தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பஞ்சபூதங்களுடன் கூட்டணி வைக்கும் சீமான்!

பஞ்சபூதங்களுடன் கூட்டணி வைக்கும் சீமான்!

பஞ்சபூதங்களுடன் கூட்டணி வைக்கும் சீமான்!


PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலின்போது, ஈரோட்டை, 'பெரியார் மண்' என்று தி.மு.க.,வினர் சொல்ல, 'அந்த பெரியாரே மண் தான்' என்று முழங்கியவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பதிலுக்கு தி.மு.க., அவர் மீது அனைத்து காவல் நிலையங்களிலும், எப்.ஐ.ஆர்., போட்டு ஊர் ஊராக நீதிமன்றம் ஏற வைத்தது. சம்மன் அனுப்பி, வீட்டு பாதுகாவலரை அடித்து, அள்ளிக் கொண்டு போய், 'லாக்- - அப்'பிலும் போட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணன் முத்துவின் மரணத்தை ஒட்டி, துக்கம் விசாரிக்க முதல்வர் இல்லம் சென்ற சீமான், அச்சந்திப்பை, 'அரசியலுக்கு அப்பாற்பட்ட அன்பு' என்று கூறி வர்ணித்தார்.

அதேநேரம், அச்சந்திப்பிற்கு பின் சீமான் அடியோடு மாறி விட்டார். மக்கள் பிரச்னைகளுக்கு போராடுவதற்கு பதில், ஆடு - மாடுகளுக்கு மாநாடு போட்டவர், சமீபத்தில், மரங்களைக் கட்டித் தழுவி முத்தமிட்டு அவற்றுடன் பேசினார். அடுத்து, ஒரு கம்பை நட்டு அதன் உச்சியில் ஏறி, காற்றோடு பேசினாலும் பேசுவார் போலும்!

தன், 50-வது திருமண நாளை முன்னிட்டு, கூட்டணிக்கட்சித் தலைவர்களை எல்லாம் தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்தளித்த முதல்வர், தேர்தல் செலவுகளுக்கு தேவையான பண உதவியை எல்லாருக்கும் வழங்குவதாக வாக்களித்துள்ளாராம்.

அவ்வகையில், சீமானையும் தன் பண வலையில் வீழ்த்தி விட்டாரோ என்னமோ, ஆவி அமுதா என்பவர் ஆவிகளுடன் பேசுவது போல், சீமானும் ஆடு, மாடு, மரம் மட்டைகளுடன் பேசி வருகிறார்.

இப்படியே இவர் பஞ்சபூதங்களுடன் கூட்டணி பேச்சு நடத்திக் கொண்டிருந்தால், கடந்த பார்லிமென்ட் தேர்தலில் வாங்கிய, 8 சதவீத ஓட்டுகளும் கைவிட்டுப் போவது நிச்சயம்!



பன்னீர்செல்வத்தின் தி.மு.க., பாசம்! டி.ஈஸ்வரன், சென்னையி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த ஜூலை மாதம் சென்னை அடையாறில் நடைபயிற்சி யின் போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின், மீண்டும் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திலும், பின், நடைபயிற்சியின் போதும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்டாலின் - பன்னீர்செல்வம் சந்திப்பு திடீரென்று நடந்ததில்லை; திட்டமிட்டபடிதான் நடக்கிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, ஒருமுறை ஆழ்வார்பேட்டை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பின்னால் வருவதை, தன் கார் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு, காரை ஓரங்கட்டச் சொன்னார். ஸ்டாலின் காருக்கு வழிவிட்ட பின், தன் காரை எடுக்கச் சொன்னார், பன்னீர்செல்வம்.

அப்போது இருவரும் வணக்கம் சொல்லிக் கொண்டனர். இது எப்படி சாத்தியமாகும்? முதல்வர் கான்வாய் சாலையில் செல்கிறது என்றால், வேறு எவருடைய வாகனத்துக்கும் அனுமதியில்லை. இது பாதுகாப்பு நடைமுறை. ஆக, இருவரின் சந்திப்பு திடீரென்று நடக்கவில்லை; திட்டமிட்டபடிதான் இதுவரை நடந்துள்ளது.

