தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அடுத்த அஸ்திரம், 'நோபல்' பரிசு!

 அடுத்த அஸ்திரம், 'நோபல்' பரிசு!

 அடுத்த அஸ்திரம், 'நோபல்' பரிசு!


PUBLISHED ON : ஜன 23, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2026 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஸ்.ராஜசேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை வழங்கிய கையோடு அதை பிரமாண்டமாக போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகள், பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தி, அதற்கு ஒரு பாராட்டு விழாவும் நடத்தி, பூரித்து புளகாங்கிதமடைவதில் திராவிட மாடல் அரசுக்கு இணையாக, நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது.

இதுவரை மத்திய அரசின் திட்டங்களின் மீது மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்த திராவிட மாடல், 'லேட்டஸ்டாக' சாகித்ய அகாடமி விருதுக்குள்ளும், தன் தலையை நுழைத்துள்ளது.

'இந்திய மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

விருதோ, வெங்காயமோ எதுவோ வழங்கிக் கொள்ளட்டும்... அது அரசின் பாடு; எழுத்தாளர்களின் பாடு.

இப்போது, அதுவல்ல பிரச்னை... 'இந்திய மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு' என்று குறிப்பிட்டிருப்பது தான் பிரச்னையே!

ஏனெனில், கடந்த 60 ஆண்டுகளாக, தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர, வேறு எந்த மொழியும், பள்ளி -கல்லுாரிகளில் கற்பிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட ஓர் அரசு தேர்வில் கூட 84,000 பேர், தமிழ் மொழியிலேயே தேர்ச்சி அடையவில்லை. அவ்வளவு ஏன்... மாநில முதல்வரே துண்டுச் சீட்டை வைத்து தான் தமிழை எழுத்துக்கூட்டி வாசித்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த லட்சணத்தில், மற்ற மொழிகளுக்கு விருதாம்!

சாகித்ய அகாடமி, மொத்தம், 24 இந்திய மொழிகளை அங்கீகரித்து, அம் மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்குகிறது.

ஆனால், தமிழையே பிழையில்லாமல் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாதவர்கள் இருக்கும் மாநிலத்தில், ஏனைய, 24 இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை எப்படி தேர்ந்தெடுப்பர்?

மொத்தமாக வெளிவந்திருக்கும் படைப்புகளின் பெயர்களை துண்டு சீட்டில் எழுதி, மடித்து குலுக்கி, அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிப்பரோ?

சாகித்ய அகாடமியின் உச்சந்தலையிலும் கை வைத்தாயிற்று; அடுத்த அஸ்திரமாக,'நோபல் பரிசை' கையில் எடுத்துக்கொண்டு, அதை அளிக்கப் போவதாக திராவிட மாடல் முதல்வர், 'அளந்து' விடப் போகிறார்; நாமும் அதைப் பார்க்கத் தான் போகிறோம்!

lll

யாருக்கு ஓட்டு... ஆராய்ந்து போடுவோம்! ஜி.சூரியநாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயகத்தில் மக்கள் ஆட்சி, கட்சிகள் வாயிலாகத் தான் செயல்படுத்தப்படுகிறது. சில நேரங்களில், கட்சிகளுக்கு கிடைக்கும் வெற்றி, நேரடியாக அவர்களுக்கு கிடைத்ததாக அல்லாமல், வேட்பாளர்களை முன்னிறுத்தியே நிர்ண யிக்கப்படுகின்றன.

அது போலவே, சில வேட்பாளர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும், அவர்களின் சொந்த செல்வாக்கால் வெற்றி பெற வாய்ப்பு இல்லாதபோது, அவர்கள் சார்ந்த கூட்டணி வாயிலாக வெற்றி கிடைத்து விடுகிறது.

இந்த இரண்டாவது வகை வெற்றியை தான், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் இத்தனை காலமாக அறுவடை செய்து வருகின்றன; சமீபத்திய சேர்க்கையாக விடுலை சிறுத்தைகள் போன்ற ஜாதி கட்சிகள்!

வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதி, எல்லாருக்கும் பொதுவானவராக திகழ வேண்டும்; அதுதான் ஜனநாயக மரபு. இத்தனை ஆண்டுகளாக, அம்மரபை மீறியவர்கள் யார் யார் என்பதை, மக்கள் நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும். வரும் தேர்தலில், கோட்டை விட்டு விடக் கூடாது.

ஹிந்துக்களின் புனித தலங்களில் முதன்மையானது, உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம். அந்த தொகுதியின் எம்.பி., ஹிந்துக்களையும், அவர்களின் கோவில்களையும் பொதுவெளியில் ஏசுவதை, மதங்களைத் தாண்டி, மக்கள் எதிர்க்க வேண்டும்.

ஓர் அரசியல்வாதி, 'மகர சங்கராந்தி என்ற பொங்கல் விழாவை, வணக்கமும், வேண்டுதலும் இல்லாத விழாவாக மாற்ற வேண்டும்' என்கிறார். அதாவது, 'சூரியனை கும்பிடக் கூடாது; உழவுக்கு வந்தனம் செய்யக் கூடாது' என்பது, அதன் பொருள்.

கடவுள்களாக நாம் வழிபடும் ராமனையும், முருகனையும், கிருஷ்ணனையும் சிலருக்குப் பிடிக்காது. அந்த சிலரைத் தான், இவ்வளவு நாட்கள் நாம் ஓட்டு போட்டு அரியணையில் அமர்த்தியுள்ளோம்; அவர்களோ, நம் முகத்தில் எட்டி உதைக்கின்றனர்.

ஹிந்துக்கள் தீபம் ஏற்ற தடை, கந்துாரி விழாவிற்கு ஆதரவு என்பது போன்ற நிலைப்பாட்டை எடுக்கும் கட்சியுடன் இனியும் நாம் மல்லுக்கட்ட வேண்டுமா?

எனவே, 'தீபமும் ஏற்றுவோம், மெழுகுவர்த்தியும் ஏற்றுவோம், கந்துாரியும் செய்வோம்' என்று எவர் வாக்குறுதி தருகின்றனரோ அவர்களுக்கே நம் ஓட்டு என்போம்!

lll

தமிழர்களை கடன்காரர்களாக மாற்றும் கழகங்கள்! செ.சாந்தி, மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ரேஷன் கார்டு உள்ள அனைத்து குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் மாதந்தோறும், 2,000 ரூபாய் செலுத்தப்படும், நகர பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், ஐந்து லட்சம் மகளிருக்கு, 25,000 ரூபாய் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் என்று அள்ளி விட்டுள்ளார்.

கடந்த 2021ல் அ.தி.மு.க., ஆட்சியின் முடிவில், தமிழக அரசின் கடன், 5.18 லட்சம் கோடி ரூபாய். அது, தி.மு.க., ஆட்சியில், 9.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இக்கடன்களுக்காக நாள் ஒன்றுக்கு, 170 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறது, தமிழக அரசு.

இரு கழக ஆட்சியாளர்களும் இத்தனை லட்சம் கோடி ரூபாய் கடன்களை பெற்று, வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்தனரா என்றால், இல்லை. மாறாக, கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை அறிவித்து, கடன் வாங்கி செலவு செய்து வருகின்றனர்.

இப்படியே போனால், 2026 தேர்தலுக்கு பின், எவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழக அரசின் கடன், 15 லட்சம் கோடி ரூபாயாகி விடும்.

இவர்கள் வாங்கி வைத்திருக்கும் கடனை, தி.மு.க.,வினரோ, அ.தி.மு.க.,வினரோ தங்கள் சொத்துக்களை விற்று அடைக்கப் போவதில்லை. அக்கடன் வரிப்பணமாக மக்கள் தலையில் தான் விடியப் போகிறது.

தமிழர்களை குடிகாரர்களாக ஆக்கியது போதாதென்று, கடன்காரர்களாக்கி, எப்போதும் கையேந்தும் நிலையிலேயே வைத்திருந்தால் தான், அரசியல் செய்ய முடியும் என்று இரு கழகங்களும் முடிவு செய்து விட்டன என்பது நன்றாக தெரிகிறது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us