PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

எஸ்.கோபாலன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தால், அப்பொய் ஒரு நாள், சிந்திக்க மறுக்கும் மக்களால் நம்பப்படும்' என்பது ஹிட்லரின் பிரசார பீரங்கியான கோயபல்ஸ் தத்துவம்!
அத்தத்துவத்தை அட்சரம் பிசகாமல் பின்பற்றி, 'மணிப்பூர் பற்றி எரிகிறது' என்ற பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி, அந்த தீயில் குளிர் காய்ந்து, ஆட்சியை பிடித்து விட துடிக்கிறது, காங்.,
மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் கலவரம், இன்று நேற்று துவங்கியதல்ல...
அக்கலவரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு, துவக்கி வைத்ததே காங்., தான்!
இதை மறைத்து, என்னமோ பா.ஜ., ஆட்சியில் தான், மணிப்பூரில் கலவரம் துவங்கி கொழுந்து விட்டு எரிவது போல், 'படம்' காட்டிக் கொண்டிருக்கிறது.
'கடந்த 600 நாட்களுக்கு மேல் மணிப்பூர் பற்றி எரிகிறது; மாநிலத்தின் பல பகுதிகள், கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. ஆனால், பிரதமர் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை. அது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. சுயநலம் காரணமாக, பா.ஜ., மணிப்பூரை எப்போதும் கொதிநிலையில் வைத்துள்ளது' என்று கூறியுள்ளார், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
கடந்த 600 நாட்களுக்கு முன் வரை, மணிப்பூர் அமைதி பூங்காவாக இருந்தது போலவும், 600 நாட்களாகத்தான் கலவரம் நடந்து கொண்டு இருப்பது போல் அல்லவா உள்ளது இவரின் பேச்சு!
பா.ஜ., ஆட்சிக்கு முன்பும், மணிப்பூர் பற்றி எரியத் தான் செய்தது... அப்போது, இருந்த காங்., பிரதமர் எத்தனை பேர் மணிப்பூர் சென்றிருக்கின்றனர்.
இரண்டு இனக்குழுக்களுக்குள் ஏற்பட்டுள்ள இக்கலவரம், 'சென்சிடிவ்'வானது. இதில், பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்றால் மட்டும் கலவரமும், வன்முறையும், தீ வைப்புக்களும் நின்று விடுமா?
அப்படி என்றால், பிரதமர் மோடி வந்து தீயை அணைக்க வேண்டும் என்பதற்காகவே, அக்கலவரத்தை காங்., முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறதா?
எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் எனும் கணக்கில், அரசியல் செய்யாதீர்கள் கார்கே!
ஜாமின் தேவையா?
எம்.கிறிஸ்டோபர்,
திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு நிர்வாகத்தில்,
அரசியல் கட்சிகளால் உருவான, புரையோடி போயுள்ள ஊழலை ஒழித்துக் கட்ட,
'லோக்பால்' மசோதாவை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன், டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர், சமூக ஆர்வலர் அன்னா
ஹசாரே!
அந்த உண்ணாவிரதப் பந்தலில், பத்தோடு பதினொன்றாக உட்கார்ந்திருந்தவர் தான், தற்போதைய ஆம் ஆத்மி கட்சி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால்!
உண்ணாவிரதத்தை
முடித்து, அன்னா ஹசாரே மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்பியதும்,
என்னமோ தானே அவரின் பிரதி நிதி போன்று, ஊழலை ஒழிக்க, துடைப்பத்தை சின்னமாக
வைத்து, ஆம் ஆத்மி என்ற கட்சியை துவக்கினார், கெஜ்ரிவால்!
'அன்னா
ஹசாரேவின் அருகில் அமர்ந்திருந்த ஆளாயிற்றே... கட்சி சின்னமாக துடைப்பத்தை
வேறு வைத்துள்ளார்... உண்மையில் ஊழலை ஒழித்து விடுவார்' என்று நம்பி,
டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து, அரியணையில்
அமர்த்தி அழகு பார்த்தனர், டில்லி மக்கள்.
