sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/நவோதயா பள்ளியில் 8ம் வகுப்பு வரை தமிழில் படிக்கலாம்!

நவோதயா பள்ளியில் 8ம் வகுப்பு வரை தமிழில் படிக்கலாம்!

நவோதயா பள்ளியில் 8ம் வகுப்பு வரை தமிழில் படிக்கலாம்!


PUBLISHED ON : மார் 20, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 20, 2026 03:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சு.மனோகரன், தலைமையாசிரியர், (பணி நிறைவு), நீலகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1986ம் ஆண்டு கல்விக் கொள்கையில், கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வி பெற மாவட்டந்தோறும், 'ஜவஹர் நவோதயா' எனும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது என்ற ஒற்றை காரணத்தைக்கூறி, தமிழகத்தை ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் நவோதயா பள்ளிகளை திறக்க மறுத்து வருகின்றன.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மறுக்கப்படுவது, இங்குள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்!

தமிழர்களுக்கு செய்யும் இத்துரோகத்தை மொழிப்பற்று என்றும், சமூகநீதி என்றும் தி.மு.க., கூறுவதை, இங்குள்ள ஒரு கூட்டம் வழிமொழிவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.

குடிசை தொழில் போல் குக்கிராமங்களில் கூட ஆங்கிலப் பள்ளிகள் வந்து விட்டன; இப்பள்ளிகள் தமிழில் பேச தடை விதிக்கின்றன. அதேபோன்று, மாவட்டந்தோறும் எண்ணற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது.

இதனால் எல்லாம் அழியாத தமிழ், எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிக்கலாம் என்ற நிபந்தனையுடன் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி வருவதால், அழிந்துவிடும் என்று கூறுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அரசு பள்ளிகளின் கல்வித் தரம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதும், அதன் கல்வித்தரம் குறித்த தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதும் படிக்காத பாமரர் கூட அறிவர்.

அதை வைத்து, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று கொண்டாடுவதும், மத்திய அரசு தரும் கல்வி திட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று மறுப்பதும் அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க., நடத்தும் நாடகம்! ஹிந்தி திணிப்பை எதிர்க்கவே, நவோதயா பள்ளிகளை ஏற்க மறுக்கிறோம் என்று கூறும் தி.மு.க., அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தடைசெய்ய வேண்டியது தானே?

ஏன் அதற்கு மட்டும் அனுமதி? தாங்கள் நடத்தும் கல்வி வியாபாரம் படுத்துவிடக் கூடாது என்பதே காரணம்! தங்கள் வியாபாரம் செழிக்க ஹிந்தி கற்பிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வேண்டும்; தங்கள் அரசியல் வியாபாரம் படுத்து விடாமல் இருக்க நவோதயா பள்ளிகள் வேண்டாமா?

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தி.மு.க.,வின் இந்த குள்ளநரி தந்திரத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும்!

............

நிதானமே பிரதானம்!

எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: 'தி.மு.க., கட்சியே தற்போது அ.தி.மு.க.,வின், 'பி டீம்' என்ற ரீதியில் மாறிவிட்டது' என அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியின் மீது அதிருப்தியாக இருக்கும் மக்கள், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கும் மனநிலையில் இருக்கும் போது, 'தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்' என்ற காமராஜரின் வாக்கிற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், தம்பிதுரை.

இதற்கு பெயர் தான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது!

வெறும் பண பலத்தை மட்டும் நம்பி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள தி.மு.க., ஊடகங்களையும், சமூக வலைதளங்களையும் தன் வசப் படுத்தி வைத்துள்ளது.

எதிர்க்கட்சியினர் ஏதாவது பேசிவிட மாட்டார்களா, அதை ஊதி பெரிதாக்கி, அவர்களது ஓட்டு வங்கியில் ஓட்டை விழச் செய்து விட மாட்டோமா என்று கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறது.

