தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம்!

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம்!

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம்!


PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை; அதற்குப் பதில் சொல்லத் தேவையும் இல்லை' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வர், இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது சரியா?பழனிசாமியின் கேள்விக்குப் பதிலளிக்கும் அவசியம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்... ஆனால், பொதுமக்களுக்கு சரியான தகவல் தரவேண்டியது ஆட்சியாளர்களின் கடமையல்லவா...

அத்துடன், முதல்வரின் பேச்சில் தான் எத்தனை முரண்பாடுகள்...

'சென்னையில் மழைநீர் தேங்கவில்லை;மக்கள் நன்றாகத்தான் இருக்கின்றனர்' என்கிறார்.

ஆனால், துணை முதல்வர் உதயநிதியோ,தான் ஆய்வு செய்ததில், 334 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாக அறிக்கை விட்டுள்ளார்.

இருவர் விடும் அறிக்கைகளில் ஏன் இந்த முரண்பாடு?

சென்னை வெள்ளக்காடாக மாறிய காட்சிகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தனர்!

'ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், 32 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 9.10 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை மீட்புப் பணியில், 22,000 பேர் ஈடுபட்டுள்ளனர்' என்று அறிக்கை விட்டிருப்பதும், இதே முதல்வர் தான்.

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை, மக்கள் நன்றாகத்தான் இருக்கின்றனர் என்றால், 9.10 லட்சம் உணவுப்பொட்டலங்கள் யாருக்கு வழங்கப்பட்டது... மழை மீட்புப் பணியில், 22,000 பேருக்கு என்ன வேலை ?

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது நியாயமா முதல்வரே!



தெளிவுபடுத்துவரா முதல்வர்? -


எ.சந்தர் சிங், பூலுவபட்டி,திருப்பூர் மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமரின் 'விஸ்வகர்மா' திட்டம், ஜாதியஅடிப்படையிலான தொழில் முறைக்கு வழிகோலும் என்பதால், இதை, செயல்படுத்த முடியாது எனக் கூறிஉள்ளார், தமிழக முதல்வர்ஸ்டாலின்.

சமூக நீதி அடிப்படையில்,கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தமிழகத்திற்கு என, விரிவான திட்டம்ஒன்றை உருவாக்க முடிவுசெய்துள்ளாராம், முதல்வர்.

அது என்ன திட்டம் என்று கூறுவாரா?

ராஜாஜி முதல்வராக இருந்தபோது, குலக்கல்விஎனும் அருமையான திட்டத்தை கொண்டு வந்தார்.பகுதி நேரம் பள்ளியில் கல்வி, மீதி நேரம் தொழிற்கல்வி என்பது தான், அந்த திட்டம். உடனே, கருணாநிதி வகையறாக்கள்,வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, 'ஜாதியை ஊக்குவிக்கிறார்ராஜாஜி' என்று கூறி, அவரை, 'குல்லுக பட்டர்'என்று அழைத்து, நையாண்டி செய்தனர்.

மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை எதிர்த்தபடியே, அத்திட்டங்களின்மீது, தங்கள் அரசின் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறது, திராவிட மாடல் அரசு.

ஆட்சியாளர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்... இயந்திரங்களை, கருவிகளைவைத்து தொழில் செய்யும்அனைவரும் விஸ்வகர்மாக்களே!

இயந்திரங்களை வைத்து தொழில் செய்வது,எப்படி ஜாதியை வளர்க்கும்?

இன்று, விவசாயத்திலிருந்து, தச்சு தொழில், கொல்லர் பட்டறை, நகை பட்டறை, கம்ப்யூட்டர், நெசவு, ஜவுளி, மளிகை, ரியல் எஸ்டேட், வியாபாரம்,கல்வி, இசை, நாடகம், கலை, புரோகிதம் என, அனைத்து தொழில்களிலும்,அனைத்து ஜாதியினரும் கலந்தே உள்ளனர்.

இதில் எங்கே, தனிப்பட்டமுறையில் ஜாதியை குறிப்பிட்டு தொழில் உள்ளது?தெளிவு படுத்துவாரா முதல்வர்?



வாயுள்ள பிள்ளை!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வர முயற்சித்தபோது, 'ரஜினிகாந்த் இமயமலைக்கு தியானம் செய்ய போகலாம்; அரசியலுக்கு வருவதுதேவையில்லாத வேலை; கர்நாடகாக்காரன் தமிழகத்தைஆள நினைப்பதா...' என, ஆக்ரோஷமாக பேசினார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ரஜினி மட்டுமல்ல; தமிழ் திரையுலகைச் சேர்ந்தஎவரும் அரசியலுக்கு வருவதை சீமான் விரும்பியதில்லை.

