தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஓட்டை இன்ஜினுக்கு, இரட்டை இன்ஜின் மேல்!

 ஓட்டை இன்ஜினுக்கு, இரட்டை இன்ஜின் மேல்!

 ஓட்டை இன்ஜினுக்கு, இரட்டை இன்ஜின் மேல்!


PUBLISHED ON : பிப் 04, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கு.அருணாச்சலம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல் முதல்வர், ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை, அதிகம் அங்கலாய்த்துக் கொண்டது, மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை; அதனால், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்பது தான்!

ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாய் நிதியும், 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களையும் கொடுத்துள்ளது, மத்திய அரசு.

நிதியை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால், தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடியாக உயர்ந்திருக்காது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில், சுருட்டுவதிலேயே குறியாக இருந்தால் கடன் அதிகரிக்கத் தானே செய்யும்!

தி.மு.க., ஆட்சிக்கு வந்த புதிதில், அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'கொள்ளையடிப்பதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டனர், அவரது பேரன், உதயநிதியும், சபரீசனும்! ஒரு சில மாதங்களில், 30,000 கோடியை சுருட்டியுள்ளனர்' என்று புலம்பிய வீடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.

தற்போது, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில், 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில், 'இரட்டை இன்ஜின் ஆட்சி'க்கான காலம் கனிந்து விட்டதாக பிரதமர் மோடி கூறியதும், 'டப்பா இன்ஜின்' தமிழகத்தில் ஓடாது' என்று கூறியுள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

பதிலுக்கு, தி.மு.க., ஆட்சியை, 'ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

தி.மு.க.,வில், 39 எம்.பி.,க்கள் இருந்தும், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. பார்லிமென்டில் கூச்சல் குழப்பம் செய்து, வெளிநடப்பு செய்வதையே தங்கள் பணியாகசெய்து வருகின்றனர். இவர்களால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை.

மாநிலத்திலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையிலிருந்து கல்வி, வேலை வாய்ப்பு, மின் கட்டணம், பத்திரப்பதிவு உயர்வு, ரவுடிசம் என்று மக்கள் திண்டாட, அதை கண்டுகொள்ளாத விளம்பர ஆட்சியாக இருக்கிறது, தி.மு.க., ஆட்சி.

எனவே, 'ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி'யை மீண்டும் தேர்ந்தெடுப்பதன் வாயிலாக தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது?

அதற்கு பதில், தமிழகத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சி அமைந்தால், ஆந்திரா, பீஹார், மஹாராஷ்டிரா போல், தமிழக மக்களும் பயன்பெறுவரே!

'பாப்' இசைக்க வேண்டாம் பாப்பையா! தி.ஞானானந்தன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை நீதிமன்றம் வரை சென்று, தீபத்துாணில் விளக்கேற்ற உத்தரவிடப்பட்டும் ஹிந்து விரோத தி.மு.க., அரசு, அதை நிறைவேற்றாததுடன், மேல்முறையீடு செய்து ஹிந்துக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில், 'மலையில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என கடவுள் முருகன் சொன்னாரா... இந்த விஷயத்தில், தீர்ப்புக்கு மேல் தீர்ப்பு கூறுவது சரிதானா?' என்று மேதாவி போல் கேட்டுள்ளார், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா.

'சாலமன்' என்று பெயர் வைத்து, பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்து தீர்ப்பு சொல்வதால், நீதியரசர்களுக்கு எல்லாம் மேலானவர் என்று தன்னை நினைத்து விட்டார் போலும்... அதுதான், திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கே தீர்ப்பு கூற புறப் பட்டுள்ளார்!

மரம் முத்தினால் வைரம்; மனுஷன் முத்தினால் புத்தி. முற்றிய மரத்திற்கு இருக்கும் வலுவைப் போல், வயது முதிர்ந்த மனிதனுக்கு புத்தி கூர்மை இருக்க வேண்டும். அதில் குறைவு ஏற்பட்டால், இப்படித்தான் முட்டாள்தனமாக உளறத் தோன்றும்!

'இந்த இடத்தில் தான் தீபமேற்ற வேண்டும்' என்று கடவுள் முருகன் வந்து சொன்னால் தான், அங்கு தீபமேற்ற வேண்டுமா?

அப்ப, கடவுள் இயேசு கிறிஸ்து நேராக வந்து சொல்லித் தான், நீங்கள் எல்லாம் சர்ச்சுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகிறீர்களோ!

அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? கிறிஸ்துவரான பாப்பையாவுக்கு ஹிந்து மதத்தின் அடி தெரியுமா, நுனி தெரியுமா?

பட்டிமன்றத்திற்கு காசு வாங்கினால், அதற்காக மட்டும் பாப்பையா, 'பாப்' இசைக்கட்டும்; பிற மத வழிபாட்டில் மூக்கை நுழைக்க வேண்டாம்!

விவேகத்துடன் செயல்படுவாரா பழனிசாமி?



கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:



வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி, ஒருவழியாக மெகா கூட்டணியை அமைத்துவிட்டார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

அடுத்தபடியாக, அ.தி.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் இடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் அக்கறை காட்ட வேண்டும். முக்கியமாக, கட்சியினர் உள்ளடி வேலையில் ஈடுபடுவதை கட்டுப் படுத்த வேண்டும்.

இவ்விஷயத்தில் ஜெயலலிதா மிகவும் கவனமாக இருப்பார்.

உதாரணமாக, நடிகர் கருணாசை சொல்லலாம். ஜெயலலிதாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கட்சியினர் அவரை ஜெயிக்க வைத்தனர். இல்லையெனில், கருணாஸ் போன்ற நபர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., ஆகி இருக்க முடியுமா?

அதேபோன்று, சிறுபான்மை ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக, பெரும்பான்மை ஹிந்துக்கள் மனம் நோகும்படி பழனிசாமி செயல்படக் கூடாது. இது, பா.ஜ., தொண்டர்களிடம் விரக்தியை ஏற் படுத்தி விடும்.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவரும், என்றுமே ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்பதை பழனிசாமி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தேர்தலில் தோற்றால், பா.ஜ.,வுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; ஆனால், அ.தி.மு.க., தோற்றால் அதற்கு எதிர்காலம் இல்லை; இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

கடந்த 2016ல் பழனிசாமி முதல்வரானது, விபரீத ராஜயோகம் என்றே சொல்லலாம். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, நிதானமாக ஆட்சி செய்தார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. எனினும், அதே நினைப்பில் மிதப்பாக இருந்தால் களம் மாறிவிடும்.

எனவே, வீரத்தோடும் விவேகத்தோடும் பழனிசாமி களம் ஆட வேண்டிய நேரம் இது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us