PUBLISHED ON : ஏப் 09, 2026 04:13 AM

பொ.ருக்மணி தேவி,
கூடங்குளம், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து உங்கள் முன் கம்பீரமாக
நிற்கிறேன்' என்று, கோவையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
பேசியுள்ளார்.
வசனம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரே
கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை
அமல்படுத்துவோம்; சம வேலைக்கு சம ஊதியம் தருவோம் என்று இடைநிலை
ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி, காஸ் சிலிண்டர்களுக்கு, 100 ரூபாய்
மானியம், கல்விக் கடன் தள்ளுபடி, டோல்கேட்களை அகற்றுதல், செவிலியர்கள்
பணி நிரந்தரம், மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிப்போம் என்பது உட்பட
பல்வேறு வாக்குறுதிகள் இன்றும் வாக்குறுதிகளாகவே இருப்பது எப்படி?
இப்படி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாளிகளாக நினைத்து,
'சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்துள்ளேன்' என்கிறார், தி.மு.க.,
முதல்வர்.
அவர் கூறுவது உண்மை தான்!
கள்ளச்சாராயம்
குடித்து உயிரிழக்கும், 'தியாகி'களுக்கு, 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண
நிதி வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி வழங்கவில்லை. ஆனால், அள்ளிக்
கொடுத்தார்.
பால் விலை, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் போன்றவற்றை உயர்த்துவோம் என்று ஒரு போதும் கூறவில்லை; ஆனாலும் உயர்த்தினார்.
கனிமவள கொள்ளை, லஞ்சம், ஊழலை அனுமதிப்போம் என்று வாக்குறுதி வழங்கவில்லை. ஆனால், அவை எல்லாம் அமோகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவோம், வாரிசு அரசியலை வளர்ப்போம் என்று
வாக்குறுதி கொடுக்கவில்லை. ஆனால், அதை கட்சியின் அனைத்து மட்டங்களிலும்
அமோகமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
கருணாநிதியின் சமாதியை, 40
கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்போம், ஊர்தோறும் கருணாநிதியின் சிலைகளை
வைப்போம் என்று கூறவில்லை. ஐந்தாண்டு ஆட்சியில் அதையெல்லாம் சிறப்பாக
செய்தார்.
நாட்டிலேயே தமிழகத்தை கடன் வாங்குவதில் முதல் இடத்திற்கு கொண்டு வருவோம் என்று சொல்லவில்லை. ஆனால், அச்சாதனையை செய்தார்.
சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, ஹிந்து கோவில்களை இடிப்போம் என்று சொல்லவே
இல்லை; ஆனால், 200க்கும் அதிகமான கோவில்களை தன் ஆட்சியில் இடித்தார்.
எனவே, திராவிட மாடல் முதல்வர் சொல்லாமல் நிறையவே செய்துள்ளார் என்பதை,
தமிழக மக்கள் மறுக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்!
இது தான் ஜனநாயகமா?
வி.கமலதாசன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை கே.கே.நகரில் அமைந்துள்ள வண்டியூர் ஏரி மிகவும் தொன்மையானது. பல நுாற்றாண்டுகளாக, கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ஏரியில், 1980களில் படகு சவாரிகள் கூட நடந்துள்ளன. காலப்போக்கில் துார்ந்து, சேறும் சகதியுமாக மாறியது.
பின்னாளில் ஏரிக்கரையோரம் அமைந்த பூங்காவில், 'நடைபயிற்சியாளர்கள் கழகம்' என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அந்த நல்ல மனிதர்களின் முயற்சியால் துார்வாரும் வேலை துவங்கப்பட்டு, பின், மதுரை மாநகராட்சியுடன் கைகோர்த்து நடந்த பணிகளால், தற்போது, திறப்பு விழா கண்டுள்ள வண்டியூர் ஏரியும், ஏரிக்கரை பூங்காவும் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
அதைக் கண்டு உற்சாகத்துடன் நடைபயிற்சிக்கு சென்ற பொதுமக்களுக்கு, கட்டணம் என்று கூறி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது, மாநகராட்சி.
காரணம், ஏரியையும் பூங்காவையும் குத்தகைக்கு விட்டுள்ளனராம். அதனால், இனிமேல் பூங்காவில் நடைபயிற்சிக்காக வருவோரிடம், தினமும், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுமாம்!
இலவசங்கள் என்ற பெயரில் ஏதேதோ அள்ளிக் கொடுக்கின்றனர். ஆனால், கிள்ளிக் கொடுக்கக் கூட மனம் வராமல், உடல் நலம் பேண நடைபயிற்சி வருவோரிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கேட்டால், பூங்காவிற்குள் பல பொழுதுபோக்கு, கேளிக்கை அம்சங்களை உருவாக்கி உள்ளனராம்!
காலை 7:00 மணிக்கு நடைபயிற்சி செய்வதற்காக வருவோர், என்ன பொழுதுபோக்கு, கேளிக்கையில் ஈடுபடப் போகின்றனர்? காலை நேரத்திலாவது இந்த நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டாமா?
நடைபயிற்சி செய்வதற்கு கூட கட்டணம் கொடுக்க வேண்டுமா?
இனி, வண்டியூர் ஏறியை சுற்றி வசிப்போர் மூச்சு விடக்கூட, 'மூச்சு வரி' என்று வசூலிப்பர் போலும்!
மக்களுக்கான பொது சேவைகளுக்கு கூட, இப்படி கட்டணம் வசூலித்து கல்லா கட்டிவிட்டு, தேர்தல் வந்துவிட்டால் இலவசங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளிக் கொடுப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா?
கொள்ளையரின் கூடாரமா கோவில்கள்?
எஸ்.அய்யப்பன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சமீபத்தில் குடும்பத்துடன் சென்றிருந்தேன். கோவிலில், கார் நிறுத்தத்திற்கு, 125 ரூபாய் கேட்டனர். எதற்கு, 125 ரூபாய் என்று கேட்டதற்கு, சனி பெயர்ச்சி நடப்பதால் இக்கட்டணம் என்றனர்.
அதுதான் கடந்த வாரமே முடிந்து விட்டதே என்றபோது, எந்த பதிலும் சொல்லாமல், பணத்தை கறப்பதிலேயே குறியாக இருந்தனர்.
அதுமட்டுமல்ல... கோவிலுக்குள் நுழைய, 50 ரூபாய் டிக்கெட் வாங்கச் சொன்னார்கள், கோவில் பணியாளர்கள். கோவிலுக்குள் செல்வதற்கு எதற்கு டிக்கெட் என்று கேட்டதற்கு, 'பொது வழி ரத வீதியில் இருக்கிறது; வேண்டுமானால் சுற்றிச் செல்லுங்கள்' என்றனர்.
இவ்வளவுக்கும் கோவிலில் கூட்டமே இல்லை; மொத்தமே, 20 பேர் தான் இருந்தனர். வேறு வழியின்றி, 50 ரூபாய் டிக்கெட் வாங்கி கோவிலுக்குள் சென்றோம்.
இப்படி கோவிலுக்குள் நுழைவதற்கே, டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால், ஏழைகள் எப்படி கோவிலுக்கு வர முடியும், இறைவனை தரிசிக்க முடியும்?
இதேபோன்று தான், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலிலும், செருப்பை பாதுகாப்பதற்கு, 10 ரூபாய் வசூல் செய்கின்றனர்.
இப்படி தொட்டதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்க கோவில் என்ன கண்காட்சி, பொருட்காட்சி கூடமா?
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களானால், அங்கு எப்படி தெய்வம் குடியிருக்கும்?