நடிகர் விஜய் அரசியலில்நுழைவது உறுதி என்றஉடன், வேறு வழியில்லாமல், 'தம்பியை வாழ்த்தி வரவேற்கிறேன்...' என்றவர்,கூட்டணிக்கும் அச்சாரம் போட்டார்.

அவரது ஆசைக்கு, த.வெ.க., தலைவர் விஜய்,விக்கிரவாண்டி மாநாட்டில்ஆப்பு வைத்ததுடன், சீமானின் ஆக்ரோஷ பேச்சைநையாண்டி செய்யவே, ஆவேசம் அடைந்த சீமான்,விஜயின் கொள்கையை விமர்சித்து, 'ஒண்ணு அந்தப் பக்கம் போ; இல்லஇந்தப் பக்கம் போ. நடுவுலநின்னா லாரியில அடிபட்டு செத்துப் போவே...' என்று கடுமையாகவே சாடினார்.

சீமானுக்கு தன்னைவிடகட்சியினர் யாரும் வளர்ந்து, பெயர் பெற்று விடக்கூடாது. இதனாலேயே,தன் சொந்தக் கட்சியினரையே நேரிலும், மறைமுகமாகவும் திட்டித் தீர்க்க, ரோஷம் கொண்ட தம்பிகள், கூடாரத்தை காலிசெய்ய ஆரம்பித்தனர். சமீபநாட்களாக, கூடாரம் வெகுவாக காலியாகவே, பயந்து போனார், சீமான்.

இழந்து வரும் செல்வாக்கை மீட்க, இப்போது,ரஜினியுடன் ஒரு சந்திப்பு...புகைப்படங்கள்!

இனி, அவரது படத்துக்குஒரு கதை எழுதி, ரஜினி ரசிகர்களை கவர முயற்சிப்பார்!

சீமானுக்கு என்னப்பா வாயுள்ள பிள்ளை... இல்லை என்றால், இந்த இக்கட்டான நிலையிலும், கட்சியை விட்டு வெளியேறுவோரை, தன், 'சிலீப்பர் செல்'கள் என்று கூறி, 'குப்புற விழுந்தாலும்,மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் பேச முடியுமா?



நடுநிலையில் நடைபோடும் நாளிதழ்!


குரு பங்கஜி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --------------------------------------------------------'கவர்ச்சிஅறிவிப்புகளால் ஆட்சியைப்பிடித்த பா.ஜ.,' எனும் தலைப்பில், நம், 'தினமலர்' நாளிதழில் தலையங்கம் வெளியாகி இருந்தது. இதில்,பா.ஜ., மற்றும் 'இண்டியா'கூட்டணிகளின் மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றிகளை ஆராய்ந்து, நடுநிலையுடன் கருத்து கூறியிருந்தது மிகவும் பாராட்டுக்குரியது!

தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி, மகாயுதிகூட்டணியின் இலவச நலத்திட்டங்களைத் தவிர, ஆர்.எஸ்.எஸ்.,சின் அயரா உழைப்பும், ஒருங்கிணைந்த, மாநிலம் சார்ந்த தேர்தல் பிரசாரமுமே, மஹாராஷ்டிர தேர்தல் வெற்றிக்கு அடிகோலிட்டதுஎன்றால் மிகையில்லை!

சாம, தான, பேத, தண்டயுக்திகளின் வாயிலாக, ஊடகங்களை வழிக்கு கொண்டு வரும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு அடிபணியாமல்,கலங்கரை விளக்கம் போல்,கம்பீரமாக ஒளி வீசும் தினமலர் நாளிதழ், நடுநிலைபாதையில், இன்று போல் என்றென்றும் நடை போடவேண்டும்.

ஆளுங்கட்சிகளுக்கு ஜால்ரா போட்டு, வாசகர்களின் காது ஜவ்வை கிழியவைக்கும் ஊடகங்கள் மத்தியில், மனதில் பட்டதை,'பளிச்'சென்று கூறும், தினமலர் நாளேடு, நாட்டில்நடக்கும் அவலங்களையும்,ஆள்வோரின் தவறுகளையும்சுட்டிக்காட்டி, இடித்து கூறுவது என்றென்றும் தொடர வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us