PUBLISHED ON : மார் 23, 2026 12:12 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பார்லிமென்ட் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர், 'இண்டி' கூட்டணியினர்.
ஒரு நாள் கூட்டத்தொடருக்கு ஆகும் செலவு, ஒன்பது கோடி ரூபாய்; இதில், உறுப்பினர்கள் அலவன்ஸ், பாதுகாப்பு, பராமரிப்பு, மின்சாரம், குடிநீர் மற்றும் பல இதர செலவுகளும் அடங்கும்!
அமளியால் சபையை ஒத்தி வைத்தாலும், முடக்கினாலும் இந்த செலவுகள் குறையப் போவதில்லை. காரணம், உறுப்பினர்களுக்கு அலவன்ஸ், பாதுகாப்பு போன்ற சலுகைகளில் எந்த குறைவும் இருக்காது. ஏனென்றால், அவர்கள் மக்கள் சேவகர்கள் ஆயிற்றே!
தகுந்த காரணமின்றி சபையை முடக்கும் எதிர்க்கட்சிகளால், ஒரு மணி நேரத்திற்கு, 1.30 கோடி ரூபாயும், ஒவ்வொரு நிமிடத்திற்கு, 2.30 லட்சம் ரூபாயும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
தங்களது தொகுதி பிரச்னைகளை பேசி தீர்வு காண்பர் என்ற நம்பிக்கையில்தான், பிரதிநிதிகளை தேர்வு செய்து சபைக்கு அனுப்பி வைக்கின்றனர், மக்கள்.
ஆனால், அதற்கு மாறாக கூட்டத்தொடர் துவங்கிய நாள் முதல், முடியும் வரை, தேவையற்ற பிரச்னைகளை எழுப்பி ரகளையில் ஈடுபட்டு, சபையை முடக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
தோற்றுப்போகும் என்று தெரிந்தே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, சபையின் நேரத்தை வீணடித்தனர், எதிர்க்கட்சியினர்.
பிரதமரின் இருக்கைக்கே சென்று, பதாகை ஏந்தி பிரதமரை சபைக்கு வர விடாமல் மறியல் செய்த சில பெண் உறுப்பினர்களால், சபையின் பல மணி நேரம் வீணானது.
தற்போது, தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திரிணமுல் காங்கிரஸ் தலைமையில் ஒன்று கூடி, சபையை முடக்கி வைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய செயல்பாடுகளால் மக்கள் வரிப்பணமும், சபையின் பொன்னான நேரமும் வீணாவது குறித்து இவர்களுக்கு துளியும் கவலையில்லை.
குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட இவர்கள் தங்களது தொகுதி பிரச்னை குறித்து பேசவில்லை. இது, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் அல்லவா?
இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன நன்மை செய்து விடுவர்?
எனவே, தகுந்த காரணமின்றி சபையை முடக்கினால், அதனால் ஏற்படும் இழப்பீட்டிற்கு சம்பந்தப்பட்ட கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தால் மட்டுமே, இவர்களது கொட்டம் அடங்கும்!
சாபக்கேடு!
முரளி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'இதோ தேர் வந்து விடும்; அம்புறா பறக்க பவனிவரப் போகிறோம்' என்பது போல், கடந்த இரு மாதங்களாகவே இந்த வாரம் கூட்டணி அமையும்; அடுத்த வாரம் அமையும் என்று இழுத்துக் கொண்டு போன பா.ம.க., ராமதாஸ் அணி, ஒருவழியாக சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டது.
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா என்று மிகப் பெரிய ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்த ராமதாஸ், இன்று சொந்த மகனின் மீதான பகையின் காரணமாக, நகைப்பிற்கு இடமளிக்கும் நிலையில் தன் அரசியல் நகர்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த 40 ஆண்டுகளாக ஜாதி அரசியலை முன்னிறுத்தி வளர்ந்த ராமதாசும், எங்கோ கேசட் கடை வைத்து பிழைப்பு நடத்தி, ஜெயலலிதாவின் தயவில் கோடீஸ்வரியான சசிகலாவும், தாங்கள் இதுவரை சார்ந்திருந்த இயக்கங்களை எதிர்த்து இன்று களத்தில் நிற்கின்றனர்.