ஆனால், எந்த ஊழலை ஒழிப்பதாக சொல்லி, கட்சி துவக்கினாரோ, அவரும், அவரது அடிப்பொடிகளும் ஊழலின் உறைவிடமாக திகழத் துவங்கினர்.
இதைக் கண்டித்து, அன்னா ஹசாரே எழுதிய எந்த கடிதத்தையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை, கெஜ்ரிவால்!
'டில்லியில்
ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஊழல் புகாரில் சிக்கி, சிறைக்கு
சென்ற பெருமைக்கு உரியவர்கள். முதல்வர், துணை முதல்வர் என யாருமே இதில்
தப்பவில்லை. இது போன்ற மிகப்பெரிய ஊழல், எங்குமே நடந்தது இல்லை' என்கிறார்,
பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுதான்ஷு திரிவேதி.
டில்லியின் பாதுகாப்பு மத்திய அரசின் வசம் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, திஹாருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், நீதிமன்றமோ, அவர்களுக்கு ஜாமின் வழங்கி, ஜெயிலில் இருந்து வழியனுப்பி வைத்து விடுகிறது.
தப்பு செய்தவருக்கு தண்டனை கொடுக்காமல், ஜாமின் கொடுத்து வெளியே அனுப்பினால், ஊழல் குறையுமா இல்லை கூடுமா?
'நீதிமன்றங்கள் இருக்கும் வரை நமக்கு ஒரு கவலையும் இல்லை' என்று மீண்டும் ஊழலில் திளைக்க மாட்டார்களா?
ஜாமின் கொடுக்கும் முன் நீதிமன்றம் இதையும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்!
ஒப்புக்கொள்ள மனம் இல்லை!
அ.யாழினி
பர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சிறு
வயதிலிருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்; காரணம், என் அம்மாவுக்கு
அந்த நம்பிக்கை இருந்தது. அப்பாவுக்கு தெரியாமல் நாங்கள் கோவிலுக்கு
செல்வோம். பலமுறை உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளேன். இதுகுறித்து
அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று அவர்களிடம் சொல்லி விடுவேன்'
- இப்படி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியது யார் தெரியுமா...
ஈ.வெ.ரா.,வின்
பேரன் என்று சொல்லும், ம.நீ.ம., கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த
மகள் சுருதிஹாசன் தான். நாத்திகவாதிகளின் வாதம், அவர்கள் வாரிசுகளிடமே
எடுபடுவதில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.
அப்பா வழியில் நாத்திகப் பாதையில் செல்லாமல், ஆத்திக வழிக்கு வந்த சுருதிஹாசன், அதனால் அடைந்த பயன் என்ன?
அதையும் அவரே சொல்கிறார்...
'என்னிடம் துணிச்சல் இருப்பதற்கு காரணமே, தெய்வ நம்பிக்கை தான்; அது இல்லாமல் போயிருந்தால், நான் உடைந்து போயிருப்பேன்.
'கடவுள்
சக்தி தான் என்னை வழி நடத்துகிறது; நான் வளர வளர அச்சக்தியை என்னுள் உணர
ஆரம்பித்தேன். வளர்ந்த பின், அப்பாவுக்கு தெரிந்தே கோவிலுக்கு செல்கிறேன்!'
- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'கடவுள்
இல்லை; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி; கற்பித்தவன் முட்டாள்' என்று
கோவிலுக்கு எதிரே எழுதி வைத்தாலும் கூட, அவற்றை, முட்டாள்களின் மூட வாதம்
என புறந்தள்ளி, இளைய தலைமுறை ஆன்மிகத்தின் பாதையில் செல்கிறது என்றால்,
நாத்திகம் இங்கே வலுவிழந்து வருகிறது என்று அர்த்தம்.
அதை ஒப்புக்கொள்ளத்தான் இங்கு ஒரு கூட்டத்திற்கு மனம் இல்லை!

