/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தீர்மானிக்க வேண்டியது மக்கள்; செல்வப்பெருந்தகை அல்ல!
/
தீர்மானிக்க வேண்டியது மக்கள்; செல்வப்பெருந்தகை அல்ல!
தீர்மானிக்க வேண்டியது மக்கள்; செல்வப்பெருந்தகை அல்ல!
தீர்மானிக்க வேண்டியது மக்கள்; செல்வப்பெருந்தகை அல்ல!
PUBLISHED ON : ஜன 09, 2026 03:21 AM

எஸ்.ரேவதி,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷா, ஆயிரம் முறை தமிழகம் வந்தாலும், தமிழக மண் பா.ஜ.,வை
ஏற்கப் போவதில்லை. தமிழக மக்கள் ஒருபோதும் பா.ஜ.,வுக்கு இங்கு இடம் அளிக்க
மாட்டார்கள். 'இண்டி' கூட்டணி வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணியே
வெற்றி பெறும்' எனக் கூறியுள்ளார், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்
செல்வப்பெருந்தகை.
அமித் ஷா ஆயிரம் முறை வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, பா.ஜ.,வை ஏற்க வேண் டியது தமிழக மண் அல்ல; தமிழக மக்கள்.
கடந்த 1967ல் இதே தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரசால், 60
ஆண்டுகள் கடந்த பின்னும், இன்னும் காலையோ, கையையோ தமிழக மண்ணில் ஊன்ற
முடியவில்லை.
இப்படித்தான், கேரளாவில் கம்யூனிஸ்ட்களும், 'உதார்' விட்டுக் கொண்டிருந்தனர். கடைசியில், என்ன ஆயிற்று?
திருவனந்தபுரம் மாநகராட்சி இப்போது பா.ஜ., கையில்!
ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புத் தான் மகேசன் தீர்ப்பேயன்றி, செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு காலணா மதிப்புக் கூட கிடையாது.
தி.மு.க.,வின் தோளில் சவாரி செய்து, ஓரிரு இடங்களில் வென்று, காங்கிரசின்
இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பதால் மட்டும் அக்கட்சி தமிழகத்தில்
கோலோச்சுகிறது என்ற எண்ணமா?
இன்றைய நிலையில், பா.ஜ.,விற்கு, 8
சதவீத ஓட்டுகள் உள்ளன. அதேநேரம், காங்., தனித்து நின்றால், 1 சதவீத ஓட்டு
வாங்குமா என்பதே சந்தேகம்!
இதில், பா.ஜ.,வை தமிழக மண் ஏற்காதாம்!
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டியது, ஓட்டளிக்கும் மக்களே அன்றி, செல்வப்பெருந்தகை அல்ல!
குற்றச்செயல்கள் தடுக்கப்படுமா?
பாலகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை வியாசர்பாடி -அருகே திருவள்ளூர் மின்சார ரயில் சென்றபோது, சில தீய சக்திகள் பீர் பாட்டில்கள் வீசியதில், பயணியர் மூவர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதை, சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இதற்கு முன், இருளில் தாக்கியவர்கள், இப்போது, பகலிலேயே இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற குற்றச்செயல்களின் போது, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரிக்க வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்ட இடத்தில் கேமரா இல்லை என்று சொல்வது சரி அல்ல!
குற்றவாளிகள் எவரும் கேமராவை ஆதாரமாக வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
எனவே, குற்றச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட எல்லை வரை, போலீசார் ரகசிய கண்காணிப்பும், விசாரணையும் நடத்தி, இச்செயல்களில் ஈடுபட்டோரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.
மேலும், ரயில்வே நிலத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குவது, அரசு பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, பொது மக்களுக்கு கடுமையான காயம் உண்டாக்குவது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஜாமினில் வெளிவர முடியாத கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
அப்போது தான், இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும்; பயணியரும் பாதுகாப்பாக பயணிக்க முடியம்!
