே.கே.புதுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல்
பிரசாரம்; பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் அரசியல்
கட்சித் தலைவர்கள்; அவர்களுக்கு ஜால்ரா போடும் உதிரி சில்லுண்டிக்
கட்சிகள்.
முன்னர் ஆண்டவர்கள் இப்போது ஆள்பவர்கள் என இரு தரப்பும், எதிரும் புதிருமாய் சுமத்தும் குற்றச்சாட்டுகள்...
ஜாதி
ஒழிப்பு, மதச்சார்பற்ற ஆட்சி, மது ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி, வேலை
வாய்ப்பு, வறுமையை ஒழித்தல், தீண்டாமை அகற்றுதல், கல்வி மேம்பாடு,
சமத்துவம், விவசாயிகள் நலனைப் பாதுகாப்பது...
தொழில் துறையை ஊக்குவிப்பது, மருத்துவம், உயர்கல்வி என, அறுபது ஆண்டுகளாகப் பேசி, மக்களை முட்டாள் ஆக்கி வருகின்றனர்.
'நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்குவோம்' என்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி.
இவர்
ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்? சென்னையின் சாலையில் அமர்ந்து,
பூதக்கண்ணாடி வைத்து, எப்படி சிங்கப்பூர் ஆக்கலாம் என, சிந்தித்துக்
கொண்டிருந்தாரோ?
தி.மு.க.,வில், போன தேர்தலில் செங்கல்லைத் துாக்கியவர், இப்போது முட்டையுடன் அலைகிறார்.
கோடை காலத்தில் கடும் வறட்சி; மழைக்காலத்தில் ஆறாய் ஓடும் வெள்ளம். மக்கள் பணம் எங்கே தான் செல்கிறது?
அரசு
அலுவலகத்தில், ஒரு பணிக்காக நுழையும் போதே, எவ்வளவு லஞ்சம் கொடுத்தால்
பணி நடக்கும் என்ற விபரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தான், மக்கள்
அந்த அலுவலகத்திற்குள்ளேயே நுழைகின்றனர்.
இக்கட்சிகள் ஆட்சியில்
இருந்தால், இந்நிலை மாறவே மாறாது. மக்களாகவே பெரும் போராட்டத்தில் இறங்கி,
புரட்சி செய்தால் மட்டுமே, நம் நாட்டிற்கு விடிவு. இந்த தேர்தல் எல்லாம்,
வெறும் ஜுஜுபி தான்!
காங்கிரசின் ஆணவப்போக்கு இது!
எஸ்.கண்ணம்மா,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியா --
வங்கதேசம் இடையிலான நில எல்லை ஒப்பந்தம், நிலத்தின் மறுசீரமைப்பு
மட்டுமல்ல; இதயங்களின் சந்திப்பு' என, 2015ல் பிரதமர் பேசியதை
நினைவுபடுத்துவதாகவும், இதே போன்ற நட்பின் அடிப்படையில் தான், 1974ல்
கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது என்றும், காங்., தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார்.
சுதந்திரத்திற்கு முன் வங்கதேசம்,
நம் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் தனியாக சென்ற
போது, நில எல்லை ஒப்பந்தம், நட்பின் அடிப்படையில், மறு சீரமைப்பு
செய்யப்பட்டது.
ஆனால், கச்சத்தீவு விஷயம் வேறு. அது, நம் நாட்டின்
ஒரு பகுதி. இலங்கை அங்கு பிரச்னை செய்தால், அதற்கு நம் பிரதமர் வலுவாக
எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.
அதை விடுத்து, ஒரு சிறிய நாட்டிற்கு பயந்து, நம் நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்தது, கையாலாகாத போக்கு.
காங்கிரசுக்கு
என்றும், நாட்டு நலனை விட, வீட்டு நலன் முக்கியம். நேரு பிரதமராக இருந்த
போது, காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்து,
'போகட்டும்; அதில் புல் கூட முளைக்காது' என்றார்.
இந்திராவும்,
தி.மு.க.,வும், கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து விட்டதால், நம்
மீனவர்கள், இன்றளவும் துயரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உங்கள் வீட்டிற்கு வந்து ஒருவர் பிரச்னை செய்தால், உங்கள் வீட்டை அவருக்கு நல்லெண்ண அடிப்படையில் கொடுத்து விடுவீர்களா?
காங்கிரஸ்,
நாட்டின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு, அதற்கு இன்று மன்னிப்பு கேட்காமல்,
அதை நியாயப்படுத்துகிறது. இது, காங்கிரசின் ஆணவப்போக்கைத் தவிர வேறென்ன!
வாய் பிளக்க போகிறோமா, விழித்தெழுவோமா?
ஆர்.பாலமுருகன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாட்டு மக்களைப்
போல் ஏமாந்தவர்களை, மறதிக்காரர்களை, உலகில் யாருமே பார்க்க முடியாது.
ஒவ்வொரு
தேர்தல் அறிக்கையின் போதும், அனைத்து கட்சிகளும், வருங்கால
முன்னேற்றத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை எடுத்துரைக்காமல், தான் செய்த
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல், பழைய பஞ்சாங்கத்தை சொல்லிச் சொல்லியே
ஓட்டு கேட்டு, நம்மை ஏமாற்றி வருகின்றன.
கச்சத்தீவு பிரச்னை, என்
தந்தை காலத்தில் இருந்தது; என் காலத்திலும் இருக்கிறது; என் பேரப்
பிள்ளைகள் காலத்திலும் இருக்கும் போல் தெரிகிறது.
'இண்டியா'
கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து என்கிறார் உதயநிதி. இந்த
தேர்வு, சுப்ரீம் கோர்ட்டால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதை இவர் போல,
'வாயால் வடை சுட்டு' மாற்ற முடியாது.
தேர்தல் நேரத்தில், ஆளுக்கு
5,000 ரூபாய் என, தொகுதிதோறும் கொடுத்து, நம்மைப் போன்ற முட்டாள்களை வாய்
பிளக்க வைத்து, ஓட்டு வாங்கி விடுவர் இந்த கயவர்கள்.
விழித்தெழப் போகிறோமா, வாய் பிளக்கப் போகிறோமா?

