தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?

நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?

நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே?


PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் வென்றால், 'ஜனநாயகம் வென்றது' என்பதும், தோற்றால், 'பணநாயகம், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம் வென்றது' என்பதும், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் கொள்கை.

இக்கொள்கையின்படி, 2019 பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் தோற்றபோது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது குற்றம் சுமத்தினார், அக்கட்சியின் எம்.பி., ராகுல்.

அடுத்து, 2024 பார்லிமென்ட் தேர்தலில் தோற்றபோது, எவ்வளவு காலத்திற்கு அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது என்று யோசித்து, 'ஓட்டு திருட்டு' என்ற வார்த்தையை பயன்படுத்தினார், ராகுல்.

தான் அறிமுகப்படுத்திய வார்த்தையை பிரபலபடுத்தவும், தேர்தல் ஆணையத்தின் பெருமையை சீர்குலைக்கவும் என்னென்னவோ குஸ்தி எல்லாம் செய்து பார்த்து விட்டார்; பலன்தான் ஒன்றும் இல்லை!

'வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்காதே. ஓட்டு திருட்டு என்ற புகாரை, உரிய ஆவணங்களோடு மனுவாகபோடு...' என்று தேர்தல் கமிஷன் சொன்னதும், நைசாக ஜகா வாங்கிவிட்டார்.

இப்போது, பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், 'போலி வாக்காளர்கள்' என்ற கான்செப்டை கையில் எடுத்துள்ளனர், இண்டியா கூட்டணியினர்.

'ராகுலே தொடர்ந்து குற்றம் சுமத்தி கொண்டிருந்தால், மக்களுக்கு வெறுப்பு வந்து விடும்; நம்ப மாட்டார்கள்' என்று கருதி, ஒரு மாறுதலுக்காக மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை விட்டு கூற வைத்துள்ளனர்.

அவரும், 'மஹாராஷ்டிராவில், 96 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரி செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது. அப்படி நடந்தால், அது வாக்காளர்களை அவமதிப்பதற்கு சமம்' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பஞ்சாயத்து தேர்தல் முதல், பார்லிமென்ட் தேர்தல் வரை, தேர்தலுக்கு முன் வாக்காளர்களின் இறுதி பட்டியலின் பிரதியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிக்கும் கொடுக்கிறது, தேர்தல் ஆணையம்.

அப்படி கொடுத்த பட்டியலில் பிழை இருந்தால், கட்சிகள் நேரடியாக, நீதிமன்றத்தை நாடி, தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டியது தானே... அதை விடுத்து, முச்சந்தியில் மேடை போட்டு, ஏன் கூப்பாடு போட வேண்டும்?

நேர்வழியில் செல்பவனுக்கு ஒரே வழி; குறுக்கு வழியில் செல்ல நினைப்பவனுக்கு கோடி வழிகள் என்பது போன்று உள்ளது, இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள்!



தாயுமானவர் திட்டமா ஏமாற்றும் வேடமா? கே,மணிவண்ணன், நடு பா ளையம், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மாதம், தமிழக அரசு, 'தாயுமானவர் திட்டம்' என் ற திட்டத்தை துவக்கியது.

இத்திட்டத்தின்படி, 70 வயது கடந்தோர் மற்றும் மாற்றுத் திறளானிகைகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட் கள் வழங்குவதாக கூறினர். இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் என் இடது கால், முட்டிக்கு கீழ் நீக்கப்பட்டது.

அதனால், 'தாயுமானவர்' திட்டத்தின்படி ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக, சம்பந்தப்பட்ட துறையை தொடர்பு கொண்டு, 'நான் ஒரு மாற்றுத் திறனாளி; எனக்கு குடிமை பொருள் வழங்க வேண்டும்' என்று கேட்டேன்.

அவர்கள், 'உங்களுக்கு எத்தனை மகன்கள்... அவர்கள் எங்குள்ளனர்?' என்று கேட்டனர்.

'இரண்டு மகன்கள்; அவர்கள் வெளியூரில் உள்ளனர்...' என்றேன்.

அவர்கள் உடனே, 'ஏற்கனவே மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் தான் இத்திட்டம் பொருந்தும்' என்றனர்.

'அப்படியென்றால், நான் தற்போது வைத்துள்ள ரேஷன் கார்டை மாற்றி தாருங்கள் அல்லது புதிய கார்டு தாருங்கள்...' என்றேன்.

'அப்படியெல்லாம் செய்ய முடியாது. வேண்டுமானால், ஒரு விண்ணப்பம் எழுதி, அதனுடன் ஆதார் மற்றும் ஊனத்திற்கான மருத்துவ சான்றிதழ் இணைத்து தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வையுங்கள்...' என்றவர்கள், 'இத்திட்டத்தின்படி, பிள்ளைகள் இருந்தால், அதற்கான சலுகைகளை பெற முடியாது' என்றனர்.

'பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்ன செய்வர்?' என்று கேட்டேன். 'அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்...' என்றனர் அலட்சியமாக!

உண்மையில் இது, முதியோர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவும் திட்டமாக தெரியவில்லை; வரும் சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி ஓட்டுக்காக, மக்களை ஏமாற்ற போடும் வேடமாகத் தான் தெரிகிறது!



குற்றங்கள் குறையும்! த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: பீஹாரில் மதுவினால் குடும்ப வன்முறைகளும், கள்ளச்சாராய உயிரிழப்புகளும் ஏற்பட்ட நிலையில், 2016 சட்டசபை தேர்தலில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று அதிரடியாக அறிவித்தார், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார். சொன்னது போல், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.

இதன் காரணமாக, அம்மாநிலத்தில், குடும்ப வன்முறை தொடர்பாக, 21 லட்சம் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ ஆய்வு இதழான, 'லான்செட்' ஆய்வு கடந்தாண்டு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், பீஹாரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 'வரும் சட்டசபை தேர்தலில், ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மது விற்பனை மீதான தடையை நீக்குவோம். மதுவிலக்கு காரணமாக, 28,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார், அக்கட்சியின் தேசிய தலைவர் உதய்சிங்.

மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வருவது, அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், வருவாய் இழப்பை சமாளித்து, 2016 முதல் மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறார், நிதிஷ்குமார்.

ஆனால், சில நுாறு ஓட்டுகளுக்காக, 'மதுவிலக்கை ரத்து செய்வோம்' என்று கூறியுள்ளார், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின், தேசிய தலைவர்.

பீஹார் மட்டுமல்ல; எந்த மாநிலமாக இருந்தாலும், மது விற்பனையை ஊக்குவிக்கும் அரசியல் கட்சிகள், நிராகரிக்கப்பட வேண்டும்.

ஏனெனில், தமிழகத்தில், 2021 ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், 'மதுவால் இளம் விதவைகள் அதிகம் உருவாகி விட்டனர்' என்று அங்கலாய்த்த தி.மு.க., தலைவர்கள், ஆட்சிக்கு வந்ததும், மதுவிற்பனையை அதிகரித்தனரே தவிர, மதுவிலக்கை அமல்படுத்தவில்லை.

விளைவு... நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

எனவே, மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சிகளுக்கே மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஜன் சுராஜ் போன்று மதுவை வைத்து, தங்கள் வாழ்வை வளப்படுத்த நினைக்கும் கட்சிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்பினால் தான், குடும்ப வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் குறையும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us