PUBLISHED ON : மே 25, 2026 12:41 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:
மாஞ்சோலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. இதனால் கோபமுற்ற நீதிபதிகள், 'கடந்த அரசு நியமித்த வழக்கறிஞர்களின் கருத்தையே கேட்போம்' என கருத்து தெரிவித்து, வழக்கை ஒத்தி வைத்துள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம், முதல்வர் விஜய் அரசு தாயுள்ளத்தோடு உச்ச நீதிமன்றத்தில் மனித நேயமிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்து, மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குரலாக ஒலிக்கும் இவரது கோரிக்கைக்கு விஜய் நிச்சயம் செவிசாய்ப்பார்!
தமிழக காங்., - எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார் பேட்டி: அமைச்சரவையில் பட்டியல் இனத்தவருக்கும், பெண்களுக்கும் அதிகாரம் கொடுத்த ஒரே தலைவராக முதல்வர் விஜய் திகழ்கிறார். சமூக நீதி, மதச்சார்பற்ற சமத்துவம் ஆகியவற்றை தன் கட்சியின் முக்கிய கொள்கைகளாக விஜய் அறிவித்த போது, பலரும் எள்ளி நகையாடினர். ஆனால், பட்டியல் இனத்தவருக்கும், பெண்களுக்கும் அதிகாரம் கொடுத்த ஒரே தலைவராக விஜய் திகழ்கிறார்.
அடடா... கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு கொடுத்துட்டதால, த.வெ.க.,வினரை மிஞ்சி விஜயை புகழ்ந்து தள்ளுறாரே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: வேட்டியும், வெள்ளுடை சட்டையும், வெள்ளைக்காரன் கோட்டிடம் வீழ்ந்தது. மூவாப்புகழ் கொண்ட முத்தமிழோ, மூன்றாம் இடத்திற்கு சரிந்தது. ரகசியம் காக்கும் அரசவை கூடமோ, ரீல்சுக்கும், செல்பிக்கும் படப்பிடிப்பு தளமானது. இது தொடக்கம்; இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கு .
இப்படி, யாருக்கும் எளிதில் புரியாத மாதிரி கவிதை பாடுறீங்களே... இதெல்லாம் உங்க தலைவர் ஸ்டாலின், இளைய தலைவர் உதயநிதிக்காவது புரியுமான்னு யோசிச்சு பார்த்தீங்களா?
நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு: 'முதல்வர் விஜய் ஆட்சி அமைக்க தடுமாறுகிறார். மந்திரிகளை தேர்ந்தெடுக்க தடுமாறுகிறார்' என பேசியவர்களுக்கு, இது தான் உண்மையான சமூக நீதி அரசு என்பதை விஜய் நிரூபித்து விட்டார். பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க., யாருமே பிராமணர் ஒருவருக்கு கூட சீட் கொடுக்காத சூழலில், இரண்டு பிராமண வேட்பாளர்களை நிற்க வைத்து, ஜெயித்த பின் அவர்களை மந்திரியாகவும் ஆக்கியது, தமிழக பிராமணர்கள் ஊதிய விசில் வீண் போகவில்லை என்பதை, தி.க., வீரமணிக்கு உணர்த்தி விட்டனர்.
இவ்வளவு நாளா சமூக நீதி பற்றி வாய் கிழிய பேசிய திராவிட கட்சிகளுக்கு விஜய் சரியான சவுக்கடி குடுத்திருக்காரு!
