PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

எஸ்.அய்யாசாமி,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருசமயம், தமிழ் தாத்தா
உ.வே.சாமிநாதையர் தன் மகன் தியாகராஜனுக்கு உபநயனம் செய்து வைக்க பொருள்
வேண்டி, ஜமீன்தார் ஒருவரை பார்க்க சென்றிருந்தார்.
ஜமீன்தார்
வெளியே புறப்பட்டு கொண்டிருந்ததால், உ.வே.சா.,வையும் தன் குதிரை வண்டியில்
ஏற்றிக் கொண்டவர், 'என்ன விஷயம்?' என்று கேட்டுள்ளார். அவரும் விபரத்தை
சொல்லவே, 'கவலைப்படாதீர்கள்; நான் ஏற்பாடு செய்கிறேன்...' என்றவர், 'உங்க
காதில் அணிந்திருக்கும் கடுக்கனை கழற்றி தாருங்கள்...' என்று கேட்டுள்ளார்.
உ.வே.சா., கழற்றி கொடுக்கவே, அதை வாங்கிய ஜமீன்தார், தன் காதிலிருந்த
கடுக்கனை கழற்றி உ.வே.சா.,விடம் கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.
பின், அவர் கொடுத்த கடுக்கனை அணிந்து கொண்டார். சிறிது நேரத்தில் வண்டி ஓர் அடகு கடையின் முன் சென்று நின்றது.
வண்டியில் அமர்ந்தபடியே, கடைக்காரரை அழைத்து, தான் அணிந்திருந்த
உ.வே.சா.,வின் கடுக்கனை கழற்றி, அடகு கடைக்காரரிடம் கொடுத்து, 'இதை வைத்து
கொண்டு, 200 ரூபாய் தாரும்' என்று கேட்டார். கடைக்காரரும் மறுபேச்சு
பேசாமல், பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை, உ.வே.சா.,விடம் கொடுத்த ஜமீன்தார், 'இதை வைத்து மகனின் உபநயனத்தை நடத்தும்' என்றார்.
உ.வே.சா., திகைத்து, 'என்னுடையது பித்தளைக் கடுக்கன்...' என்றவர், அவர் கொடுத்த கடுக்கனை கழற்றி தந்தார்.
'வேண்டாம்; அது உங்கள் மகனுக்கு என் பரிசு. சந்தோஷமாக போய் வாருங்கள்...' என்று வழியனுப்பி வைத்தார்.
ஜமீன்தாரோடது வைரக் கடுக்கன்!
அடகு கடையில், உ.வே.சா., தன் கடுக்கனை கொடுத்திருந்தால், அதை உரசிப்
பார்த்து, பித்தளை என்று அறிந்து, பணம் கொடுக்க மறுத்திருப்பர்.
ஜமீன்தாரின் காதிலிருந்து கழட்டி கொடுத்ததால், மறுபேச்சு பேசாமல், அவர்
கேட்ட பணத்தை கொடுத்துள்ளார், அடகு கடைக்காரர்.
நான் படிக்கும் காலத்தில், ஏழாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், 'ஆளுக் கேற்ற மதிப்பு' என்ற தலைப்பில் வந்திருந் த பாடம் இது!
இதுபோன்று தான், இன்று நீதி துறையிலும், 'ஆளுக்கேற்ற' நீதியாக இருக்கிறது!
தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிக்
கம்பங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து
இருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூ.,
கட்சியின் மாநில செயலர் சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு பின், அனுமதியின்றி
வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை
கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
இதில் என்ன சிறப்பு என்றால், இதே கோரிக்கையை
வலியுறுத்தி கதிரவன் என்பவர், ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவை, கடந்த
8ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தான்!
கதிரவன் தாக்கல்
செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்ததும் உச்ச நீதிமன்ற நீதிபதி தான்;
அதேகோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சண்முகத்தின்
மேல்முறையீட்டை ஏற்று, இடைக்கால தடை விதித்துள்ளதும் உச்ச நீதிமன்ற
நீதிபதி தான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உ.வே.சா., - ஜமீன்தார் கடுக்கன் கதை கூறும், 'ஆளுக்கேற்ற மதிப்பு' போல், நீதி துறையிலும் ஆளுக்கேற்ற நீதி!
