தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/பழனிசாமிக்கு எப்படி ஓட்டு போடுவது?

பழனிசாமிக்கு எப்படி ஓட்டு போடுவது?

பழனிசாமிக்கு எப்படி ஓட்டு போடுவது?


PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.எஸ்.ரவி சங்கர், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 80களில், பிரதமராக இருந்த இந்திராவின் மகன் ராஜிவ், ஆந்திரா சென்று கிளம்பத் தயாரானபோது, அவரது செருப்பைத் துாக்கியபடி, அம்மாநில அப்போதைய முதல்வர் அஞ்சய்யா, விமான நிலையம் ஓடினார் என்ற செய்தி பரபரப்பானது.

இதையே பிரசாரமாக வைத்து, 'ஆந்திர மக்களின் கவுரவத்தைக் கேவலப்படுத்திய காங்கிரஸ்' என்ற முழக்கத்துடன், 1982ல் கட்சி துவங்கி, 1983லேயே, ஆட்சியைப் பிடித்தார் என்.டி.ஆர்.,

தமிழகத்தில், 1972ல் தி.மு.க.,வின் கணக்கைக் கேட்டார் என்ற காரணத்திற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டஎம்.ஜி.ஆர்., 1977ல் ஆட்சியைப் பிடித்தார்.

கருணாநிதிக்குப் பொறுக்கவில்லை. 1980ல் பிரதமர் பதவி ஏற்ற இந்திராவிடம் சொல்லி, எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தார். அப்போது போனது கருணாநிதி மீதான மரியாதை.

அந்த ஆண்டில், நாமக்கல்லில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம். சேலம் மெயின் ரோடு துவங்கி, கூட்ட மேடை வரை, எங்கு பார்த்தாலும் மக்கள் தலை. மக்களைப் பார்த்த எம்.ஜி.ஆர்., 'நான் என்ன தவறு செய்தேன்? என்னுடைய ஆட்சியை எதற்காக கலைத்தனர்?' என்று ஒரே கேள்வி கேட்டார்.

கருணாநிதி - காங்., கூட்டணியை ஒன்றுமில்லாமல் செய்து, அமோக வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறினார்.

அன்று முதல், என்னைப்போன்றவர்கள், இன்றும் இரட்டை இலைக்கு தான் வாக்களித்து வருகிறோம்.

ஆனால், கட்சியின் தற்போதைய பொதுச் செயலர் பழனிசாமியின் நடவடிக்கையைப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. கண்ணை கருப்புத் துணியால் கட்டியபடி, உலகே இருண்டு விட்டது என்கிறார்.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, ஜெயலலிதாவின் உறுதி, கட்சியைக் காப்பாற்றுவதற்காக அரசியலிலிருந்து ஒதுங்கிய ஜானகி ஆகியோரின் குணங்களில் ஒன்று கூட, பழனிசாமியிடம் இல்லை. நாங்கள் எப்படி இவருக்கு ஓட்டு போடுவது?

'அடிச்சு' விடுவோமே... நடக்கவா போகுது!


சுப்ர.அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரசில், ராகுல், சோனியா, பிரியங்கா இருக்க, மல்லிகார்ஜுன கார்கே ஒரு ஒப்புக்கு சப்பாணி என்பது, நம் நாட்டிலுள்ள எல்.கே.ஜி., பாப்பாவுக்கு கூட தெரியும்; வரும் தேர்தலில் இக்கட்சி, மொத்தம் 20 தொகுதிகளில் வென்றாலே அதிசயம் தான் என்பது, பேபி கிளாஸ் பசங்களுக்கு கூட புரியும்.

நிலைமை இப்படி இருக்க, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிகவும் ஏழ்மையில் குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, ௧ லட்சம் ரூபாய் தருவோம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு உணவு, உறைவிடம் கூடிய ஹாஸ்டல் கட்டுவோம். அரசு வேலைகள் அனைத்திலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவோம்' என, 'நாரீ நியாயம்' பேசியிருக்கிறார் ராகுல்.

