PUBLISHED ON : ஏப் 08, 2026 02:26 AM

ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையேயான வெற்றி வித்தியாசங்கள் சொற்ப எண்ணிக்கையில் இருந்த நிலையில், தற்போது, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலால் அனைத்து கட்சிகளும் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் பணி வாயிலாக, மாநிலம் முழுதும் கிட்டத்தட்ட 70 முதல் 74 லட்சம் வாக் காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2021-ல், 6.29 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, 2026 பிப்ரவரி 23-ல் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, 5.67 கோடியாக குறைந்து உள்ளது. இது, 11.5 சதவீதம் சரிவு.
குறிப்பாக, சென்னை போன்ற நகர்ப்புறங்களில், 35 சதவீதம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 'பிரமாண்ட நீக்கம்' பல தொகுதிகளின் தலையெழுத்தை மாற்றியமைக்கும்!
கடந்த 2021-ல் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல தொகுதிகளில், 2 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றன.
உதாரணமாக, தென்காசி - 370 ஓட்டுகள்; தாராபுரம் -1,393, அந்தியூர் - 1,275, உத்திரமேரூர் - 1,622 ஓட்டுகள் என்று சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
இத்தொகுதிகளில் தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, அன்றைய வெற்றி வித்தியாசத்தை விட, 15 முதல் 40 மடங்கு அதிகம். இதனால், அத்தொகுதிகளின் பழைய அரசியல் கணக்குகள் முற்றிலும் செயலிழந்துள்ளன.
கூடவே, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் பெருமளவில் ஓட்டு சிதைப்பு காரணியாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 15- - 20 சதவீத ஓட்டுகளை த.வெ.க., பெறக்கூடும் எனக் கணிக்கப்படும் நிலையில், ஒரு வேட்பாளர் வெற்றி பெறத் தேவையான ஓட்டு விகிதம், 35 சதவீதத்திற்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது.
மேலும், புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள, 27.5 லட்சம் இளம் வாக்காளர்கள், எவ்வித அரசியல் சார்புமின்றி மாற்றத்தை விரும்புவது, பாரம்பரிய கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, 11 சதவீத வாக்காளர் நீக்கம் மற்றும் த.வெ.க., போன்றவற்றால், இந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது என்பது நுாலிழை வித்தியாசத்தில் நிகழும் ஒரு வரலாற்று நிகழ்வாகவே இருக்கும்!
காதில் பூ சுற்றும் தேர்தல் சடங்குகள்! எஸ்.கீதாஞ்சலி, சென்னை யில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம்
சில, 'சடங்குகளை' அரங்கேற்றுவது வழக்கம். அதில் முதன்மையானது,
வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்துக் கணக்கு!
அவ்வகையில், தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விபரங்கள் ஆச்சரியத்தின் உச்சம்!
பல ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சி தலைவரின் கையில் ரொக்கம்
வெறும், 10,000 ரூபாய் தான் இருக்கிறது; சொந்தமாக கார் கூட இல்லை என்பது
எத்தகைய விந்தை?
பெரும்பாலான சொத்துக்கள் மனைவி பெயரில்
இருப்பதும், பல கோடி ரூபாய் சொத்து வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு,
தன்னை நேர்மையாளராக காட்டிக் கொள்ள முனைவது, மக்களைக் கேலி செய்யும் செயல்
அல்லவா?
இதேபோன்று தான், நடிகர் விஜய் தாக்கல் செய்துள்ள கணக்கும்!
ஒரு படத்துக்கே 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய், 400 கோடி
ரூபாய்க்கும் அதிகமான அசையும் சொத்துக்களைக் காட்டியிருக்கிறார்.
இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு
கடன் கொடுத்திருப்பதாக அவர் கணக்கு காட்டியுள்ளது தான் வினோதத்தின் உச்சம்!
அடுத்து, பறக்கும் படை!
இவர்கள், சாலையில் செல்லும்
வியாபாரிகள், பொதுமக்கள், ஏன்... ஏ.டி.எம்.,க்கு பணம் கொண்டு செல்லும்
வாகனங்களை கூட மறித்து கணக்குக் கேட்பரே தவிர, இதுவரை ஒரு
அரசியல்வாதியிடம் கூட பணத்தை பறிமுதல் செய்த வரலாறு இல்லை.
