PUBLISHED ON : ஜூன் 22, 2026 12:35 AM

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பா.ஜ., தனி நபர்கள் சார்ந்த கட்சி இல்லை; இங்கிருந்து வெளியேறிய எவரும் பிரகாசித்ததாக சரித்திரம் இல்லை' என்று அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நீண்டகாலம் பா.ஜ.,வில் பயணித்து வரும் ராஜாவிற்கு சில கேள்விகள்:
l ஒரு காலத்தில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என்று விமர்சிக்கப்பட்ட பா.ஜ.,வை, அந்த அவமானத்திலிருந்து மீட்டெடுத்து, கட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது யார்?
l 2019- லோக்சபா தேர்தலில், 3.66 சதவீதமாக இருந்த ஓட்டு வங்கி, 2024- தேர்தலில், 10.49 சதவீதமாக உயர காரணமாக இருந்தது யார்?
l 2021 சட்டசபை தேர்தலில், 4.2 சதவீதமாக இருந்த ஓட்டு வங்கி, 2026- தேர்தலில், 2.97 சதவீதமாக சரிய காரணம் என்ன?
l பா.ஜ., ஒரு மதவாதக் கட்சி, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று திராவிட கும்பல்களால் கட்டமைக்கப்பட்ட போலியான பிம்பத்தை உடைத்தெறிந்து, சிறுபான்மையினரின் ஆதரவைப்பெற ராஜா உள்ளிட்ட தலைவர்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் என்ன?
l தன் நடை பயணத்தின்போது இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் சந்தித்து அவர்களது மனங்களை வெல்லும் முயற்சியை மேற் கொண்டவர் யார்?
l திராவிட சித்தாந்தத்தில் ஊறிப்போன தமிழக மக்களின் மத்தியில், தேசிய சிந்தனையை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டது யார்?
l ராம.சீனிவாசன், நாராயணன் திருப்பதி, எச்.ராஜா உள்ளிட்ட அறிவார்ந்த தலைவர்கள் பலர் கட்சியிலிருந்தும், படித்த இளைஞர்களின் மனதில் இடம்பெற முடியாமல் போனது ஏன்?
l அக்குறையைப் போக்கி இளைஞர் பட்டாளத்தை தன் பின் அணிவகுக்கச் செய்தவர் யார்?
l குஜராத் மாநிலத்தில், 1995 முதல் 30 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ., ஓர் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. பா.ஜ.,வின் காலடி தடமே இல்லாமல் இருந்த ஒடிஷா விலும், மே.வங்கத்திலும் கூட இன்று, அக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப் பற்றியுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக ஒரு எம்.பி.,யைக் கூட உருவாக்க முடியாமல் போனது ஏன்?
அத்தனை, 'யார்'களுக்கும் ஒரே பதில் அண்ணாமலை என்ற தனி நபர் தான் என்பதை எச்.ராஜா மறுக்க முடியுமா?
இத்தனை காலமாக தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாமல் போனதற்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள் வெட்கப்பட வேண்டாமா?
எனவே, வாய்ச் சவடாலை நிறுத்திவிட்டு, கட்சி வளர இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்! lll
வயதை குறையுங்கள்!
எல்.ரவி, செ.புதுார், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய காலகட்டத்தில், 40 வயது ஆகிவிட்டாலே, உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு, அன்றாட வேலைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மத்திய- - மாநில அரசுகள், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, 60- ஆக உயர்த்தி உள்ளன.
இது, உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படும் வயது. மேலும், பல்வேறு உடல் நல பிரச்னைகளும் ஏற்படும்; இதனால், அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வர்.
அதேநேரம் இவர்களை விட திறமையும், தகுதியும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை இல்லாமலும், தனியார் நிறுவனங்களில் சொற்ப சம்பளத்திலும் பணியாற்றுகின்றனர்.
ஒரு நாடு வேகமாக வளர்ச்சியடைய வேண்டுமென்றால், இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம். எனவே, மத்திய- - மாநில அரசு ஊழியர்களுக்கான பணி நிறைவு வயதை, 55 ஆக குறைக்க வேண்டும். காலியாகும் இடங்களில் சுறுசுறுப்பும், வேகமும் உள்ள இளைஞர்களை நியமிக்க வேண்டும்!
ராஜராஜ சோழனின் பேரனா கருணாநிதி?
லால்குடி வெ.நாராயணன், மாம்பாக்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக ஆட்சியாளர்கள் குறித்து பேசும் போது, 'கோட் சூட் போட்டவன் மட்டுமல்ல; கோவணம் கட்டியவனும் நாளைக்கு ஆட்சிக்கு வருவான்' என்று பேசியுள்ளார், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி.
கருணாநிதி என்ன ராஜராஜ சோழனின் பேரனா?
மஞ்சள் பையுடன் ரயில் ஏறி வந்தவர் தானே... அவரும், அவரது வாரிசுகளும் முதல்வர் ஆகலாம்; கோட் சூட் போட்டவர்களும், கோவணம் கட்டியவர்களும் ஆட்சிக்கு வரக் கூடாதா?
அந்த கோவணம் கட்டியவன் வெயிலிலும், மழையிலும் கொடி பிடித்து, போஸ்டர் ஒட்டியதால் தான், இந்த சமூக நீதி காவலர்களால் அரியணை ஏற முடிந்தது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம், எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்கிறது. தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றால், கோவணம் கட்டியவர் மட்டுமல்ல; அன்னக்காவடி கூட இந்நாட்டை ஆளலாம்.
அதற்கு பெயர் தான் ஜனநாயகம்!
மாறாக, கருணாநிதி யின் வாரிசுகளும், அவர்களுக்கு அடிவருடிக் கொண்டிருப்பவர்கள் மட்டும் ஆள்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல!
ஒற்றுமைக்கு வழிகோலும்!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் நாட்டின், 144 கோடி மக்கள் நிம்மதியாக துாங்கி எழுகிறோம் என்றால், அதற்கு காரணம், நம் ராணுவ வீரர்கள்!
தமிழகத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் பார்த்திபன், 2006ல் ஜம்மு- -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போராடி வீர மரணம் அடைந்ததற்காக 2007ல் 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டது .
கடந்த 2014ல் மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளை வீழ்த்தி உயிர்நீத்ததற்காக 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டது. 2020 கல்வான் மோதலில் வீர மரணம் அடைந்த அவில்தார் பழனிக்கு 'வீர் சக்ரா' விருது வழங்கப்பட் டது.
இதையடுத்து, 2024 டிசம்பரில் குல்காமில் காயமடைந்த நிலையிலும் பயங்கரவாதிகளை எதிர்கொண்ட லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு தற்போது 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது; தமிழக அரசும் 48 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
இத்தகைய வீரர்களின் தியாகங்களை ஆவணப்படங்களாக உருவாக்கி இளைஞர்களிடம் கொண்டு சென்றால், தேசப்பற்றும் தேசிய ஒற்றுமையும் மேலும் வலுப்படும்.
