PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:41 AM

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி: சமீபத்தில் முதல்வர் விஜய் அறிவித்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் வாக்குறுதி அளித்தபடி, முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம். புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய்க்கு, விவசாயிகளின் உண்மையான நிலவரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்போ, அனுபவமோ இல்லை. அதிகாரிகள் தான் அவருக்கு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.
அதே அதிகாரிகள், தமிழக அரசின் நிதிநிலை பற்றியும் எடுத்து சொல்லியிருப்பாங்களே... அதனால், முதல்வர் இப்படி முடிவெடுத்திருக்கலாமே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால், உரங்களின் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு, அவற்றின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மீதான பொருளாதார சுமை அதிகரித்து, அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
'கடினமான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'னு பிரதமர் மோடி கூறியதன் அர்த்தம் இப்பதான் தெரியுது!
மா.கம்யூ., கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பால கிருஷ்ணன் பேட்டி: ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலாகக் கூடாது என்பதற்காக, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து மா.கம்யூ., ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்தவுடன் த.வெ.க.,வில் சேர்ந்தது, குதிரை பேரமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. த.வெ.க.,வின் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல.
வெளியில் இருக்கும் உங்களை எப்பவும் நம்ப முடியாதுன்னு தான் சிலரை, 'உள்ளே' இழுத்து போடுறாங்களோ?
தமிழக காங்., - எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: 'தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், சூடு சொரணை இருந்தால் அவரது எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு காங்கிரஸ் தான் காரணம். சூடு சொரணை இருந்தால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும் ராஜினாமா செய்ய தயாரா?
நியாயமான கேள்வி தான்... இதுக்கு ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து மவுனம் தான் பதிலா கிடைக்கும்!
