தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இதுதான் மாநில உரிமையை நிலைநாட்டுவதா?

இதுதான் மாநில உரிமையை நிலைநாட்டுவதா?

இதுதான் மாநில உரிமையை நிலைநாட்டுவதா?


PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராசேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மேகதாதுவில் அணை கட்ட ஆட்சேபனை இல்லை என, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். முதற்கட்டமாக கர்நாடகாவில் தமிழ்ப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்; ஓசூருக்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க விட மாட்டோம்; ஓசூரிலும் விமான நிலையம் அமைக்க விட மாட்டோம்' என, கன்னட சலுவலி வாடல் பக்ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், கர்நாடக - தமிழக எல்லையில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

எப்போதெல்லாம், கர்நாடகா அரசியல்வாதிகள் மேகதாது விவகாரத்தை கையில் எடுத்து போராடுகின்றனரோ, அப்போதெல்லாம், அம்மாநில எல்லையோரப் பகுதிகளில் வாழும் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களுக்கு அஞ்சி வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்விவகாரத்தில் கர்நாடக அமைப்புகள் எச்சரிக்கையுடன் நின்று விடவில்லை. வரும் 22ல் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கும் தயாராகின்றன.

இது எதையும் கண்டுகொள்ளாத திராவிட மாடல் முதல்வரோ, மத்திய அரசால் அறிவிக்கப்படாத தொகுதி மறுவரையறை குறித்துப் பேச, கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

சர்க்காரியா ஊழலில் இருந்து தப்பிக்க, கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் இருந்த காவிரி நடுவர் மன்றம் அமைப்பது குறித்த வழக்கை வாபஸ் வாங்கி, தமிழர்களுக்கு அளப்பரியா தொண்டு செய்தவர் அல்லவா கருணாநிதி?

அவரின் புதல்வரான ஸ்டாலின் எப்படி காவிரி பிரச்னையில் அக்கறை காட்டுவார்?

மேகதாது அணை கட்டுவது குறித்து, கர்நாடகாவில் கட்சி வேறுபாடு இன்றி, அனைவரும் ஒருமித்த குரலில் உரத்த குரல் எழுப்புகின்றனர். இங்கோ, தமிழக உரிமையை கண்டு கொள்ளாமல், டாஸ்மாக் ஊழல் விஷயத்தை, மும்மொழிக் கொள்கையை, தொகுதி மறுசீரமைப்பை மடைமாற்றம் செய்து, அரசியல் அவியல் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு. அதற்கு, ஒத்து ஊதிக் கொண்டிருக்கின்றன கூட்டணிக் கட்சிகள்!

இதற்குப் பெயர் தான் மாநில உரிமையை நிலைநாட்டுவதா முதல்வரே?

  

கொடி பிடித்து ஓய்ந்த கரங்கள்!


டி.கே.முத்தையா, விருதுநகரில் இருந்து எழுதுகிறார்: கட்சி ஆரம்பித்து, 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. கழகத்தினர் அனைவரும் பெரும்பணக்காரர்கள் ஆகிவிட்டனர்; ஆனால், தி.மு.க., ஆட்சிக் கட்டிலில் அமர பாடுபட்ட அடிமட்ட தொண்டனின் வாழ்வு, இன்றும் அதே நிலையில் தான் உள்ளது.

தேர்தல் மற்றும் கூட்டம் கூட்டவுமே தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். கொடி பிடித்தே கை காய்த்து விட்டது; வறுமையில் ஒட்டிக் கிடக்கும் அவர்கள் வயிறுதான் நிரம்பிய பாடில்லை. தேர்தலின்போது, சிரித்து தோளில் கைபோடும் வேட்பாளர், வெற்றி பெற்ற பின், திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை!

இப்போது இருக்கும் தலைவர்களும், அமைச்சர்களும் ஏழ்மையிலிருந்து வந்தவர்கள் அல்லர். பின், எப்படி ஏழைத்தொண்டனின் வறுமையை அறிவர்?

இன்றைய ஆட்சியாளர் என்ன எம்.ஜி.ஆரா... ஏழைத்தொண்டன் ஒருவனை எம்.எல்.ஏ., ஆக்கி பெருமை கொள்ள!

காலம் முழுதும் கட்சிக்காக உழைத்தாலும், வேட்பாளர் தேர்வின்போது, பணபலம் படைத்தவர்களைத் தானே கழகம் முன்நிறுத்துகிறது?