ஆக, சட்டம் என்பது ஒரே நேர்க்கோடு அல்ல. மனுதாரர்களின் தகுதிக்கு
தக்கப்படி வளைந்தும், நெளிந்தும், சுருங்கியும், விரிந்தும் கொடுக்கக்
கூடியதே என்பது தெளிவாகிறது.
நீதி பரிபாலனம் செய்யும் நீதிபதிகள்
இப்படி வளைந்து நெளிந்து கொண்டிருந்தால், நீதிமன்றங்கள் மீது பொது
மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
அவித்த விதை நெல்லா நடிகர் விஜய்?
எம்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராணுவ கட்டுப்பாட்டுடன்' நடத்தி முடிக்கப்பட்ட த.வெ.க., மதுரை மாநாட்டு திடலில், தொண்டர்களால் உடைத்து நொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்களும், சாப்பிட்ட பின் வீசி எறியப்பட்ட டன் கணக்கிலான பார்சல் கவர்களும், செருப்புகளும், குப்பைகளும் இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் எங்கும் பரவிக்கிடக்கின்றன.
தலைவரை நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகள் உட்பட தொண்டர்களின் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த வாட்டர் டாங்குகள் பல காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.
'அதை ஏன் திருட்டாக நினைக்க வேண்டும்... மாநாடு நினைவாக தொண்டர்கள் எடுத்துச் சென்றிருப்பர் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்...' என்றும், 'மாநாடு நடத்தும் போது, 103 டிகிரி உச்சி வெயில் அடிக்கும் என தொண்டர்களாகிய நாங்கள் கனவா கண்டோம்...' என, 273 பேர் மயங்கி விழுந்ததற்கும், ஒருவர் உயிர் இழந்ததற்குமான காரணத்தை, எளிதாக வெயிலின் பக்கம் தள்ளிவிட்ட மாநாட்டு நிர்வாகிகளுக்கு, மதியம் மாநாடு நடத்தினால் மதுரை வெயில் எப்படி இருக்கும் எனத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்!
தலைவர் பவனி வர 'ரேம்ப் வாக்' எனப்படும் நீளமான நடைபாதை அமைத்த பணத்தில், கால்வாசி செலவு செய்திருந்தால் கூட, தொண்டர்கள் நிற்பதற்கு நிழல்தரும் பந்தல் போட்டு இருக்கலாம்!
விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பின், பேச்சில், செயலில் நிறைய முதிர்ச்சி பெற்றிருப்பார் என்று எண்ணி, அவரது பேச்சைக் கேட்டவர்களுக்கு பெரிதும் ஏமாற்றமே!
விக் கி ரவாண்டி மாநாட்டில் எதை மனப்பாடம் செய்து பேசினாரோ, அதையே மதுரை மாநாட்டிலும் பேசியுள்ளார். கூடுதலாக, பிரதமரை, 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்' என்றும், முதல்வரை, 'அங்கிள்' என்றும் மேடை நாகரிகத்தோடு, 'கவுரவமாக' குறிப்பிட்டுள்ளார்.
கலர்கலராய் ஆடைகள் போட்டு, வெள்ளை விழுந்த தாடியை கருப்பு கலருக்கு மாற்றியிருந்தால், சினிமா சூட்டிங் போலவே இருந்திருக்கும்.
'ரேம்ப் வாக்கிங்' போகும் போது தொண்டர்கள் துாக்கிப் போட்ட கட்சிக்கரை துண்டை நெற்றியில் கட்டிக் கொண்டதாகட்டும், பேன் ட் பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை எடுத்து, சுற்றிச் சுற்றி தன்னை செல்பி எடுத்துக் கொண்டதாகட்டும்...
'அப்புறம் என்ன, 'ம'னாக்கு நீ வந்திருக்க என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது' என, தன் தலைமுடியை சுட்டிக்காட்டியதாகட்டும், கடும் வெயிலில் பசி தாகத்துடன் நின்ற தொண்டர்களைப் பார்த்து, கடைசிவரை ஒரு மன்னிப்பு கூட கேட்காத தன்மையாகட்டும் எல்லாமே அவரது முதிர்ச்சியின்மையையே காட்டியது!
மொத்தத்தில், மேடையில் அவர் சொன்ன குட்டிக்கதை பாணியில் சொல்வது என்றால், விஜயும் ஓர் அவித்த விதை நெல்லே!