PUBLISHED ON : மார் 05, 2026 02:13 AM

மக்கள் ஏமாறுவரா?
முனைவர்
மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'எந்த பூச்சாண்டிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்' என்கிறார் தமிழக
முதல்வர்; 'ஈ.டி.,க்கும் பயமில்லை; மோடிக்கும் பயமில்லை' என்கிறார் அவரின்
புதல்வர், உதயநிதி.
இப்படி இவர்கள் பேசுவதற்கு, இலவசம் என்ற
பெயரில் அள்ளிவிட்டுள்ள பணம் ஒரு காரணமாக இருந்தாலும், உண்மையில்,
தைரியசாலி போல் தங்களை காட்டிக் கொள்ளும் பயந்தாங்கொளித்தனமே இந்த
உதாருக்கு காரணம்.
மனோதத்துவப்படி, உள்ளுக்குள் அதிகம் பயப்படுவோர், வெளியே தைரியசாலிபோல நடிப்பர்.
அதன்படி, பணத்தைக் காட்டி ஓட்டுகளை அள்ளி விடலாம் என்ற இலவச, 'பார்முலா'
டானிக் இருந்தாலும், இம்முறை நடிகர் விஜயின் வரவு, கூட்டணி கட்சிகள்
கொடுக்கும் குடைச்சல், திருப்பரங் குன்றம் மலை தீப விவகாரத்தில்
ஹிந்துக்கள் எதிர்ப்பு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நாடெங்கும் உள்ள
சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்,
காலியாகும் கஜானா என்று, பல பிரச்னைகளால் வெற்றி வாய்ப்பு குறித்த கவலை,
தி.மு.க.,விற்கு மனதில் உள்ளது.
இந்த அச்சத்தின் விளைவு தான்,
ஐந்தாண்டுகளாக எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தேர்தல் நெருங்கும்
நேரத்தில் விதவிதமான திட்டங்களை அறிவிக்க காரணம்.
சாகப்போற நேரத்திலே, 'சங்கரா சங்கரா' என்பது போல், ஆட்சி முடியும் நேரத்தில், திட்டங்களை அள்ளி விடுகின்றனர்.
ஒரு படத்தில் தமாஷ் நடிகர் கவுண்டமணி, 'அடே கூமுட்டைத் தலையா... நீ வீடு
வீடா போய் அண்ணன் நல்லவர், வல்லவர், கெட்டிக்காரர் என்று எல்லார்கிட்டேயும்
சொல்லணும்டா' என்று நடிகர் செந்திலிடம் கூறுவார்.
அதுபோல், இப்போது வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர், உடன்பிறப்புகள்.
தேர்தல் அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எதிர்க்கட்சிகளுக்கு சவால்
விட்டு, தன்னை அச்சமற்றவராகக் காட்டிக் கொண்டிருந்தாலும், கெட்டிக்காரன்
புளுகு எட்டு நாளைக்கு என்பது போல், திராவிட மாடல் அரசின் லட்சணம் தான்
தெரிந்து விட்டதே... இனியும் மக்கள் ஏமாறுவரா என்ன?
அச்சமே கூட்டணிக்கு அச்சாரம்! கு.காந்திராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி. மு.க., - தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம் என, மூன்று கட்சிகளுடனும் கூட்டணி பேரம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க.,வை, கடைசியாக தி.மு.க., ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏற்கனவே, 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க., தோல்வி பயத்தில் கூடுதலாக, தே.மு.தி.க.,வையும் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுக ளாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, தங்கள் ஆட்சியின் செயல்பாடுகள், சாதனைகள் வாயிலாக மக்கள் ஆதரவை பெற்றிருக்கும் எனில், அக்கட்சி தங்கள் கூட்டணியில் இருக்கும் சிறு கட்சிகளை கழற்றிவிட்டு, தங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே முயலும்!
ஆனால், தங்கள் ஆட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதாலேயே, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், தே.மு.தி.க., தயவையும் நாடியுள்ளது.
தே.மு.தி.க.,விற்கு பெரிதாக ஓட்டு வங்கி இல்லை என்பதால், அக்கட்சி குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பெரிதாக கவலைப்படவில்லை.
மக்களின் மனநிலையை பார்க்கும் போது, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தியே நிலவுகிறது.
வரலாறு காணாத ஊழல் முறைகேடுகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, ரவுடிகள் வெறியாட்டம் என்று மாநிலத்தில் அமைதியற்ற நிலையே நிலவுகிறது.
இதுமட்டும் அல்ல; 2021 தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றப் படவில்லை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தி.மு.க., அரசு தங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக, அனைத்து தரப்பு மக்களும் எண்ணுகின்றனர்.
இதை ஸ்டாலினும் உணர்ந்து, தேர்தல் தோல்வி குறித்த அச்சமே, தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது!
ஆட்சி மாற்றம் அல்ல; அரசியல் மாற்றமே தேவை! எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய , 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு வாக்குறுதிகளையும், இலவசங்களையும் அள்ளி வீசுகின்றன.
தங்களால் நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தும், மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற, பொய்யான வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
கஜானா காலியாக உள்ளது என்று சொல்லிவிட்டு, எதை நம்பி இத்தனை இலவச திட்டங்களை அறிவிக்கின்றன?
ஆட்சிக்கு வந்ததும், இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி, அதில் முக்கால்வாசியை தங்கள் பெட்டிக்குள் போட்டு பூட்டிக் கொண்டு, நாய்க்கு எலும்பு துண்டு வீசுவது போல், கால்வாசி பணத்தை இலவச திட்டங்களுக்கு செலவு செய்கின்றன.
இத்திட்டங்களால் ஆட்சியாளர்களின் பணப்பெட்டி தான் நிரம்புகிறதே தவிர, மக்களின் வாழ்வில் விடியல் இல்லை. மாறாக, வீட்டுவரி, சொத்துவரி, மின்கட்டணம், பேருந்து கட்டணம் என்று அனைத்தையும் உயர்த்தி, அந்தக் கடன் சுமையை மக்கள் சுமக்க வேண்டும்.
என்னவொரு ஜனநாயக அயோக்கியத்தனம்?
திராவிட மாடல் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதில், எத்தனை லட்சம் ரூபாய் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிட்டுள்ளது என, ஓட்டுப் போடும் மக்களுக்கு கணக்கு கொடுத்தார்களா?
மக்கள் பேரில் வாங்கும் கடன்; பலவித வரிகளின் வாயிலாக மக்கள் அடைக்க இருக்கும் கடன். ஆனாலும், அதன் கணக்கு வழக்கை மக்கள் பார்வைக்கு வைக்காதது எத்த னை பெரிய திருட்டுத்தனம்?
இவ்விஷயத்தில் இரு திராவிட கட்சிகளும் ஒன்றை ஒன்று குறை கூறி குற்றஞ்சாட்டுகின்றனரே தவிர, மறைமுகமாக தங்களுக்குள் எழுதப்படாத ஓர் ஒப்பந்தம் போட்டு, 'எவர் ஊழல் செய்தாலும், அறிக்கை மட்டுமே கொடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்க கூடாது' என்பதில் தெளிவாக உள்ளன.
எனவே, தமிழகம் மேலும் மேலும் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றால், இன்றைய சூழலில் ஆட்சி மாற்றத்தை விட, அரசியல் மாற்றமே தேவை!

