தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/நிலக்கரிக்கு முன் கஞ்சா வழக்கு எம்மாத்திரம்?

நிலக்கரிக்கு முன் கஞ்சா வழக்கு எம்மாத்திரம்?

நிலக்கரிக்கு முன் கஞ்சா வழக்கு எம்மாத்திரம்?


PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2011 - 16ல் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக மின்வாரியம், பிரபல தொழில் அதிபர் அதானிக்குச் சொந்தமான நிறுவனம் மூலம் வாங்கிய நிலக்கரி, தரமற்றதாக இருந்ததால், 6,000 கோடி அளவுக்கு நஷ்டம் அடைந்திருப்பதை, பிரிட்டிஷ் நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

இந்தோனேஷியா நிறுவனத்திடம் தரமற்ற நிலக்கரியை வாங்கி, அதை மும்மடங்கு விலைக்கு தமிழக மின்வாரியத்திற்கு விற்று அதானி, கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பது, இப்போது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.

அப்போது ஜெயலலிதா தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது.

இந்த நிலக்கரி ஊழல் குறித்து, 2022 முதலே, அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால், இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கு அதை, 'பிக்அப்' செய்யத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது.

இப்போது கூட, லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மீண்டும் அம்பலமாகி இருந்தால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, தாங்க முடியாத தலைவலியை உண்டு பண்ணி இருக்கும்; தேர்தலில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி இருக்கும்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. இவ்விவகாரத்தை, 'பாயின்ட் பை பாயின்ட்' எடுத்து, விலாவாரியாக கருத்துகளை எடுத்து வைத்தால், அடுத்த ஆட்சியும் தி.மு.க.,வுக்கு தான்.

இந்த ஊழலுக்கு முன், '2ஜி', கஞ்சா சாதிக் போன்ற அனைத்தையும் தவிடுபொடியாக்கி விடலாம்.

கந்தலாகி விடும் பா.ஜ., கதை!


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆஞ்சநேயர் வாலில் நெருப்பு வைத்த கதையாக, பா.ஜ.,வின் அமித் ஷா ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஒடிசாவில் பிரசாரம் செய்த அமித் ஷா, 'இங்கு சட்டசபையிலும் பா.ஜ., ஆட்சி மலர, 75க்கும் மேற்பட்ட பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். ஒடிசா மொழி பேசும், ஒடிசா கலாசாரம் தெரிந்த மண்ணின் மைந்தரை, பா.ஜ., மாநில முதல்வராக நியமிக்கும்.

'அரசு அதிகாரிகள் ஆட்சி செய்யும் மாநிலமாக, ஒடிசாவை பிஜு பட்நாயக் மாற்றிவிட்டார். நீங்கள் ஒரு தமிழரை முதல்வராக ஏற்றுக் கொள்வீர்களா? முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் சரியில்லை. ஒரு தமிழ் அதிகாரி தான், மாநில பரிபாலனம் செய்கிறார்.

'பிரதமர் மோடி ஒடிசா மொழியை நேசிக்கிறார். ஒடிசா மலைவாழ் இன ஏழைப்பெண் முர்முவை, ஜனாதிபதி ஆக்கியுள்ளார் மோடி' என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, மத்திய அரசு தான் தேர்வு செய்கிறது; நியமனம் செய்கிறது. அவர்கள், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரிய தயார் என்ற உறுதிமொழி ஏற்ற பிறகு தான், நியமனம் ஆகின்றனர்.

நாளை ஒரு தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பிரதமர் மோடிக்கு பி.ஏ., ஆக உள்ளார் என்றால், ஒரு தமிழன் இந்தியாவை ஆள்கிறார் என்று, வட மாநில கட்சிகள் பிரசாரம் செய்ய முனைந்து விடுமே?

ராமாயணத்தில், இலங்கையில் ராவணனின் படை வீரர்கள், ஆஞ்சநேயர் வாலில் தீ வைத்ததால், அவர் பறந்து பறந்து சென்று, ஊரையே எரித்தார் என்ற ஒரு கதை உண்டு. அது போல, அமித் ஷா தற்போது, சொந்த காசில் சூனியம் வைத்த கதையாகப் பேசிவிட்டார்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பா.ஜ.,வோ, இப்போது தான் தத்தி தத்தி இங்கே நடைபயிலத் துவங்கி இருக்கிறது. வளர்வதற்குள் கதை கந்தலாகி விடும் போலிருக்கே?

வி.கே.பாண்டியனை வீழ்த்த முடியாது!


எஸ்.அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

நாடு முழுதும் சல்லடை போட்டு தேடினாலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற துாய அரசியல்வாதி ஒருவரை காண முடியாது. காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் சிலர், 'மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம்' என்று அவ்வப்போது காமெடி பண்ணி வருகின்றனரே.

ஆனால், எண்ணம், சிந்தனை, செயல், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் அப்பழுக்கற்ற நேர்மை, எளிமை, ஒடிசா மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வரும் நவீன் பட்நாயக்கை வேண்டுமானால் காமராஜருடன் ஒப்பிடலாமே ஒழிய, வேறெந்த இந்திய அரசியல்வாதியும் காமராஜருக்கு இணையாக முடியாது.

நவீன் பட்நாயக், தன் அரசியல் வாரிசாக அறிவிக்காவிட்டாலும், ஒடிசா மக்களே விரும்பி அங்கீகரித்துள்ள மனிதர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற நம் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான்.

கிட்டத்தட்ட, 20 ஆண்டுகள், ஒடிசா மக்களுக்காகவே தன்னலம் சிறிதுமின்றி உழைத்த வி.கே.பாண்டியன், ஒடியா மொழியை தமது தாய்மொழியாகவே ஆக்கிக் கொண்டதுடன், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., சுஜாதாவை மணந்து, அந்த மாநிலத்தின் மருமகனாகவும் மாறி விட்டார்.

பொதுவாக, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கைகோர்த்து ஊழல் செய்து, கல்லா கட்டுவதையே நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், பழங்குடியின மக்கள் அதிகம் நிறைந்த ஒடிசா மக்கள் நலனுக்கான பல திட்டங்களை வி.கே.பாண்டியன் அமல்படுத்தினார். 'நான் பிறப்பால் இந்தியன்; வாழ்க்கையால் ஒடியாக்காரன்' என கர்வத்துடன் கூறிக் கொள்வார்.

கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளத்தில் இணைந்த பாண்டியனுக்கு தனது பிரத்யேக ஆலோசகர் என்ற பதவியை, கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கொடுத்திருக்கிறார் முதல்வர் நவீன் பட்நாயக்.

ஆயினும், 'நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, நவீன் பாபு அவர்களுக்குப் பிறகு முதல்வராகும் எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை' என்று சொல்லும் வி.கே.பாண்டியனை ஒடிசா மக்கள் அனைவரும் முதல்வராகவே ஆக்கிவிடும் தீர்மானத்தில் இருப்பது நிஜம்.

பிஜு ஜனதா தளம் கட்சிக்காக ஒடிய மொழியிலேயே சரளமாக பிரசாரம் செய்யும் வி.கே.பாண்டியனை, அங்கே பதவிக்கு அலையும் பா.ஜ.,வும், காங்கிரசும், 'அவர் வெளிமாநிலத்துக்காரர்' என பொறாமை பிரசாரம் செய்தும், எடுபடவில்லை. அங்கே பா.ஜ., - காங்., கட்சிகள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நவீன், வி.கே.பாண்டியன் ஆளுமைகளை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கவே முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us