ஓர்
அரசியல்வாதியின் காரைக்கூடத் தொட தயங்கும் இந்த அதிகாரிகள், சாமானியர்களின்
வாகனத்தை மறித்து, அவர்கள் கையில் இருக்கும் சொற்ப பணத்தை பிடுங்குவதற்கு
பெயர்தான் ஜனநாயக வழி தேர்தல் விதிமுறைகளா?
உண்மையில் ஜனநாயகத்தை
நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தல் ஆணையம் வெறும், 'தபால் அலுவலகமாக'
இல்லாமல், வேட்பாளர்களின் சொத்து விபரங்களை தணிக்கை செய்யும்
ஆய்வுக்கூடமாக மாற வேண்டும். இல்லையெனில், இந்தத் தேர்தல் கணக்குகள்
அனைத்தும், மக்கள் காதில் சுற்றப்படும் பூக்களாகவே இருக்கும்!
சிரிப்புக்கு பஞ்சமில்லை! எல்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ
- மெயில்' கடிதம்: தேர்தல் வந்து விட்டால் போதும்... காரசாரமான
விவாதங்களும், ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சேறு வாரி இறைத்துக் கொள் ளும்,
'சீரியஸ்' காட்சிகளுக் கும் பஞ்சமிருக்காது.
ஆனால், 'மக்களே...
ஏன் இவ்வளவு டென்ஷன்? நாங்க இருக்கோம் உங்களை சிரிக்க வைக்க' என்பது போல்,
சீரியஸ் அரசியலை, சிரிப்பு அரசியலாக மாற்றியுள்ளனர், தமி ழக காங்கிரஸ்
தொண்டர்கள்.
வெளிவராத வேட்பாளர் பட்டியலில், சம்பந்தப்பட்டவரின்
பெயர் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாமல், அவருக்கு, 'சீட்' கொடுக்க
வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை சத்தியமூர்த்தி பவன் முன் நான்கைந்து
காங்., தொண்டர்கள் கூடி நின்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு பெண் தொண்டர், 'எல்லாரும் பார்த்துக்கங்க...
கோரிக்கையை வலியுறுத்தி நான் தீக் குளிக்கப் போறேன்!' என்று தமாசு நடிகர்
வடிவேலு பாணியில், ஒரு பெரிய பெட்ரோல் கேனை துாக்கிக் காட்டினார்.
ஐந்தாறு லிட்டர் பிடிக்கும் அக்கேனில் வெறும், 50 மில்லி பெட்ரோல் கூட இல்லை!
பாவம்... எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்த, 50 மில்லியை வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டாரோ?
ஆவேசமாகப் பேசிய அந்த தொண்டர், கடைசிவரை அந்தக் கேனின் மூடியை திறக்கவே
இல்லை. ஒருவேளை மூடியைத் திறந்தால், அடியில் இருக்கும் அந்த, 'கொஞ்சூண்டு'
பெட்ரோலும் ஆவியாகி விடுமோ என்று பயந்திருக்கலாம்!
அருகில்
நின்றிருந்தவர்களும் அவருக்கு சளைத்தவர்கள் இல்லை. 'விடுங்க தோழி... உங்க
கோஷம் டில்லி வரைக்கும் கேட்டு, காங்., தலைவர் கார்கேவும், நிழல் தலைவரான
ராகுலும் இப்பவே ஆலோசனை செய்ய ஆரம்பிச்சுருப்பாங்க' என்று, 'உருட்ட' அந்தத்
தொண்டரும் சமாதானமாகி கேனோடு நடையைக் கட்டினார்.
இந்த சிக்கன தீக்கு ளிப்பு போராட்ட நாடகத்தை கண்டு, அவ்வழியே சென்ற பாதசாரிகள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கடந்து சென்றனர்.
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்று இன்னும் எத்தனை கோமாளி நாடகங்களை மக்கள் கண்டு களிக்க வேண் டுமோ!

