/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உளுத்துப் போனது, 'நீட்' தேர்வு ரத்து நாடகம்!
/
உளுத்துப் போனது, 'நீட்' தேர்வு ரத்து நாடகம்!
PUBLISHED ON : பிப் 14, 2026 01:24 AM

பி.ஜாகீர் உசேன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த நான்கு ஆண்டுகளாக, நீட் தேர்வை வைத்து தி.மு.க., செய்த தேர்தல் அரசியல், அவதுாறுகள், வெற்று வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போன நிலையில், தற்போது, அடுத்தகட்ட முயற்சியாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கப் போகிறதாம் அக்கட்சி.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது நீட் தேர்வு; இது தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தலைமை நீதி பதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென் மற்றும் அனில் தவே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அதில், இரண்டு நீதிபதிகள், நீட் தேர்வு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி, அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்தனர். மற்றொரு நீதிபதியான அனில் தவே, நீட் தேர்வு நடத்த வேண்டுமென மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில் நீட் தேர்வு தடை செய்யப்பட்டது.
ஆனால், இதை எதிர்த்து காங்., மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் தான், மோடி அரசு பதவியேற்றது.
பின், அவ்வழக்கு, 2016, ஜன., 21ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு, 2016, ஏப்., 11ல் நீட் தேர்வு கட்டாயம் என்றும், நீட் தேர்வை இந்த கல்வியாண்டிலே நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அதன்படி, 2016ல், அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் சட்டப் பிரிவில், புதிதாக, '10-டி' என்ற சட்டப் பிரிவை கொண்டு வந்து, பின், அதை நிரந்தர சட்டமாகவும் பார்லிமென்டில் நிறைவேற்றியது.
அன்று, அந்த மசோதாவுக்கு, பா.ஜ., - காங்., - கம்யூ., - சமாஜ்வாடி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க., - தி.மு.க., மட்டுமே கடுமையாக எதிர்த்தன.
காரணம், மற்ற மாநிலங்களை விட, தமிழக அரசியல்வாதிகள் தான் அதிக மருத்துவ கல்லுாரிகளை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் தற்காலிக விலக்கு கோரி, 2016ல் அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
ஆனாலும், ஓராண்டு மட்டுமே அதை அனுமதிக்க முடியும் என, உச்ச நீதிமன்றம் அப்போதே திட்ட வட்டமாகச் சொல்லி விட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சிக்கு வந்த பழனிசாமி அரசு, மீண்டும் நீட் தேர்வில் விலக்கு கோரி, 2017ல் வழக்கு தொடர்ந்தது.
அதில் தலைமை நீதிபதி கெஹர், 'நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது' என்றும், 'இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளில் தெளிவுபடுத்திய பிறகும், ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அவசர சட்ட வரைவை இயற்றியது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பினார்.
அதனால், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, 2017 பிப்.,ல் இரண்டு அவசரச் சட்டங்கள் சட்டசபையில் இயற்றப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டு, பின், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டது.
இப்படி தொடர்ந்து போராடியும், சாதகமான தீர்ப்பை பெற முடியாததால், அரசு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் வைத்து, ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லுாரிகளை பெற்றதோடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பினார், அன்றைய முதல்வர் பழனிசாமி.
கவர்னர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஆன நிலையில், சட்டப்பிரிவு 162 -ஐ பயன்படுத்தி அதிரடியாக அரசாணை வெளியிட்டார்.
அன்று, பழனிசாமி கொண்டு வந்த, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை, '10 சதவீதமாக மாற்ற வேண்டும்' என்று குரல் எழுப்பிய அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், இன்று ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடிவடையப் போகும் நிலையிலும், அதுகுறித்து பேசாமல், கள்ள மவுனம் சாதிக்கிறார்.
உண்மையில், அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், 10 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்க வேண் டும். அதைவிடுத்து, இந்தியா முழுமைக்கும் உள்ள ஒரு பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி போராடு வதாக கூறுவது நாடகமின்றி வேறென்ன?
உளுத்துப் போன, 'நீட்' விவகாரத்தை வைத்து இனியும், தி.மு.க., நாடகம் நடத்த முடியாது!
இலக்கை அடைய 'விசிலை' ஊதட்டும்!
கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், 1967-க்கு பின், இரு திராவிடக் கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
காரணம், இக்கட்சிகளுக்கு மாற்றாக, எந்தவொரு கட்சியும் தனித்துவம் காட்டி, தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் கூட, திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறித்தான் தேர்தல்களை சந்தித்து வருகின்றன.
அவ்வரிசையில், தற்போது பா.ஜ.,வும் பயணித்து வருகிறது.
இதனால் தான், தங்களை விட்டால் தமிழகத்தை ஆட்சி செய்ய எவரும் இல்லை என்ற மமதையில், இரு திராவிடக் கட்சியினரும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து, ஊழல் செய்து, மெகா கோடீஸ்வரர்களாக வலம் வருகின்றனர்.
தற்போது, இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன.
வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறிவிட்டார், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அதேநேரம், தன்னுடன் கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறினாலும், தற்போது வரை எந்தக் கட்சியும் அவருடன் கூட்டுசேர முன்வரவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், 'நான் யாருக்கும் அடிமையாக இருக்க அரசியலுக்கு வரவில்லை; கூட்டணிக்கு யாரும் வராவிட்டால் தனித்து போட்டியிடுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இருக்காது' என்று கூறியுள்ளார், விஜய்.
அவர் கட்சியில் இணையும் மாற்று கட்சியினர், ஊழல் செய்வதில் பிஎச்.டி., பட்டம் வாங்கியவர்கள். 'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இராது' என்பது போல், இவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு, எப்படி ஊழல் இல்லாத ஆட்சி தர முடியும்?
எனவே, தனித்து, 234 தொகுதிகளிலும் விஜய் தன் விசிலை ஊதட்டும்; அதேநேரம், நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் செய்த தவறுகளை செய்யாமல், சீமானை போன்று தனித்துவத்துடன், தன் அரசியல் பயணத்தை விஜய் தொடர வேண்டும்.
வெற்றியோ, தோல்வியோ என் வழி தனி வழி என பயணித்தால், இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி இலக்கை அடையலாம்!