அதற்கு தீனி போடுவது போல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பேசுகின்றனர். சமீபத்தில், சி.வி.சண்முகம் தனக்கு நயன்தாரா வேண்டும் என்கிறார்; திண்டுக்கல் சீனிவாசனோ, 'சேலை தந்த தி.மு.க., பெண்களுக்கு உள்பாவாடை தரவில்லையா?' என்று கேட்கிறார்.

இப்படி மனம் போனபடி பேசி ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்காமல், நிதானமான பேச்சே பிரதானம் என்பதை அ.தி.மு.க.,வினர் மனதில் கொள்வது கட்சிக்கு நல்லது!

..........

என்னைப்போல் அழகு இல்லை!

எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., தன் கூட இருக்கும் கட்சிகளை அழித்துவிடும் என்ற பொய்யான பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறது, தி.மு.க.,

ஆனால், கூட்டணியில் இருக்கும் கட்சிகளை, சிறிது சிறிதாக அழித்து, தன் அடிமைகளாக தி.மு.க., எப்படி மாற்றுகிறது என்பதற்கு, தற்போதைய தொகுதிப் பங்கீட்டு நாடகங்களே உதாரணம்!

சமூக நீதி, சமத்துவம் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கூடுதல் இடங்களைப் பெற படாதபாடு படுகிறார்.

'இரட்டை இலக்கத் தொகுதிகள் வேண்டும்' என்று துவங்கி, கெஞ்சி போராடிப் பார்த்தும், தி.மு.க., அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில், கொடுத்ததை வாங்கி,'சமத்துவப் போர்' நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தேசிய கட்சி என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரசோ, தி.மு.க.,விடம் கூடுதல், 'சீட்' கேட்டு, தலைகீழாக நின்று கெஞ்சிய அவலத்தை, நாடே பார்த்து சிரித்தது.

ஒருவழியாக தன் மானத்தை அடகு வைத்து, தி.மு.க., வீசும் இடங்களை ஏற்று அமைதி காக்கின்றனர், தமிழக காங்கிரசார்.

இதில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோவின் நிலையோ படு மோசம். தன் கட்சியின் தனித்துவத்தை காக்க முடியாமல், சொந்த கட்சியில் ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூட, தி.மு.க.,வின் அனுமதிக்கு காத்துக் கிடக்கிறார்.

கொடுக்கப்பட்ட நான்கு இடங்களில், மூன்றில், 'உதயசூரியன்' சின்னத்தில் நிற்கச் சொல்லி கட்டாயப்படுத்தி, ஓர் இடத்தை மட்டும் வைகோவின் விருப்பத்திற்கு விட்டிருப்பது, அந்த இயக்கத்தை மொத்தமாக விழுங்கும் முயற்சி இன்றி வேறென்ன?

சந்தர்ப்பவாத கட்சியான, தே.மு.தி.க.,விற்கு ஒரு எம்.பி., சீட்டும், ஏழெட்டு எம்.எல்.ஏ., சீட்டும் கொடுக்க தி.மு.க., தயாராக இருப்பது, இத்தனை நாள் அக்கட்சிக்கு ஆதரவாக முட்டு கொடுத்துக் கொண்டிருந்த கட்சிகளுக்கு வலிக் கத் தானே செய்யும்?

கடந்த முறை கொடுத்த இடங்களைக் கூட இம்முறை வழங்காமல், இடதுசாரி கட்சிகளின் கரங்களை, தி.மு.க., வெட்டி சுருக்கி வருகிறது. முதலாளித்துவத்தை எதிர்த்து கொள்கை முழக்கமிடும் கம்யூ., தலைவர்கள், தி.மு.க.,வின் எஜமான அதிகாரத்தை எதிர்க்க முடியாமல், மவுன விரதம் காக்கின்றனர்.

இப்படி, 'கூட்டணி தர்மம்' என்ற பெயரில் சிறிய கட்சிகளை தனக்கு கீழ் ஒடுக்கி வரும் தி.மு.க., பா.ஜ., கூட்டணி கட்சிகளை அழித்து விடும் என்கிறது.

என்னைப் போல குரலும் இல்லை; என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்றதாம் கழுதை; அதுபோன்று உள்ளது, தி.மு.க.,வினரின் பேச்சு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us