ஏழை தொண்டன் கடைசி வரை போஸ்டர் தானே ஒட்டுகிறான்!

அ.தி.மு.க., அமைச்சர்கள் பலர், இன்று கழக அமைச்சர்களாகி விட்டனர். இதில் ஒருவர், அ.தி.மு.க.,வில் கோலோச்சியபோது, 'இரண்டு கொசுக்கள் சட்டசபைக்குள் நுழைந்து விட்டது; அதை ஒழிக்க வேண்டும்' என்று தி.மு.க., எம்.எல்.ஏ.,களை பேசினார். இன்று, அவர் அறநிலையத்துறை அமைச்சர்!

அமைச்சர்கள் ரகுபதி, அனிதா ராதகிருஷ்ணன், செந்தில் பாலாஜி என மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களே இன்று கட்சியில் கோலோச்சுகின்றனர். கட்சிக்காக உழைத்தவர்கள் தி.மு.க.,வை வசைபாடிய அவர்களுக்கும் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றனர்!

நேற்று வந்தவர் சத்தியராஜ் மகள்; அவருக்கு பொறுப்பு. இனி, அவரை எம்.எல்.ஏ., வாக தேர்தல் களத்தில் நிறுத்துவர்; அவருக்கும் கடைக்கோடி தொண்டன் கொடி பிடிக்க வேண்டும்!

இதுதான் கழக தொண்டனின் நிலை; இதுவே, தி.மு.க.,வின் சமூக நீதி!

பூனைக்கு மணி கட்டப்போவது யார்?


த.யாபேத்தாசன், துாத்துக்குடியில் இருந்து எழுதுகிறார்: நம் பொருளாதாரத்தை அளவிடும் ஓர் அளவுகோல், டாலருக்கு நிகராக உயரும் நம் பணத்தின் மதிப்பில் தான் உள்ளது.

ஆனால், தற்போது, நம் பணத்தின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது; நம் பொருளாதாரம் வலுவாக இல்லை என்பதன் வெளிப்பாடு தான் இது!

டாலருக்கு நிகரான நம் பண மதிப்பு சரியும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாகவும், இறக்குமதியாளர்களுக்கு பாதகமாகவும் அமையும். நம் நாட்டிலோ ஏற்றுமதியை விட இறக்குமதி தான் அதிகமாக உள்ளது. எனவே, பணமதிப்பு குறைவது நமக்கு பாதகமாக அமைவதுடன், நம் அன்னிய செலாவணி கையிருப்பும் வெகுவாக குறையும்!

அதேநேரம், டாலரின் மதிப்பு உயர்வு என்பது உண்மை நிலை தானா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இன்று உலக அரங்கில் அதிக கடன் பெற்றவர்கள் நிரம்பிய நாடு அமெரிக்கா தான். அத்துடன், இறக்குமதிகளும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

இதன் வாயிலாக, அமெரிக்க பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லை என்பது வெளிப்படை. அதேநேரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது.

காரணம், அனைத்து நாடுகளும் தங்களின் வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதால்!

வேறு மாற்று கரன்சிகள் இல்லை என்றால், டாலருக்கான தேவை உயர்ந்து கொண்டே தானே போகும்... தேவை உயரும்போது, விலை உயரும் என்பது பொருளாதார விதி அல்லவா... இதுதான் உலக அரங்கில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம் ஏற்றுமதி செய்யும்போது, எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோமோ அந்நாட்டின் கரன்சியை நாம் ஏற்று கொள்ள வேண்டும். அதேபோன்று, இறக்குமதி செய்யும்போது நம் பணத்தின் வாயிலாக, வியாபாரம் செய்ய வேண்டும். இப்படியாக அனைத்து நாடுகளின் கரன்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், டாலரின் முன்னுரிமை தடுக்கப்பட்டு, அனைத்து கரன்சிகளும் மதிப்பு பெறும் நிலை உருவாகும்.

ஆனால், அமெரிக்கா இப்படிப்பட்ட சிந்தனையை, முளையிலேயே கிள்ளி எறிந்து விடும். அந்நாட்டின் அதிபர் டிரம்பின் கோட்பாடே அமெரிக்கா முதலில் என்பது தான்!

இதேபோன்று, அனைத்து நாடுகளும், தங்களின் நாடே முதலில் என்ற சித்தாந்த செயல்பாட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான், டாலரின் கொட்டத்தை அடக்க முடியும்!

பூனைக்கு யார்தான் மணி கட்டப் போகின்றனரோ?

  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us