தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கும்!

உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கும்!

உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கும்!

3


PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகம் முழுதும் அதிகம் நேசிக்கப்படும் விளையாட்டு கால்பந்து; ஆனால், 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, ஒருமுறை கூட உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.


கிரிக்கெட்டில் பிஎச்.டி., வாங்கிய நாம், கால்பந்து விளையாட்டில் இன்னும் பால்வாடி பிள்ளைகளாகவே இருக்கிறோம்.

உலகின் முன்னணி கால்பந்து நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மன், உருகுவே, பிரான்ஸ் போன்ற நாடுகள், கிராமங்களில் கூட இதற்கான பயிற்சி மையங்களை வைத்துள்ளன; நம் நாட்டிலோ தரமான மைதானங்கள் கூட இல்லை.

மேலும், எட்டு அல்லது 10 வயதிலேயே வீரர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க ஆரம்பித்து விடுகின்றன இந்நாடுகள்.

நம் நாட்டில், 16 அல்லது 18 வயதுக்குப் பின் தான், முறையான பயிற்சியையே பெறுகின்றனர். அதற்குள், உலக நாடுகளுடன் போட்டி போடக் கூடிய காலமே கடந்து விடுகிறது.

உலகக் கோப்பை தகுதி பெற வேண்டுமெனில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தொடர்ச்சியான பயிற்சியும், திட்டமிடலும் தேவை.

இவ்வளவு பிரச்னைக்கு மத்தியிலும் அகில இந்திய கால்பந்து அமைப்பு, இந்தியன் பிரீமியர் குழு போன்ற தொழில்முறை குழுக்கள் வாயிலாக கால்பந்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வேலையை செய்து வருகின்றன.

தமிழகத்திலும் இதற்காக பல முயற்சிகளை எடுத்து வரும் விளையாட்டு துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, 'அடுத்த, 20 ஆண்டுகளுக்குள் உலக அளவில் இந்தியா குறிப்பாக, தமிழக வீரர்கள் அதிக வெற்றிகளை குவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அவ்வகையில், தமிழக வீரர்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வேண்டுமெனில்...

* ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்பந்து அகாடமிகள் அமைக்க வேண்டும்

* பள்ளிக் கல்வியில் தினசரி விளையாட்டு வகுப்பை கட்டாயமாக்க வேண்டும்

* திறமையான வீரர்களுக்கு முழுமையான உதவித்தொகை வழங்க வேண்டும்

* உலகத் தர பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்

* மாநில மற்றும் தேசிய அளவிலான குழுக்களை வலுப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு, நாம் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றாலும், சரியான திட்டமிடல் இருந்தால், 2038 அல்லது 2042 உலகக் கோப்பை போட்டிகளில், இந்தியா தகுதி பெறும்.

அன்று, கிரிக்கெட்டைப் போல், கால்பந்திலும் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்!





******


இவர்களா கொள்கைவாதிகள்?


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'கொள்கை இல்லாதவர்கள் தான் கட்சியை விட்டு போகின்றனர்; கொள்கை உள்ளவர்கள் கட்சியில் அப்படியே இருக்கின்றனர்' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த முனுசாமி, அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்காமல் போனதால், அவரால் அமைச்சர் ஆக முடியவில்லை.

அதனால், தன்- நான்கு ஆண்டு கால ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்; அப்பதவி தி.மு-.க.,வுக்கு சாதகமாகி விட்டது-.

அதேபோல், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சண்முகம், அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அ.தி.மு.க., தோல்வி அடைந்ததால், தன்- நான்குஆண்டு கால எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அது, த.வெ.க.,வுக்கு சாதகமாகி விட்டது.

ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்ந்தெடுக்க, 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு வேண்டும். அந்த, 36 எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் வெற்றி பெற, கடைக்கோடி தொண்டர்கள் இரவு - பகல் பாராமல் உழைக்க வேண்டும். அவ்வகையில் நுாற்றுக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு இன்று, மாற்றுக் கட்சிக்கு சென்று விட்டது.

கடந்த 1972ல் அ.தி.மு.க., ஆரம்பிக்கப்பட்ட போது, எம்.ஜி.ஆர்., முதல் உறுப்பினர் என்றால், கே.ஏ.கிருஷ்ணசாமி எம்.பி., இரண்டாவது- உறுப்பினர்.

கடந்த 1977ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபோது, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் அமைச்சராக இருக்க விரும்பினார், கிருஷ்ணசாமி.

அதற்கு, 'தி.மு.க., உனக்கு அளித்து இருக்கும் எம்.பி., பதவியின் காலம் முடியும் வரை காத்திரு; ராஜினாமா செய்ய வேண்டாம்' என்று அறிவுரை கூறிய எம்.ஜி.ஆர்., அவரது பதவி காலம் முடிந்ததும் தான், 1978ல் சட்டசபை மேலவை உறுப்பினர் ஆக்கி, கிருஷ்ணசாமியை பால்வளத்துறை அமைச்சர் ஆக்கினார்.

அ.தி.மு.க., மேடைப் பேச்சாளர் நடிகை விந்தியா, கடந்த 20 ஆண்டுகளாக, தி.மு.க.,வை மேடைகளில் விளாசி வருகிறார். அவரை போன்ற தீவிர விசுவாசிகளுக்கு, அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், பழனிசாமியின் மகன் மிதுனை, அ.தி.மு.க.,வில் இணைத்து, கட்சியை படு குழியில்தள்ள துடிக்கின்றனர். அதற்கு அச்சாரம் போடுவதே முனுசாமிதான்!

பழனிசாமியின் மகன் கட்சிக்காக என்ன தியாகத்தை செய்து விட்டார் என்று, காஞ்சிபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அவரது பெயரை முனுசாமி முன் மொழிந்தார்? இவர் தான் கொள்கைவாதியா?

***

சீர்திருத்த பணிகளை துவங்குமா?


வி.எச்.கே.ஹரிஹரன் , திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் கவுரவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களின் ஜாதி - மதம் பாராமல், மக்கள் அவர்களுக்கு ஓட்டளித்து, வெற்றி பெற வைத்துள்ளனர்.

அதேபோன்று தமிழக அமைச்சரவையும், ஜாதி, மதம் கடந்து அனைவருக்கும் சமமான பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதையே முன்னுதாரணமாக வைத்து, மக்கள் மனதில் இருந்து ஜாதிய மேலாதிக்கத்தை நீக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

எவ்வளவு செல்வாக்கு, அதிகாரம் மிக்கவராக இருந்தாலும், அவர் ஜாதிய பார்வையால் பாதிக்கப்படுகிறார். நீதிபதிகளும் இதற்கு விலக்கு இல்லை; சட்டத்தின்படி நீதிபதி தீர்ப்பு கூறினாலும், அதில் ஜாதிய உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது.

நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற தியாகிகளையும் ஜாதி அடிப்படையில் முன்னிறுத்துகின்றனர்.

இந்த மனோபாவத்தை ஒழிக்க வேண்டும் என்றால், பள்ளிகளில் இருந்து அதற்கான சீர்திருத்த வேலைகளை துவங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது, நீதிமன்றம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us