அதுமட்டுமல்ல... தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த முன்னணி தலைவர்களை எல்லாம் விட்டு விட்டு, பன்னீர்செல்வத்தை மட்டும் அழைத்து விடைபெற்று சென்றார்.

அப்போது பன்னீர்செல்வம் பவ்யமாக சென்றது வியப்பாக இருந்தது. ஸ்டாலின் மீது பன்னீர்செல்வத்துக்கு அப்படியென்ன அளவு கடந்த பாசம்?

காரணம் உண்டு...

கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரு-க்கு புகழாரம் சூட்டும் நிகழ்வு சட்டசபையில் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் பேசியபோது, 'என் தந்தை ஓரக்கார தேவர், கருணாநிதி மீது மிகவும் பக்தி கொண்டவர். அவர் எழுதிய, மனோகரா திரைப்பட வசனம் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். அந்த வசன புத்தகத்தை எப்போதும் தன் பையில் வைத்திருப்பார். அதை நான் எடுத்து படித்து மனப்பாடம் செய்வேன்' என்றார்.

கருணாநிதியை புகழ்ந்து பேச எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது, பன்னீர்செல்வம், தன் தந்தைக்கு பிடித்த மனோகரா வசனம் குறித்து ஏன் பேசினார் என்பது தெரியுமா... பொதுவாக, அக்கால கருணாநிதி பற்றா ளர்கள், தங்கள் ஆண் வாரிசு களுக்கு அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன், கதிரவன் என, பெயர் சூட்டுவது வழக்கம்.

மனோகரா திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனின் தங்கைக்கு பிரசவ வலி ஏற்படும். வயதான மூதாட்டி ஒருவர் பிரசவம் பார்ப்பார்.

குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன் சிவாஜியின் அப்பா, பதற்றமாக ஓடிவந்து, 'என்னாச்சு' என்பார். அதற்கு மூதாட்டி சிரித்துக் கொண்டே, 'பிறந்துட்டான் பேரன் பன்னீர்செல்வம்' என்பார்.

கடந்த 1951ல் ஓரக்கார தேவர் தன் மகனுக்கு சூட்டிய குலதெய்வ பெயரான இசக்கி முத்து என்பதை, 1954ல் பன்னீர்செல்வமாக மாற்றினார்.

இச்செய்தி ஜெய லலிதாவுக்கு தெரியாது; கருணாநிதிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

அதனால்தான் சட்டசபையில் தான் முதல்வராக இருந்த போது ஒருமுறை, 'அ.தி.மு.க.,வில் எனக்கு பிடித்த ஒரே ஒரு தலைவர் பன்னீர்செல்வம் மட்டும்தான்' என ஆணித்தரமாக சொன்னார், கருணாநிதி. இதுதான் ஸ்டாலின் மீது தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் பாசம் காட்டுவதற்கான கதை.

இந்த பாசம் தான், சமீபத்தில், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஸ்டாலினை சந்தித்து விட்டு வெளியே வந்த பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள், 'ஜெயலலிதா கூறியது போல் தி.மு.க.,வை தீயசக்தியாகத்தான் பார்க்கிறீர்களா?' என்று கேட்டபோது, 'அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்' என்று சொல்ல வைத்தது.

தி.மு-.க.,வை, 'தீயசக்தி' என்று எம்.ஜி.ஆர்., சொன்னதை வைத்தே, தன் வாழ்நாள் இறுதிவரை அக்கட்சியை எதிர்த்து வந்தவர் ஜெயலலிதா.

அவரால் உச்ச பதவியை அடைந்த பன்னீர் செல்வம், தி.மு.க., மீது பாச வலை விரிக்கிறார்.

இனி, அவர் பா-.ஜ., கூட்டணி, அ.தி.மு-.க., உரிமை கோரும் போராட்டம், நடைபயணம், மாநாடு நடத்த தேவையில்லை. தன் தந்தை ஓரக்கார தேவர் எப்படி கருணாநிதியின் மீதும் பக்தியும், பாசமும் கொண்டிருந்தாரோ, அதேபோல் பன்னீர்செல்வ-மும் தி.மு.க.,வில் சேர்ந்து தன் பாசத்தை காட்டட்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us