தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ காங்., கரை சேருவது எப்படி?

காங்., கரை சேருவது எப்படி?

காங்., கரை சேருவது எப்படி?


PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கவுரிகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'புனித நீராடுவதால், நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா? இதனால் என்ன ஆகப்போகிறது? நான் யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்கவில்லை. 'போட்டோஷூட்' எடுப்பதற்காக, பா.ஜ.,தலைவர்கள் கங்கையில் போலியாக நீராடுகின்றனர்' என, புலம்பித் தள்ளியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்து விடுமா என்று கேட்பது, யாருடைய நம்பிக்கையை விமர்சித்து என்பதை, கார்கே சொல்ல வேண்டும்.

'போட்டோஷூட்' எடுப்பதற்காக, பா.ஜ., தலைவர்கள் கங்கையில் போலியாக நீராடுகின்றனராம்...

கங்கையில் இறங்கிவிட்டால், உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தண்ணீர் பட்டு விடுமே... இதில், போலியாக எப்படி நீராட முடியும்?

படித்துறையில் நின்றவாறு, உள்ளங்கையில் கங்கை நீரை எடுத்து, தலையில் தெளித்து கொண்டால், கார்கே சொல்வது போல, போலியாக நீராடுவதாக சொல்லலாம்.

அவர்கள் தான் முழு உடலையும் நீருக்குள் அமிழ்த்தி நீராடுகின்றனரே... அது எப்படி போலியாகும்?

பா.ஜ., தலைவர்கள் ஒவ்வொருவரும் நாட்டுப்பற்றோடு, கடவுள் பக்தியும் கொண்ட வர்கள்; அவர்களுக்கு இதில் வேஷம் போடத் தெரியாது; போடவும் மாட்டார்கள்.

'போட்டோஷூட்' எடுத்து விளம்பரம் செய்து கொள்வதெல்லாம், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள, உங்கள் கூட்டணி கட்சியான திராவிட மாடல் அரசியல்வாதிகள் செய்வது!

புனித நீராடுவதால், நாட்டில் வறுமை ஒழிந்து விடுமா என்று கேட்டுள்ளீர்கள்...

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதால், வறுமை ஒழிந்துவிடும் என்று பா.ஜ.,வினரோ, பிரதமர் அல்லது உ.பி.,முதல்வர் யோகி என, எவராவது சொன்னரா?

இந்த நாட்டை ஏறக்குறைய, 60 ஆண்டுகள் ஆண்ட காங்., ஆட்சிக் காலத்தில், ஐந்து கும்பமேளாக்களாவது வந்திருக்க வேண்டும்.

அப்போது, காங்., கட்சி என்ன செய்தது?

திரிவேணி சங்கமத்தில் நீராடினால், வறுமை ஒழியாது என்று, நீராட தடை விதித்ததா என்ன!

இந்த மாதிரி கோமாளித்தனமாக பேசினால், காங்., கட்சி கரை சேருவது எப்படி?





ஏன் செய்யவில்லை?


பெ.வடிவேல், நாகல்நகர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கேக்கிறவன் கேனயனா இருந்தால், கேரம்போர்டை கண்டுபிடிச்சது, சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்னு சொல்வானுங்க' என்று, ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை வசனம் வரும்.

அதுபோல், ஸ்டாலின் கடிதம் எழுதினாராம்... மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சட்டசபையில் தீர்மானம் போட்டாராம்... உடனே, மத்திய அரசு பணிந்து, டங்ஸ்டன் சுரங்க டெண்டரை நிறுத்தி விட்டதாம்!

'நீட்' தேர்வை நீக்க கோரியும் தான், சட்டசபையில் தீர்மானம் போட்டீர்கள்... அது ஏன் நடக்கவில்லை?

ஸ்டாலின் கொடுக்கும் அழுத்தத்திற்கு, மத்திய அரசு பணியும் என்றால், அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது, ஏன் அங்கு சென்று, அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தை கூறவில்லை? மாறாக போராடியவர்களை கைது செய்தது ஏன்?

இன்று அம்மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்றால், அதற்கு முழு முதற்காரணம், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை!

ஆனால், திட்டம் ரத்து என்றதும், அதற்கு, லேபிள் ஒட்ட முதல் ஆளாக கிளம்பி விட்டார், ஸ்டாலின்.