மாம்பழ சின்னத்திற்கு எதிராக ராமதாசும், இரட்டை இலைக்கு எதிராக சசிகலாவும் ஓட்டு சேகரிப்பதை கொள்கை மாற்றம் என்று சொன்னால், பச்சைப் பிள்ளை கூட பழிக்கும்.
இது கொள்கை மாற்றத்திற்கான கூட்டணி அல்ல; பழிவாங்கும் அரசியல் கணக்கீடு!
ஏற்கனவே, அ.தி.மு.க., - தி.மு.க., என இருமுனையாக இருந்த தேர்தல் களம், நடிகர் விஜயின் வருகையால் மும்முனை களமாக மாறி, எவருடைய ஓட்டு பிரியுமோ என்ற பயத்தை இரு திராவிட கட்சிகளுக்கும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமதாஸ் - சசிகலா கூட்டணி மேலும் ஓர் ஓட்டு பிரிப்பு வேலையை செய்ய களத்தில் குதித்துள்ளது.
இக்கூட்டணியின் பிரதான நோக்கம்... வன்னியர் மற்றும் முக்குலத்தோர் ஓட்டுகள் முழுமையாக, அ.தி.மு.க.,விற்கு செல்ல விடாமல் தடுத்து, தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவுதன் வாயிலாக, தங்களுக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை; எதிரியின் ஒரு கண்ணை குருடாக்குவது என்பது தான்!
'நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து, குழப்பத்தை உண்டாக்கியது தி.மு.க.,' என்ற அன்புமணியின் குற்றச்சாட்டிற்கு இப்போது அர்த்தம் புரிகிறது.
திராவிட கட்சிகளின் வருகைக்கு பின், மக்கள் அரசியல் என்பது மாயமாகி, ஜாதி அரசியல் உதயமாகி, அது தேர்தல் அரசியலாக மாறி, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி வரும் நிலையில், தற்போது, பழிவாங்கும் அரசியலும் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றே கூற வேண்டும்!
நவீன நீரோ மன்னன்!
சி.ஸ்ரீதேவி, பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அதைப் போல் துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழக மக்களை கொதிப்படைய வைத்திருக்கும் நிலையில், சட்டம் - ஒழுங்கை காக்கவேண்டிய முதல்வரோ, சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' வெளியிட்ட சிறுவர்களை கோட்டைக்கு வரவழைத்து பாராட்டி மகிழ்ந்து, அவர்களுடன் வீடியோ எடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருக் கிறார்.
அண்டை மாநில முதல்வர்கள் எல்லாம் சமூக வலைதள பாதிப்புகளில் இருந்து மாணவர்களை காக்க, 17 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நம் முதல்வரோ, 'ரீல்ஸ்' போடும் சிறுவர்களை உற்சாகப் படுத்திக் கொண் டிருக்கிறார்.
ஆட்சிக்கு வந்த புதிதில், 'சட்டம் - ஒழுங்கு என் நேரடி கண்காணிப்பில் இருக்கும்; தப்பு செய்தவர் எவராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும்' என்று வீர உரையாற்றினார், ஸ்டாலின்.
அந்த இரும்புக் கரம் இப்போது துருபிடித்து விட்டது போலும்!
அதனால் தான் ஒவ்வொரு நாளும் கொலை - கொள்ளை, பாலியல் வன்முறைகள், அராஜகங்கள் என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
மக்களுக்கு பயன்படாத துருப்பிடித்த இந்த இரும்பு கரம், இனி இருக்க வேண்டிய இடம், பழைய இரும்புக் கடையே தவிர, கோட்டையில் அல்ல!

