தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நாடு முழுதும் பல ராஜ கண்ணப்பன்கள்!

நாடு முழுதும் பல ராஜ கண்ணப்பன்கள்!

நாடு முழுதும் பல ராஜ கண்ணப்பன்கள்!


PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நம் நாடு சுதந்திரம் அடைந்து, யார் லாபம் அடைந்தனரோ, இல்லையோ... அரசியல்வாதிகள், கொழுத்தபணம் படைத்தவர்களாகி விட்டனர்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், அவரவர் தகுதிக்கேற்ப ஊழல் செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதும், அதிகாரிகளின் ஆதரவுடன், அரசு இடங்களை வளைத்துப் போட்டுள்ளதும் கண்கூடு.

அதிலும், 1970களுக்கு பின் தமிழகத்தில்ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளின் தலைவர்கள், மாறி மாறி, தங்கள் பெயரிலும், தங்களது உறவுகள், நட்புகள் பெயரிலும், அரசு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். கடல் மற்றும்வான் பகுதிகளை, தம் பெயருக்கு மாற்றும்உரிமை இருந்திருந்தால், அவர்கள் அதையும் செய்திருப்பர்.

சென்னையில், 411 கோடி ரூபாய் அரசு நிலத்தை, தி.மு.க., அமைச்சர் ராஜ கண்ணப்பன் அபகரித்ததாக, 'அறப்போர் இயக்கம்' அமைப்பு, அதற்கானஆதாரங்களை திரட்டி, அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. இது, அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை; அப்படிப்பட்ட அபகரிப்புநடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம்.

இந்த நிலங்களை, போலியான ஆவணங்கள் மூலம் பட்டா போட, ராஜ கண்ணப்பனுக்கு, பத்திரப்பதிவு அதிகாரிகள் உதவி இருப்பர் என்பது உண்மை.

ராஜ கண்ணப்பன் போன்ற செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், பல்வேறு கட்சிகளில் உள்ளனர். இவர்கள் எல்லாம் முதல் முறையாக, கவுன்சிலராக தங்கள் வாழ்க்கையைத் துவங்கி, மாநில - மத்திய அமைச்சர்கள் வரை பதவிகளை பெறுகின்றனர்.

பல மாநிலங்களிலும், கவுன்சிலர் முதல் முதல்வர் வரை, மக்கள் சேவைக்காக வருபவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் அனைவரும் சேர்க்கும் சொத்துக்கள், பொதுநலத்திற்காக எழுதி வைக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டால், இப்போதைய அரசியல்வாதிகள் அனைவரும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, கண்காணா தேசத்திற்கு ஓடி விடுவர்.

ஊழலில் சம்பாதித்த சொத்து என ஏளனம்செய்து, மக்கள் கைகொட்டி சிரிப்பரே என்ற குற்ற உணர்வு ஏதும் இல்லாமல், ஏதோ வீரதீர பராக்கிரம சாகசம் செய்தது போல, 'நான் குற்றமற்றவன்; என் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்' என வாய்ச்சவடாலும் விடுகின்றனர்.

இவர்களை சொல்லி குற்றமில்லை... ஊழல், கொலை வழக்குகளில் கைது செய்யப்படும் பலரும், ஜாமினில் வெளிவந்து ராஜ உபசாரத்துடன் வலம் வருவதால், மேலும் பலரும் குற்றம் செய்ய முற்படுவது இயல்பு தானே!

சட்டம் இப்படி இருக்கையில், பல ராஜ கண்ணப்பன்கள் நாடு முழுதும் இருக்கத்தானே செய்வர்!

கூட்டணியின்றி எதுவும் நடக்காது!




என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உ.பி., உள்ளிட்ட எந்த மாநிலத்திலும், உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்; தே.ஜ., மற்றும் 'இண்டியா'கூட்டணியிலும் இணைய மாட்டோம்' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

ஒரு காலத்தில், நாடு முழுதும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியேஇப்போது, மாநில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிவைத்துதான் தேர்தலில்வெற்றிபெற முடியும் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

ஹரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிதனித்துப் போட்டியிட்டதால், படுதோல்வி அடைந்து,ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது

தமிழகத்தில், சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் போட்டியிடுவதால் தான், இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாமல் போகிறது.

அ.தி.மு.க., தலைவராக இருந்த ஜெயலலிதா மட்டும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல்,சட்டசபை தேர்தலில் வென்றுசாதனை படைத்தவர்.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., உட்பட யாருமே கூட்டணிஇன்றி தேர்தலில் வெற்றி பெற்றது இல்லை.

மூன்றாவது முறையாகபிரதமர் ஆகியுள்ளமோடியே, கூட்டணி இன்றிவெற்றி பெற்று விட முடியாது என்பது தான் யதார்த்தம்.

கட்சியின் பலத்தை அறிய கூட்டணி இன்றி போட்டியிடுவது நல்லதே;ஆட்சியில் அமர அது சரிப்படாது.

நடுநிலைக்கு மாறுங்க எல்லாரும்!


வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து வேதனைஅளிக்கிறது. விசாரணை நடந்து வருகிறது; தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்; ஊழியர்கள் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

சமூக, தேச விரோத சக்திகள் காரணமாக இருந்தால், அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்த விபத்து, தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும், பல தொலைக்காட்சிகளில் அதிக நேரம் காட்டப்பட்டது.

ராகுல் முதல் பல எதிர்க்கட்சித்தலைவர்கள் விமர்சித்தனர்.தமிழக காங்கிரஸ் தலைவர்,ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோரினார்.

தி.மு.க., - எம்.பி., கனிமொழியும் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். சில ஊடகங்களில் விவாத மேடையில் இது பற்றி விவாதம் செய்யப்பட்டு, மத்திய அரசும், ரயில்வேயும் விமர்சனம் செய்யப்பட்டன. இவை அனைத்தும்பாரபட்சத்தின் உச்சகட்டமாக அமைந்தன.

சமீபத்தில், பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில், எரிவாயு உருளைகள், இரும்புக் கம்பிகள், பாறைகள் போன்றவற்றைவைத்து சமூக, தேச விரோத சக்திகள், விபத்து - உயிரிழப்புகளை ஏற்படுத்தின.

மத்திய அரசுக்கு அவப்பெயர் பெற்றுத்தர வேண்டும் என்கிற நோக்கில், இன்னும் அச்செயல்கள் தொடர்கின்றன.

தேஜஸ், வந்தே பாரத்ரயில்கள் மீது பல இடங்களில் கற்கள் வீசப்பட்டன. ஆனால், இவற்றைப் பற்றி, எந்த கட்சியும் எதிர்கருத்தே தெரிவிக்கவில்லை.

வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்கள் தாக்கப்படுவதை பற்றியோ,தமிழகத்தின் ஆளுங்கட்சி ஆதரவு தொலைக்காட்சிகளோ, பத்திரிகைகளோ, ஆளுங்கட்சியோ, அதன் கூட்டணித் தலைவர்களோ அதிகம் பேசுவதில்லை; விவாத மேடைகளில் விவாதிப்பதில்லை.

மக்கள் தான் உஷாராகஇருக்க வேண்டும்... செய்திகளை கட்சி சார்பில்லாமல், அரசியல் கலப்படமில்லாமல், உள்ளதை உள்ளபடியே கூறும் நடுநிலையான, தரமான தொலைக்காட்சிகளை பார்க்க வேண்டும்; பத்திரிகைகளை படிக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us