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ சொல்வார்... 'காவிரி பிரச்னைக்கும், பெரியாறு பிரச்னைக்கும் கருணாநிதி கடிதம் எழுதுவார்; தம் குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவி வாங்குவது என்றால், டில்லிக்கு நேரில் செல்வார்' என்று!

அதை அப்படியே பின்பற்றுகிறார் ஸ்டாலின்... டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடியபோது, அவர்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லி, திட்டத்தை ரத்து செய்ய, ஸ்டாலின் எத்தனை முறை டில்லி சென்றார்?

அதேபோன்று, வைக்கம் போராட்ட விழா கொண்டாட கேரளா சென்ற முதல்வர், 'தமிழன்னை' படகு தேக்கடியில் நீந்துவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்?

பேபி அணையில் பராமரிப்புக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், கேட்பாரற்று மாதக்கணக்கில் கீழே கொட்டிக்கிடக்கிறதே... அது குறித்து எப்போதாவது பேசியுள்ளாரா?

மத்திய அரசுக்கு அழுத்தம் தந்த ஸ்டாலினால், தங்கள் கூட்டணி கட்சியினரான கர்நாடக, கேரள முதல்வர்களிடம் பேசி, தமிழகத்தின் நீர் ஆதார உரிமையை பெற்றுத் தர ஏன் முடியவில்லை?

இதிலும், அழுத்தத்தைக் காட்டியிருக்கலாமே... ஏன் செய்யவில்லை?



கைகலப்பை விரும்புகிறதோ அரசு?


கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரு,கர்நாடக மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஈ.வெ.ரா., குறித்து, சீமான் அவதுாறாக பேசிவிட்டார் என, அவர் வீட்டை சில தினங்களுக்கு முன் முற்றுகையிட்டன, சில தி.க., ஆதரவு அமைப்புகள். இதற்கு, ஆளும் தி.மு.க.,வும், அதன் தோழமை கட்சிகளும் வெளிப்படையாகவே ஆதரவு தந்தன.

ஈ.வெ.ரா., பற்றிய சீமான் கருத்துகளில் உண்மை இல்லை என்றால், அதை ஆதாரத்துடன் மறுத்துப் பேச வேண்டியது தானே... இவர்கள் தான், ஈ.வெ.ரா.,வின் அனைத்து சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரர்கள் ஆயிற்றே... பின் ஏன் கருத்து மோதலை கைவிட்டு, முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும்?

சீமான் மீதுதான், 70க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளதே... நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாதா?

ஒவ்வொரு கட்சியினரும், தங்கள் கொள்கைக்கு மாறான கருத்தைக் கூறுவோரின் வீட்டை முற்றுகையிட கிளம்பினால், நிலைமை என்ன ஆகும்?

சனாதன தர்மத்தை கேவலமாக பேசுவதும், குறிப்பிட்ட சமுதாய மக்களை தொடர்ந்து இழிவாகப் பேசுவதும், திராவிட மாடல் ஆட்சியின் கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றால், சீமான் பேசியதும் கருத்து சுதந்திரம், பேச்சுரிமை தானே... கருத்து சுதந்திரம் என்பது திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும், ஈ.வெ.ரா., கோஷ்டி யினருக்கும் மட்டும் தான் இருக்க வேண்டுமா!

வள்ளுவன் ஆரிய கைக்கூலி, முட்டாள்; இளங்கோவன், கம்பன் அடி முட்டாள்கள், சிலப்பதிகாரம் குப்பை, திருக்குறள் மலம் இப்படி எல்லாம் ஒருவர் தமிழ் மண்ணில் பேசலாம்; அதற்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது.

அதேநேரம், அதை மறுத்துப் பேசவும், எதிர்கருத்தை வைத்தால், முற்றுகை போராட்டம் நடத்தவும் புறப்படுவீர்களா?

ஈ.வெ.ரா., என்ன, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதரா?

முற்றுகை போராட்டம் எனும் ஜனநாயக கேலிக்கூத்துகளுக்கு, இந்த அரசு இடம் கொடுத்தால், காலம் அதே பாடத்தை, திருப்பித் தரும் என்பதை, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us