இலவசங்களுக்கு மயங்கினால், வாழ்வு நசுங்கும்!
எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், 4.5 லட்சம் கோடி கடனை வாங்கி, 9.29 லட்சம் கோடியாக தமிழகத்தின் கடனை உயர்த்தியுள்ளது, திராவிட மாடல் அரசு. இதற்காக, ஆண்டிற்கு, 70,000 கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறது.
அதே நேரம், அக்கடன் தொகையை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருந்தால், அக்கடன் மாநிலத்திற்கு லாபத்தை தந்திருக்கும்; மக்களின் வாழ்வாதரம் உயர்ந்திருக்கும்.
அரசு பள்ளி - கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டிருந்தாலோ, குடிநீர், சாலை வசதி மேம்பாட்டிற்கு பயன்பட்டிருந்தாலோ, அக்கடன் ஓர் அர்த்தமுடையதாகவாவது இருக்கும்.
ஆனால், ஓட்டு வேட்டைக்காக, உரிமைத் தொகை, முதலமைச்சர் திட்டம், காலைச்சிற்றுண்டி, விடியல் பயணம், மக்கள் மருத்துவ சேவைகள் என்ற இலவச திட்டங்களை செயல்படுத்தவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் முதல், அவர்களுக்கான ஓய்வூதியம், அரசு வாங்கியிருக்கும் கடன்களுக்கான வட்டிக்காகவே, அரசு கடன் தொகை யை செலவு செய்கிறது.
அன்றாட செலவுகள் மற்றும் கடன் திருப்பி செலுத்துதலுக்கே அதிகமாக கடன் தொகை பயன்படுத்தப்படுவதாக தலைமை கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
இப்படி அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்கி தான் செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசு வசூலிக்கும் வரி மற்றும் டாஸ்மாக் வாயிலாக வரும் வருமானம் எங்கே போகிறது?
இதில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதிய இலவசங்களையும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது, தி.மு.க.,
'தமிழக அரசு வாங்கும் கடனால், மக்களுக்கு என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது? அந்த கடனை எந்த மக்களும் கட்டுவதில்லை. எவரும் மக்களிடம் கடனை கொடு என்றோ, வட்டியை கட்டு என்றோ கேட்பதில்லை. எனவே அரசு வாங்கும் கடனால், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று கூறியுள்ளார், தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.
இதுபோன்ற அறிவாளிகள் அரசின் திட்டக்குழு தலைவராக இருந்தால், தமிழகம் கடன்கார மாநிலமாக மட்டுமல்ல; திவாலான மாநிலமாக மாறினா லும் ஆச்சரியமல்ல!
ஓர் அரசு, தான் பெறும் கடனை எப்படி திருப்பி அடைக்கும்?
முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்குள் தங்கள் சொந்த வருவாயிலிருந்து அக்கடனை கட்டுகின்றனரா அல்லது அரசு தொழில் நடத்தி சம்பாதித்து, அதன் வாயிலாக வாங்கிய கடனை செலுத்துகிறதா?
அரசு வாங்கும் கடன் மக்கள் கட்டுவது இல்லை என்றால், வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, கரன்ட் பில் என, பால் பாக்கெட் முதல் பல்பொடி வரை வரியை உயர்த்துவது ஏன்? பத்திரவு பதிவு கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது ஏன்? எதற்காக மக்கள் மீது இத்தனை வரி சுமைகள்?
இதோ சட்டசபை தேர்தல் வரப் போகிறது... மாநிலத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்காமல், ரகரகமாக இலவச திட்டங்களை அறிவிக்க தயாராகி விட்டன, அரசியல் கட்சிகள்.
மக்கள் தான் விழிப்புணர்வு பெற வேண்டும். இல்லை என்றால், இலவசங்களுக்கு மயங்கி ஓட்டுப் போட்டு, இன்னும் பல மடங்கு வரிச்சுமையில் அன்றாட வாழ்வும் நசுங்கிப் போகும்!

