/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
முதன்மை மாநிலத்திற்கு தேவையா சிகிச்சை?
/
முதன்மை மாநிலத்திற்கு தேவையா சிகிச்சை?
PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

ஆர்.சம்பந்தமூர்த்தி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆளுங்கட்சியின் நிதிநிலை அறிக்கையை, எதிர்க்கட்சிகள் பாராட்டியதாக சரித்திரமே கிடையாது.
எதிர்க்கட்சிகள் ஆண்ட போது, மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தது போலவும், தற்போது, துன்பப்படுவது போலவும் புழுதிவாரி துாற்றுவது வாடிக்கையாக நிகழ்வது தானே!
தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, 'தேர்தல் நடைபெற உள்ள மாநிலத்திற்கு பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது; பீஹாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது' எனவும்...
இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன், 'பேரிடர் நிதி, கல்வி, மெட்ரோ திட்டம் என தமிழகத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' என்றும், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, 'பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எந்தவித அறிவிப்பும், நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' எனவும் ஆதங்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினின் பேச்சுகள், அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்...
ஸ்டாலின் பேசும் போதெல்லாம், 'தமிழகம் உலகிற்கே வழிகாட்டுகிறது; கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்துறை, சுகாதாரம், மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, முதன்மை மாநிலமாக திகழ்கிறது' என்பார்.
முதன்மை மாநிலத்திற்கு எதற்கு திட்டங்கள் எனும் சிகிச்சைகள்?
பீஹார் போன்ற பின்தங்கிய, நோய்வாய்ப்பட்டுள்ள மாநிலங்களுக்குதான் சிகிச்சை தேவை; அதனால், அவைகளுக்கு தேவையான சிகிச்சையை பட்ஜெட் வாயிலாக மத்திய அரசு அளித்துள்ளது.
இது தெரியாமல், திராவிட மாடல் ஆட்சியாளர்களும், அதன் கூட்டணி கட்சிகளும் கருத்து சொல்ல வந்து விட்டனர்!
கள எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!
சு.செல்வராஜன்,
சரவணம் பட்டி, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- -மெயில்' கடிதம்:
தமிழகத்தின் மிகப் பெரிய ஓட்டு வங்கி, பட்டி யல் இனத்தவர் தான்!
இவர்களுடைய
ஓட்டுகள் சிந்தாமல், சிதறாமல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கிடைத்து
வந்தன. இன்னமும் அவர்கள் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடும் கூட்டமாக
இருக்கின்றனர் என்பதால் தான், அச்சின்னத்தைப் பெற, அ.தி.மு.க.,வின் மூன்று
அணிகளும் போட்டி போடுகின்றன.
இவர்களை வளைக்கிற சக்தி, திருமாவளவனுக்கும், தி.மு.க.,வுக்கும் இல்லை.
எதிர்க்கட்சித்
தலைவர் பழனிசாமியின் பலமே இரட்டை இலை தான்; கூடவே, தான் சார்ந்த கவுண்டர்
ஜாதி ஓட்டு களும் சேர்ந்தால், ஆட்சி யைப் பிடித்து விடலாம் என, பகல் கனவு
காண்கிறார்.
தி.மு.க.,வுக்கும் இதே நிலை தான். இக்கட்சியின் ஓட்டு
வங்கி முஸ்லீம்கள்; தலித் ஓட்டு வங்கி போல பெரியது இல்லை என்றாலும், பலம்
வாய்ந்தது.
அதேநேரம், பட்டியல் இனத்தவரைப் போல அல்லாமல், பேரம்
பேசி, தொடர்ந்து பல சலுகைகளைப் பெற்று தான், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக
செயல்படுகின்றனர்.
இதனால், தி.மு.க., வுக்கு பல சங்கடங்கள்
இருந்தாலும், பல சமரசங்களை செய்து, தன் ஓட்டு வங்கியை காப் பாற்றி
வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்தில், நவாஸ் கனி
எம்.பி.,யை கட்டுப்படுத்த முடியாமல் போனது, இதற்கு சமீபத்திய உதாரணம்.
இவர்களுக்கு மத்தியில், ஒரு குட்டி ஓட்டு வங்கி தான் வன்னியர்!
சில
தினங்களுக்கு முன் விழுப்புரத்தில், 21 சமூக நீதி வன்னியப்போராளிகளுக்கு
நினைவு மண்டபம் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், இவர்களின்
ஓட்டுக்கு உரிமை கொண்டாடினார்.