கட்சிக்குள்ளேயே பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் 'டம்மி' தலைமையை வைத்துக் கொண்டு திண்டாடும் இவர்களுக்கு, இப்படி வாயால் வடை சுடுவதில் சிறிது கூட வெட்கம் இல்லை போலும்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் எடுத்துப் பரிமாற முடியும்? எல்லாம் காமெடி தான் போங்க!

முதல்வருக்கு கவனம் இல்லையே?


எஸ்.செபஸ்டின், சிவகாசி,விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி. ஆருக்குப் பின், ஆளுமை நிறைந்த முதல்வர்களாக, கருணாநிதியும், ஜெயலலிதாவும் திகழ்ந்தனர்.

கருணாநிதிக்கு அபார நினைவுத் திறன் உண்டு. முப்பது ஆண்டுகளுக்குப்பின் ஒருவரைப் பார்த்தால் கூட, பெயர் சொல்லி அழைத்து அரவணைப்பார்.

இவ்விருவருமே, உளவுத் துறையில் தங்களுக்கு விசுவாசமான, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமித்து, அவர்களை முழுமையாக நம்பி செயல்படுவர்.

முதல்வரின் அருகிலுள்ளவர்கள் பற்றியோ, இவர்களின் குடும்பத்தினர் பற்றியோ ஒரு மாறுபட்ட தகவலை உளவுத்துறை கூறினாலும், அதைச் சரி செய்ய முயன்றனர்.

தற்போதைய முதல்வர்ஸ்டாலின் அப்படி இல்லை.

ராமநாதபுரம் மாவட்டம், கீழ்செல்வலுார் கிராமத்தைச் சேர்ந்த வினோத்பாபு என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில், தான் வென்றதாகக் கூறி, போலி கோப்பையுடன், முதல்வர் அருகே நின்று போட்டோ எடுத்திருக்கிறார்.

தன்னைச் சந்திக்க வருபவர்களின் முழு பின்னணியை அறியாமல் முதல்வர் இருப்பது அம்பலமாகி உள்ளது. போதைப் பொருள் விற்பனையாளர் ஜாபர் சாதிக் விஷயத்திலும் அப்படி தானே நடந்துள்ளது!

ஜாபர் சாதிக்கின் பின்னணி, 'பகீர்' ரகமாக உள்ளது. முதல்வர் ஏன் கவனம் இல்லாமல் செயல்படுகிறார் எனத் தெரியவில்லை!



கனவில் மட்டுமே நல்ல தீர்வு!


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியில், 9 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி, நெஞ்சை பதற வைக்கிறது.

கஞ்சா போதைக்கு அடிமையான ஒரு இளைஞன் செய்த இக்குற்றத்தில், ஒரு முதியவரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது நம்மை வெட்கப்பட வைக்கிறது.

இத்தகைய கொடூர குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மட்டும் போதாது; பொதுமக்கள் முன்னிலையில் அது நிறைவேற்றப்பட வேண்டும்.

நைஜீரியா, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல நாடுகளில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வெளிப்படையாக பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை பார்ப்போர், கதிகலங்கிப் போவர். இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாவண்ணம் தடுக்கப்படுகிறது.

அதேபோல், போதைப் பொருள் வைத்திருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் உடனடியாக துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதில், சிங்கப்பூர் முன்மாதிரியாக உள்ளது. அங்கு எந்த ஒரு போதை வஸ்துவையும், எவரும் எங்கும் பரிவர்த்தனை செய்ய முடியாது.

இத்தகைய தண்டனையை நம் நாட்டில் அமல்படுத்த முடியாதா? முடியாது!

ஏனெனில், இங்கு அரசே போதைப் பொருளான மது வகைகளை தெருத் தெருவாக விற்பனைசெய்து, பொதுமக்களை நோயாளிகளாக ஆக்கி விட்டது. தமிழகத்தின் மனித வளம் மிகவும் பாழ்பட்டு கிடக்கிறது.

இத்தகையோரிடம் நல்ல தீர்வை எதிர்பார்ப்பது, கனவில் தான் நடக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us