இது இப்படி இருக்க, முதலியார்,
செட்டியார், பிள்ளைமார் ஓட்டுகள் எந்த ஒரு கட்சிக்கும், எந்த காலத்திலும்
ஓட்டு வங்கியாக இருந்தது இல்லை.
இந்த ஓட்டு வங்கிகள், வன்னியர்களை
விடப் பெரியவை; பா.ஜ., முதல் வேலையாக இவற்றை தன் பக்கம் கொண்டுவர வேண்டும்.
அடுத்து, தற்போது வலுப்பெற்று வரும் பிராமணர் ஜாதி சங்கத்தை, அரசியல்
பணிகளுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
அதை விடுத்து, பட் டியல் இனத்தவர் ஓட்டு கிடைக்கும், இஸ்லாமியர் ஓட்டு பிரியும் என்று பா.ஜ., கனவு காணக் கூடாது.
இருப்பதை
விட்டு பறப்பதைப் பிடிக்காமல், கள எதார்த்தத்திற்கு ஏற்ற செயல்
தந்திரங்களை வகுத்து செயல்பட்டால், பா.ஜ.,வின் வெற்றி நிச்சயம்!
பிம்பம் உடையுமா?
ஜி.சூர்ய
நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காமராஜர் காலத்திற்கு பின், அதிகம் தேவைப்பட்ட ஒரு பேசுபொருள் ஆனார்,
ஈ.வெ.ரா., காரணம், தெளிவான சிந்தனை, தேச நலன் மிக்க தலைவர்கள் இருந்த
காலத்தில், ஈ.வெ.ரா., எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியில் அது தேயத் துவங்கிய
போது, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நினைத்த கூட்டம், ஈ.வெ.ரா.,விடமிருந்து
பிரிந்து, அவரையே பேசு பொருளாக்கி ஆட்சிக்கு வந்தது.
ஒரு காலத்தில், ஈ.வெ.ரா.,தங்களை காரி உமிழ்ந்தவர்என்றாலும், பிம்பம் கட்டமைத்து, மக்களை ஏமாற்ற அவர் தேவைப்பட்டார்.
அதனால்,
ஈ.வெ.ரா., ஒரு சீர்திருத்தவாதி, வைக்கம் போராட்டத்தின் காரண கர்த்தா,
தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா வராது என்ற அறிவு கூட இல்லாமல், தென்கிழக்கு
ஆசியாவின் சாக்ரடீஸ் என்றும், சமூக நீதி காத்தவர், ஐ.நா.,வும் -
ஈ.வெ.ரா.,வும்...
- இப்படி ஏதோ வராது வந்த மாமணி என்பது போல், ஒரு
பிம்பம் கட்டமைக்க, அவர்கள் எண்ணப்படியே மக்களிடம் அது வேலை செய்தது.
கூடவே, இவர்கள் பம்மாத்து செய்த- திராவிடம் என்ற சொல்லாடல்...
அது ஒரு பூகோள குறியீடு; அதை இனமாக திரித்து, மக்கள் உணர்வை துாண்டினர்.
மக்கள் எல்லாம் திராவிட இனம்; தலைவர்கள் மட்டும் ஏன், தங்களை தமிழின தலைவர்கள் என்று அழைத்துக் கொண்டனர்?
- இக்கேள்வியை சிலர் கேட்டபோது, ஜாதிய தாக்குதலுக்கு ஆளாயினர்.
இப்போது,
திராவிடத்தை ஒழிக்க புறப்பட்டுள்ள, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான்,கன்னடரும், தெலுங்கரும் தமிழக அரசியலில் நுழைய கண்டுபிடித்த
குறுக்கு வழிதான் திராவிடம் என்பதை அறிந்தார்.
அதிலும், அதன் நாயகராக இருக்கும் ஈ.வெ.ரா.,குறித்த உண்மைகளை கூறி, ஈ.வெ.ரா., என்ற போலி பிம்பத்தை சுக்கு நுாறாக உடைத்து விட்டார்.
சீமானை
சாடும் தலைவர்கள் எல்லாம், 'சீமான் இப்படி பேசியிருக்கக் கூடாது'
என்றுதான் கூறுகின்றனரே தவிர, அவர் சொல்வது தவறான தகவல் என்று கூறவில்லை.
அப்படி
மறுத்தால், மேலும் பல அசிங்கங்களை ஆதாரத்துடன் அரங்கேற்றுவார்; ஈ.வெ.ரா.,
பற்றிய பல பொய்கள் மக்களிடையே போய் சேர்ந்து விடும் என்ற பயம்!
பார்ப்போம்... சீமானால், திராவிட பிம்பம் உடைகிறதா என்று!